அந்த ஹீரோவே எனக்காக அலைந்தவர்தான்.. ஒரே போடு போட்ட சில்க் ஸ்மிதா.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அவர் இறந்து பல வருடங்கள் ஆனாலும் அவரது பிறந்தநாள், இறந்தநாள் உள்ளிட்டவைகளில் அவரை ரசிகர்கள் தவறாமல் நினைவுகூர்ந்துவருகிறார்கள். அடிப்படையில் இரக்க குணம் நிரம்பியிருந்த சில்க் சில ஏமாற்றங்களை சந்தித்ததாகவும் அதன் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சில்க் குறித்து பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
சில்க் ஸ்மிதா வினு சக்கரவர்த்தியால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். உடலில் மட்டும் கவர்ச்சி இல்லாமல் கண்கள், குரலில் கவர்ச்சி கொண்ட நடிகையாக வலம் வந்த அவருக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் அடிமையாக இருந்தது என்று சொல்லலாம். அதேபோல் அவருடன் நடிப்பதற்கும், நடனமாடுவதற்கும் ஹீரோக்களும் ஏங்கி தவித்தனர். தமிழ் திரையுலகம் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட திரையுலகங்களும் சில்க் கால்ஷீட்டுக்காக காத்திருந்தது.

உயிரிழப்பு: தொடர்ந்து பிஸியாக நடித்துவந்த அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சில ஏமாற்றங்களை சந்தித்தார். முக்கியமாக அவர் ஒருவரை தீவிரமாக காதலித்ததாகவும்; ஆனால் அந்த நபர் சில்க்கை ஏமாற்றிவிட்டதால் தற்கொலை செய்துகொண்டார் என்றும் பேசப்படுகிறது. இந்தச் சூழலில் சில்க் ஸ்மிதா குறித்து பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் சில விஷயங்களை தனது யூட்யூப் சேனலில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் சில்க் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்.
அவரே அலைந்தவர்தான்; அப்போது அவரது கால் ஹீரோவின் முகத்துக்கு நேராக இருந்தது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் சில்க்கிடம் உங்கள் கால் ஹீரோவின் முகத்துக்கு நேராக இருந்தது என்றார். உடனே சில்க்கோ, சார் அந்த ஹீரோவே எனக்காக நாக்கை தொங்கப்போட்டு அலைந்தவர்தான். நீங்கள் அடுத்த கேள்வியை கேளுங்கள் என்று கூறினார். அப்படிப்பட்ட சில்க் தற்கொலை செய்த தகவலை கேள்விப்பட்டு அவரது வீட்டுக்கு போனோம். பிறகு விஜயா மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது ஸ்டோர் ரூமில் அவரது உடலை கிடத்தியிருந்தார்கள். அதை பார்த்து கலங்கிவிட்டோம்.
உதவி கேமராமேன்: ஒருமுறை ஏவிஎம்மில் மலையாள பட ஷூட்டிங் நடந்தது. அப்போதெல்லாம் மாலை 6.30க்கு மேல் ஷூட்டிங் நடந்தால் டபுள் கால்ஷீட் என்று பேட்டா டபுளாக கிடைக்கும். அந்தப் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் சில்க்கின் பாடல் எடுக்கப்பட்டது. அப்போது அங்கு வேலை பார்த்தவர்கள் இன்று டபுள் கால்ஷீட் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டார்கள். அவர்கள் கூடி பேசியதை கவனித்த சில்க் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.
சில்க் அக்கா: உடனே அந்த உதவி கேமராமேன், இல்லை சில்க் அக்கா இன்று டபுள் பேட்டா கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பேசினோம் என்றார். தன்னை அக்கா என்று சொன்னதை கேட்டு நெகிழ்ந்துபோன சில்க் ஸ்மிதா இவ்வளவுதானே விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார். அதனையடுத்து எப்போது விரைவாகவே நடனம் ஆடி முடிக்கும் சில்க் அன்று மட்டும் வேண்டுமென்றே ரீ டேக் எடுத்தார். எனவே லேட் ஆக ஆக அவர்களுக்கான டபுள் பேட்டாவும் கிடைத்துவிட்டது. அந்த அளவுக்கு இரக்க குணம் உள்ளவர் சில்க்" என்றார்.


Click it and Unblock the Notifications











