கமலுக்காக களத்தில் குதித்த கே.ராஜன்.. அவரை சுத்து போட்டுட்டாங்களாம்.. மனம் திறந்த மகன்
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர் கே. ராஜன். படங்களை தயாரித்து வெற்றி கண்ட அவர்; இயக்குநராகவும் ஜொலித்திருக்கிறார். வயோதிகம் காரணமாக கடந்த சில வருடங்களாகவே அவர் சினிமாவில் ஆக்டிவ்வாக இல்லை. அதேசமயம் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்டவைகளில் எல்லாம் தவறாமல் கலந்துகொண்டார். சூழல் இப்படி இருக்க அண்மையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழில் பிரம்மச்சாரிகள், தங்கமான தங்கச்சி, டபுள்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கே. ராஜன். மேலும், மைக்கேல் ராஜ், சொந்தக்காரன், கபடி கபடி, வீட்டோட மாப்பிள்ளை, உணர்ச்சிகள் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். கோலிவுட்டின் முக்கியமான தயாரிப்பாளர் என்ற பெயரையும் அவர் பெற்றார். இவரது தங்கை மகன்தான் இப்போது பிரபல தயாரிப்பாளராக இருக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதுவாக இருந்தாலும் போல்டுதான்: ராஜனின் குணாதிசயமே யாருக்கும், எதற்கும் பயப்படாததுதான். முக்கியமாக திரைத்துறை நட்சத்திரங்களை அவதூறாக பேசிவந்த பயில்வான் ரங்கநாதனை; ஒரு திரைப்பட விழாவின்போது மேடையில் வைத்தே வார்த்தைகளால் பொளந்து கட்டிவிட்டார் ராஜன். அதனைப் பார்த்த ரசிகர்களும் மற்ற கலைஞர்களும் பயில்வானுக்கு தகுந்த வைத்தியத்தை ராஜன் கொடுத்திருக்கிறார். ராஜன் வகையறாதான் இவர்கள் மாதிரியான ஆட்களுக்கெல்லாம் சரி என பாராட்டினார்கள்.
உயிரிழந்த ராஜன்: சூழல் இப்படி இருக்க நீண்ட வருடங்களாகவே தனது குடும்பத்தை பிரிந்து ஹோட்டலில்தான் தங்கியிருந்தார் ராஜன். அதுமட்டுமின்றி தீவிரமான மன உளைச்சலில் அவர் இருந்ததாகவும் தெரிகிறது. சமீபத்தில் அவர் சென்னையில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை; ட்ரைவரிடம் காரை நிறுத்த சொல்லிவிட்டு இறங்கிய அவர்; கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 85 ஆகும்.
என்ன பிரச்னை?: ராஜனின் அந்தத் தற்கொலை ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த வயதில் இப்படி ஒரு முடிவா என அதிர்ச்சியடைந்தார்கள். அவரது மகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'எனது தந்தை நீண்ட நாட்களாகவே மன உளைச்சலில்தான் இருந்தார். தொழிலில் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. சிலருக்கு கொடுத்த பணமும், சிலரிடமிருந்து வாங்கி கொடுத்த பணமும் திரும்பி வரவில்லை. இதனால்தான் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்' என கலங்கியபடி தெரிவித்திருந்தார்.
நடந்த சம்பவம்: இந்நிலையில் ஹேராம் படத்தின்போது நடந்த சம்பவத்தையும் அவரது மகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் கொடுத்த பேட்டியில், "ஹேராம் படம் ரிலீஸானபோது அதை விசிடியிலும் திருட்டுத்தனமாக வெளியிட்டார்கள். உடனே அப்பாவுக்கு கமல் ஃபோன் செய்து விஷயத்தை சொன்னார். அப்பாவும் பாண்டி பஜாருக்கு சென்றார். அவர் செல்லும்போதே கராத்தே ஹுசைனியும், அவரது ஆட்களும் அடிதடியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பாவுக்கு முன்னதாகவே ஹுசைனியிடமும் கமல் சொல்லியிருந்திருக்கிறார்.
உயிரிழந்த இளைஞர்: இதன் காரணமாக கடையெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. அப்போது 22 வயது இளைஞர் ஒருவர் இறந்துவிட்டார். அப்பாதான் ஆட்களை அனுப்பி அந்த இளைஞரை கொன்றுவிட்டார் என்று அவரை அடிக்க பாய்ந்துவிட்டார்கள். உடனே ஒரு டிராஃபிக் போலீஸ் அப்பாவை அடையாளம் கண்டுகொண்டு அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றார். பிறகு என்னையும் பிடித்து விசாரித்தார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
