HBD Kamal - அட்வைஸ் செய்த கே.பாலசந்தர்.. 20 வருடங்கள் குழம்பிய கமல் ஹாசன்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Kamal Haasan Birthday (கமல் ஹாசன் பிறந்தநாள்) உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவரது வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை பார்க்கலாம்.
சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக நடிப்பில் சிறந்தவர் என புகழப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 232 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2, ஹெச்.வினோத் இயக்கும் படம், மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை வெளியாகின்றன.

கமல் போட்ட விதை: கமல் ஹாசன் வெறும் நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார் அப்போதே செய்துவிட்டார் என்று ஏகத்துக்கும் புகழ்கிறார்கள்.சொல்லப்போனால் நடமாடும் சினிமா பல்கலைக்கழகம் எனவும் அவர் தற்கால தலைமுறையினரால் போற்றப்படுகிறார்.
யாருக்கும் அஞ்சாமை: நடிப்பு, இயக்கம் என எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்யும் கமல் ஹாசன் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படி இருந்தவரே. குறிப்பாக தனது திருமண வாழ்க்கை பல விமர்சனங்களை சந்தித்தாலும் சரிகா, வாணி கணபதி என இருவரை திருமணம் செய்துகொண்டார். இருவரையும் பிரிந்து கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து பிறகு பிரிந்தார்.
பிறந்தநாள்: இடையில் அரசியலிலும் களமிறங்கிய அவர் தற்போது அதில் தீவிர செயல்பாட்டை கொஞ்சம் குறைத்திருக்கிறார். அவர் இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். இந்த சூழலில் அவருக்கு கே.பாலசந்தர் செய்த ஒரு அட்வைஸ் குறித்து இதில் பார்க்கலாம்.
என்ன அட்வைஸ்: அதாவது 1973ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன் படம் வெளியானது. அந்தப் படத்தில் கமல் ஹாசனுக்கு வெயிட்டான ரோலை கொடுத்திருக்கிறார் பாலசந்தர். ஆனால் கமல் ஹாசனுக்கோ என்ன இவ்வளவு பெரிய ரோல் கிடைத்திருக்கிறது. தன்னால் ஒழுங்காக செய்துவிடுமா என்ற பதற்றத்திலேயே இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் பாலசந்தரை தனியாக அழைத்து, என்ன சார் இவ்வளவு பெரிய ரோல் கொடுத்திருக்கீங்க. என்னால் செய்ய முடியுமா என சந்தேகமாக இருக்கிறது.
அதனால் நீங்களே என்னிடம் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிவிடுங்கள். இருந்தாலும் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதற்கு பாலசந்தரோ, 'என்னடா நீ.. உன் மேல நம்பிக்கை வெச்சு கொடுத்து இருக்கேன். இப்படி சொல்ற' என கேட்க; அதற்கு கமல் ஹாசனோ, 'இல்லைனா எப்படி இருக்கணும்னு நீங்களே சொல்லிடுங்க சார்' என கேட்டிருக்கிறார். அதற்கு பாலசந்தர், 'ஒன்னும் இல்லடா இன்னொரு சிவாஜி கணேசன் வந்துட்டான்னு சொல்லனும்' என்றிருக்கிறார்.
அதை கேட்டு மேலும் ஷாக்கான கமல் ஹாசன்; என்ன இவரு இப்படி சொல்லிட்டாரு. அவரு மாதிரியெல்லாம் நம்மால் பேர் எடுக்க முடியுமா? ஏன் அவர் இப்படி சொல்லிவிட்டார் என்று குழப்ப மனநிலைக்கு சென்றுவிட்டாராம். அதே குழப்பத்தோடு எதற்காக நம்மை பார்த்து பாலசந்தர் அப்படி சொன்னார்.. அவர் சொன்னபடி நாம் அந்த பெயரை எடுத்துவிட்டோமா என்று 20 வருடங்களாக யோசித்துக்கொண்டிருந்தாராம். இதனை கமல் ஹாசனே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். கமல் ஹாசனுக்கு தமிழ் ஃபில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











