Ajith - தலைக்கு ஏறிய கோபம்.. ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வீட்டுக்கு சென்ற அஜித் - என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Ajith Angry (அஜித்தின் கோபம்) கோபம் தலைக்கு ஏறியதால் கேரவனுக்கு சென்றுவருகிறேன் என்று கூறிவிட்டு அஜித் வீட்டுக்கு சென்ற சம்பவம் தெரியவந்திருக்கிறது.
தமிழ் திரையுலகின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்கப்பட்டுவந்த அஜித் தற்போது ஏகே. சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்குள் வந்து பல இடங்களில் அடிப்பட்டு தற்போது உயர்ந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார்.

பின்னணி இல்லாமல் முன்னணிக்கு வந்த அஜித்: சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்து திரையுலகில் நிலைப்பதே கடினம். அப்படி பின்னணி இருந்தும் சினிமாவுக்குள் வந்து காணாமல் போன ஹீரோக்களை கோடம்பாக்கம் நிறையவே பார்த்திருக்கிறது. ஆனால் அஜித்தோ யாரின் தயவும் இல்லாமல் திரையுலகுக்குள் வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் மிகவும் அடிபட்ட அஜித் தான் பட்ட அடிகளை படிகளாக மாற்றிக்கொண்டு முன்னேறியவர்.
ஆசை நாயகன் அஜித்: திரையுலகுக்குள் வந்த புதிதில் அஜித்தை வழிநடத்த யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரே கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் சில படங்கள் வெற்றியடைந்தன பல படங்கள் தோல்வியடைந்தன. இந்தச் சூழலில் இயக்குநர் வசந்த்தின் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து அவர் ஆசை நாயகன் ஆனார். தொடர்ச்சியாக அவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற ஹிட்டடிக்க தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் அஜித்.

அல்டிமேட் ஸ்டார் ஆன அஜித்குமார்: தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அஜித்துக்கு பக்கா கமர்ஷியல் ஹிட்டானது அவரது 25ஆவது படமான அமர்க்களம். இந்தப் படத்திலிருந்துதான் ஷாலினிக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. சரண் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாக அஜித் அல்டிமேட் ஸ்டார் ஆனார். இருப்பினும் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவரது கவனம் பல வழிகளில் போக மீண்டும் தோல்வி முகத்தை பார்த்தார்.
எவ்வளவு வந்தாலும் விடாத தல அஜித்: தோல்வி படங்கள் ஒரு பக்கம், விபத்து மறுபக்கம் என அஜித்தின் கரியர் ஊசலாடிய சமயத்தில்தான் வந்தது தீனா. ஏ.ஆர். முருகதாஸின் முதல் படமான தீனாவில் அஜித் முழுக்க முழுக்க கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார். அந்தப் படத்திலிருந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தல ஆனார். அதன் பிறகும் அஜித்திற்கு சில தோல்வி படங்கள் அமைந்தன. இருப்பினும் பில்லா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.
ஏகே அஜித்குமார்: பில்லா படத்திற்கு பிறகு அசல், ஏகன் தோல்வி படங்களாக அமைய மங்காத்தா இண்டஸ்ட்ரி ஹிட்டானது. அவரது 50ஆவது படமான மங்காத்தாவிற்கு பிறகு அஜித்திற்கு பெரும்பாலும் ஹிட் படங்களே அமைந்தன. சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்த துண்வு படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அஜித்தின் மறுபக்கம்: பொதுவாக அஜித்குமார் யாருடைய பிரச்னைக்கும் செல்வதில்லை என்ற பிம்பம் இப்போது இருக்கிறது. ஆனால் ஆரம்பகட்டத்தில் அவர் மிகவும் கோபக்காரர் என்ரே பலராலும் கூறப்படுகிறது. அட்டகாசம் படத்தில்கூட பாடலுக்கு ஆட வந்த நடிகை, 'பேக்கப் பண்ணிடலாமா' என கேட்க கோபப்பட்ட அஜித், என் படத்துக்கு பேக்கப் சொல்ல நீங்க யாரு என கேட்டு அந்த நடிகையை பாதியிலேயே அனுப்பிய சம்பவம் சமீபத்தில் தெரியவந்தது.

அஜித்திடம் சொல்லாமல் நடந்த விஷயம்: இந்தச் சூழலில் அஜித்திடம் சொல்லாமல் ஒரு நடிகரை கமிட் செய்தால் அஜித் என்ன செய்வார் என்ற தகவல் தெரியவந்திருக்கிறது. அதாவது, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் படத்தில் பழம்பெரும் இயக்குநரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகனான கேஎஸ்ஜி வெங்கடேஷை புக் செய்திருக்கிறார்கள். இது அஜித்துக்கு தெரியாதாம்.
கேரவனுக்கு போய்ட்டு வரேன்: ஷூட்டிங் ஸ்பாட்டில் கேஎஸ்ஜி வெங்கடேஷை பார்த்த அஜித்திற்கு ஷாக்காம். ஏனென்றால் இரண்டு பேருக்கும் பல வருடங்களுக்கு முன்னர் ஏதோ பிரச்னை இருந்ததாம். வெங்கடேஷை எதிர்பார்க்காத அஜித் நாகரீகம் கருதி அவரிடம் கை கொடுத்து எப்படி இருக்கீங்க சார் என்று கேட்டாராம். அடுத்ததாக இரண்டு பேருக்குமான காட்சிகளை படமாக்க திட்டமிட்டபோது, ஒரு நிமிஷம் இருங்க கேரவனுக்கு போய்ட்டு வந்துடுறேன் என சொல்லிவிட்டு யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்கே சென்றுவிட்டாராம் அஜித். இதனை கண்டு படக்குழு ரொம்பவே அதிர்ச்சியடைந்துவிட்டதாம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











