HBD Suriya - சூர்யாவை மிரட்டிய ஜோதிகா.. எவ்ளோ லவ் இருந்திருக்கு பாருங்க
சென்னை: Happy Birthday Suriya (பிறந்தநாள் வாழ்த்துகள் சூர்யா) நடிகர் சூர்யா இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் ரொம்பவே விமர்சனங்களை சந்தித்தவர். ஒருவழியாக அனைத்தையும் கற்றுக்கொண்டு பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்தவர்கள் அவரை ஒரு நடிகராக ஏற்றுக்கொண்டனர். ஆக்ஷன், எமோஷன் என கலந்துகட்டி அந்தப் படத்தில் நடித்திருப்பார் சூர்யா.

பிதாமகன்: நந்தா படம் எப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்ததோ அதேபோல் சூர்யா கேரியரில் மாற்றத்தை கொண்டு வந்த மற்றொரு படம் பிதாமகன். அந்தப் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தாலும் சூர்யாவின் கதாபாத்திரம் அனைவரையும் ரசித்து சிரிக்க வைத்தது. பிதாமகன் மூலம்தான் சூர்யாவுக்குள் ஒரு நகைச்சுவை நடிகர் இருக்கிறார் என்றும் ரசிகர்கள் தெரிந்துகொண்டனர்.
கமர்ஷியல்: கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமின்றி கமர்ஷியலுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்தார் சூர்யா. இதனால் அவரது கிராஃப் சீராக சென்றுகொண்டிருக்கிறது. சமீபகாலமாக சூர்யாவின் கதை தேர்வும் அட்டகாசமாக இருக்கிறது. மேலும் சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்துவிட்டது. எனவே அடுத்தடுத்த கதைகளையும் கவனமாக தேர்ந்தெடுத்தார்.
ஜெய் பீம்: சூர்யா நடித்ததிலேயே அவரது கேரியர் பெஸ்ட் என்று ஜெய் பீம் படத்தை சொல்லலாம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. மேலும், ஒரு முன்னணி ஹீரோ இப்படி நடிப்பது ஆரோக்கியமான விஷயம் என சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கங்குவா: சூர்யா இப்போது தனது 42ஆவது படமான கங்குவாவில் நடித்திருக்கிறார். படத்தை சிறுத்தை சிவா இயக்க ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3டியில் உருவாகவிருக்கும் இப்படம்தான் அவரது கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்படவிருக்கிறது.
இதற்கிடையே சூர்யாவும், ஜோதிகாவும் இயக்குநர் வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதல்முதலாக இணைந்து நடித்தனர். இருவரும் இணைந்த முதல் படத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பல வருடங்கள் காதலித்து வந்த அவர்கள் வீட்டு சம்மதத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்ட கடந்த 2006ஆம் ஆண்டு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கின்றனர்.
காதலுக்கு அடையாளம்: கோலிவுட்டில் சிறந்த காதல் ஜோடி என்று பெயர் எடுத்தவர்கள் சூர்யாவும், ஜோதிகாவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், ஒருவர் மற்றொருவரை சமமாக நடத்தியும், மனதார பாராட்டுவதும் என காதலுக்கு அடையாளமாக இருக்கிறார்கள் இரண்டு பேரும். திருமணத்துக்கு பிறகு சில வருடஙக்ள் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா 36 வயதினிலே படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அவரது ரீ என்ட்ரிக்கு சூர்யா ரொம்பவே ஊக்கமாக இருந்தார் என ஜோதிகாவே பல மேடைகளில் கூறியிருக்கிறார்.
மிரட்டிய ஜோதிகா: இந்நிலையில் சூர்யாவை ஜோதிகா கண்ணாலேயே மிரட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது காக்க காக்க படத்தில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்தது அனைவரும் அறிந்ததுதான். அந்தப் படத்தின் ஒரு ஆக்ஷன் காட்சி இலங்கையில் கடுமையான குளிரில் படமாக்கப்பட்டிருக்கிறது. சுவற்றை இடித்துக்கொண்டு நீருக்குள் விழ வேண்டும் என்பதுதான் காட்சி.
அப்போது அந்தக் காட்சிக்கு டூப் போட்டுவிடலாம் என இயக்குநர் கௌதம் மேனனும், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்னும் முடிவு எடுத்திருக்கிறார்கள். ஆனால் சூர்யாவோ டூப்பெல்லாம் வேண்டாம் நானே செய்கிறேன் என கூறிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட் வந்து நடிக்க தயாராகியிருக்கிறார்.அந்த சமயத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஜோதிகாவோ சூர்யாவை மிரட்டும் தொனியில் பார்த்து இந்தக் காட்சியில் நீ நடிக்கக்கூடாது என சொல்லியிருக்கிறார். ஆனால் சூர்யாவோ அதை கண்டுகொள்ளாமல் ஒருவழியாக நடித்து முடித்திருக்கிறார்.
இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் ஒருமுறைதான் அந்தக் காட்சியை எடுப்பார்கள் என சூர்யா நினைத்திருக்கிறார். பீட்டர் ஹெய்னோ ஐந்து முறை எடுத்திருக்கிறார். இருந்தாலும் எந்த சிரமத்தையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார் சூர்யா. அப்படி டெடிகேஷனோடு வேலை செய்யும் சூர்யாவுக்கு தமிழ் ஃபில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











