படுத்தி எடுத்த கொரோனா.. சாமானியர்களுக்கு கமல் செய்த உதவி இவ்வளவா?.. உண்மையில் உலக நாயகன்தான்
சென்னை: கமல் ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் ஒரு புதுமை இருக்கும். இதன் காரணமாகவே அவரை எல்லோரும் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தற்போது தக் லைஃப் படத்தில் நடித்துவரும் கமல் ஹாசன் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க கமல் ஹாசன் செலிபிரிட்டிகள் மட்டுமின்றி சாமானியர்களுக்கும் செய்த உதவி தெரியவந்திருக்கிறது.
கமல் ஹாசன் என்ற பெயரை இந்திய சினிமாவின் வரலாற்றிலிருந்து அழிக்க முடியாது. சிறு வயதிலிருந்தே கேமரா முன் நிற்கும் அவர் சினிமாவின் அனைத்து ஜானரிலும் புகுந்து விளையாடக்கூடியவர். சினிமா மட்டுமின்றி உலக விஷயங்கள் அனைத்தையுமே விரல் நுனியில் வைத்திருப்பவர். அறிவு வளர்வதற்கு கல்வி முக்கியம்தான். இருந்தாலும் பள்ளி கல்வி முடிக்காத ஒருவர் இவ்வளவு அறிவோடு இருக்கிறாரே என்று பலரும் கமல் ஹாசனை பார்த்து ஆச்சரியம்தான் படுவார்கள்.

அரசியல் என்ட்ரி: 233 படங்களில் நடித்திருக்கும் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கியிருக்கிறார். ஆனால் சினிமாவில் ஜொலித்தது போல் அரசியல் களத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை. அதனை புரிந்துகொண்ட அவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த விக்ரம் படம் மெகா ஹிட்டானது. அந்த மெகா ஹிட் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே புத்துணர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பு வந்த தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் ஹிட்டடிக்காமல் வேற்று மொழி படங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
அடுத்தடுத்த படங்கள்: விக்ரம் பட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துமுடித்திருக்கிறார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்திலும், தெலுங்கில் கல்கி படத்திலும் நடித்துவருகிறார். இவை தவிர்த்து எஸ்டிஆர் 48, சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் ஆகிய படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இப்படி ஆண்டவர் கமல் ஹாசன் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
விமர்சனம்?: கமல் ஹாசன் எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். முக்கியமாக கமல் யாருக்குமே உதவி செய்யமாட்டார். சினிமாவில் சம்பாதிப்பதை மீண்டும் சினிமாவில் மட்டுமே முதலீடு செய்வார் என்று கூறப்படுவதுண்டு. அதேசமயம் முதன்முதலாக தமிழ்நாட்டில் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியது கமல்தான். அதன் மூலமாகவே எவ்வளவோ உதவிகளை செய்திருக்கிறார் என்று அவரின் ரசிகர்கள் விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள். இந்தச் சூழலில் செலிபிரிட்டிகள் முதல் சாமானியர்கள்வரை கமல் ஹாசன் செய்திருக்கும் உதவிகள் குறித்து தெரியவந்திருக்கிறது.
என்ன செய்தார்?: அதாவது கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது ஆழ்வார்பேட்டையில் தனது வீட்டின் அருகே இருக்கும் சாலையோரம் வசிக்கும் எளிய மக்கள் படும் துன்பத்தை கமல் ஹாசன் பார்த்திருக்கிறார். உடனடியாக தனது அலுவலகத்தில் அவர்களுக்கு இடம் கொடுத்து உண்ண உணவும், தேவையான மளிகை பொருட்களையும் கொடுத்திருக்கிறார். மேலும் 10,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கியிருக்கிறார். இதனை உதவி பெற்றவர்களில் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய கமல்: அதேபோல் மாற்றுத்திறனாளி கூடைப்பந்து வீராங்கனை ஒருவர் வீல் சேருக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். அதற்காக கிட்டத்தட்ட 1000 பேரிடம் உதவி கேட்டும் கிடைக்கவில்லையாம். பிறகு நடிகை ஸ்ரீப்ரியா மூலம் கமல் ஹாசனுக்கு இந்த செய்தி கிடைத்திருக்கிறது. உடனடியாக அவரை அழைத்த கமல், எத்தனை பேர் விளையாடுவீங்க என்று கேட்டு 5 பேருக்கு வீல் சேர் கொடுத்தாராம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில்: கண்ணான கண்ணே பாடலை பாடி ஃபேமஸான மாற்றுத்திறனாளி திருமூர்த்தியை நாம் அறிவோம். அவர் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலையும் யூட்யூபில் பாடினார். அதனைப் பார்த்த கமல் ஹாசன் உடனடியாக அவரை நேரில் அழைத்து உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆசை என கேட்டிருக்கிறார். அதற்கு திருமூர்த்தி முறையாக இசை கற்றுக்கொள்ள வேண்டும் என சொல்ல; சரி ஏ.அர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் சேர்ந்துகொள்ளுங்கள் ஆக வேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி சேர்த்துவிடு இன்றுவரை அதற்கான அத்தனையையும் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.
செலிபிரிட்டிகளுக்கு உதவி: இப்படி சாமானியர்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்திருக்கும் அவர் பாலுமகேந்திராவுக்கு உதவி செய்திருக்கிறார். அதாவது தான் இயக்கிய ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் பாலு மகேந்திரா தவித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் கமலிடம் உதவி கேட்கலாம் என்று முடிவெடுத்து கமல் ஹாசனின் ஆஃபிஸுக்கு சென்றிருக்கிறார். ஆனால் உதவி கேட்க கூச்சப்பட்டு பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் கமல் ஹாசன் சரி பாலு சார் ஷூட்டிங்கிற்கு லேட் ஆகிடுச்சு என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று பெரிய தொகையை கொண்டு வந்து பாலு மகேந்திராவின் கைகளில் திணித்தாராம். இது உதவி இல்லை. எனது அடுத்த படத்தை நீங்கள் இயக்குவதற்கான அட்வான்ஸ் தொகை என்று கூறினாராம். அந்தப் படம்தான் சதிலீலாவதி. அதேபோல் முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடல் மற்றும் முக்கியமான சில காட்சிகளை எடுப்பதற்கும் கமல் ஹாசன் பணம் கொடுத்து உதவினாராம். இப்படி ஏகப்பட்ட உதவிகளை செய்திருக்கும் கமல் ஹாசன் இதனை யாருக்கும் சொல்லாமலே செய்திருக்கிறார். வாழ்த்துகள் உலக நாயகன்..


Click it and Unblock the Notifications











