Vijay - கொடநாட்டில் அவமானப்பட்ட விஜய்.. வெளியிடப்பட்ட வீடியோ.. கொந்தளித்த எஸ்.ஏ.சி.. என்ன நடந்தது?
சென்னை: Vijay (விஜய்) கொடநாட்டில் விஜய் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அதன் பிறகு வெளியான வீடியோதான் விஜய் - எஸ்.ஏ.சி மோதலுக்கு காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய்தான் இப்போது அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவர். குறிப்பாக ரஜினியின் இடத்தை அவர் பிடிப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாக திரை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகத்தான் விஜய்க்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் சம்பளத்தை கொட்டி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஏஸ்.ஏ.சி துணை: இப்படி விஜய்யின் கோட்டை பலமாக இப்போது இருந்தாலும் அதற்கான ஒவ்வொரு செங்கல்லையும் வைக்க ஆரம்பித்தவர் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்காக கதை கேட்பது, சிறந்த கதைகள் வைத்திருக்கும் இயக்குநர்களை விஜய் பக்கம் மடைமாற்றுவது என சந்திரசேகர் செய்த விஷயங்கள் ஏராளம். அவரது பக்கபலம் இருந்ததால்தான் எந்த வித சிக்கலும் இல்லாமல் சினிமாவில் விஜய்யால் நிலைக்க முடிந்தது என்று ஒருசிலர் கூறுவதுண்டு.
அரசியல் ஆசை: எந்த நேரத்தில் விஜய் குடும்பங்களை கவரும் ஹீரோவாக இருக்க வேண்டும், எந்த நேரத்தில் கமர்ஷியல் பாதையில் பயணிக்க வேண்டும் என எஸ்.ஏ.சி விஜய்யின் வளர்ச்சியை செதுக்கினார் என்றே சொல்லலாம். ஒருகட்டத்தில் கமர்ஷியலில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்த விஜய்க்குள் அரசியல் ஆசையை விதைத்தும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் ஐடியாவில்தான் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள் மன்றமாக மாறி இப்போது மக்கள் இயக்கமாக இருக்கிறது.
சிக்கலை சந்தித்த தலைவா: இப்படிப்பட்ட சூழலில்தான் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் விஜய் தலைவா படத்தில் நடித்தார். அப்போது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருந்தது. படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் நாளில் படத்துக்கு சிக்கல் எழுந்தது.
அதற்கு காரணம், தலைவா Time To Lead என்று இருந்ததுதான் என அப்போது கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அதிமுகவின் வெற்றிக்கு நாங்கள் அணிலாக உதவினோம் என சந்திரசேகர் கூறியதும் ஜெயலலிதாவுக்கு கோபம் வந்துவிட்டதாகவும் அதனால்தான் படத்துக்கு சிக்கல் எழுந்தது என்றும் கூறப்பட்டது.
கொடநாட்டில் நடந்தது என்ன?: இந்தச் சூழலில் தலைவா பட சமயத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தலைவா படத்துக்கு சிக்கல் வந்ததை அடுத்து விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக கொடநாட்டுக்கு விரைந்தனர். ஆனால் அங்கு அவர்களை சந்திக்காமல் ஜெயலலிதா அவமதித்துவிட்டாராம். இதனால் எஸ்.ஏ.சிக்கு ரொம்பவே வருத்தமாம்.
விஜய் வீடியோ: கொந்தளித்த எஸ்.ஏ.சி: கொடநாட்டிலிருந்து திரும்பிய விஜய் உடனடியாக மன்னிப்பு கேட்கும்தொனியில் ஒரு வீடியோவை வெளியிட்டார். ஆனால் அந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என எஸ்.ஏ.சந்திரசேகர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாராம். ஆனால் அதனை கேட்காமல் வீடியோ வெளியிடப்பட்டதாம். அசிங்கமும் பட்டு, எதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும் என கொந்தளித்துப்போனாராம் சந்திரசேகர்.
அப்போதிலிருந்துதான் விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் மோதல் ஆரம்பித்ததாக தகவல் வெளியாகியதாம். இதனை பத்திரிகையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். விஜய்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இன்றுவரை கருத்து வேறுபாடு நிகழ்வதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











