Kamal: "கமல் கூப்பிட்டா போய்டுவியா?” பிரபல இயக்குநரை விளாசிய K பாலச்சந்தர்... எஸ்கேப்பான உலக நாயகன்
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனால் பிரபல இயக்குநரை K பாலச்சந்தர் திட்டியது குறித்து தற்போது தெரியவந்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து "கமல் கூப்பிட்டா போய்டுவியா" என கேள்வி கேட்டுள்ளார் கே பாலச்சந்தர்.

கமல் கூப்பிட்டா போய்டுவியா
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனால் பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, கே பாலச்சந்தரிடம் திட்டு வாங்கியது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
கே பாலச்சந்தர் திட்டியதில், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கண்ணீர்விட்டு அழுதுள்ளார் சுரேஷ் கிருஷ்ணா. ஆனால், கமல் அங்கிருந்து அப்படியே எஸ்கேப் ஆகிவிட்ட சுவாரஸ்யமும் நடந்துள்ளது. அதாவது கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர்களில் சுரேஷ் கிருஷ்ணா மிக முக்கியமான ஒருவர். கே பாலச்சந்தரின் குட் புக்கில் இவருக்கு தனி இடம் இருந்துள்ளது.
புன்னகை மன்னன் படப்பிடிப்பின் போது கமலுக்கும் சுரேஷ் கிருஷ்ணாவுக்கும் நல்ல நட்பு கிடைத்துள்ளது. அதனால் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு இயக்குநர் வாய்ப்புக் கொடுத்துள்ளார் கமல். அதன்படி, இந்தியில் வெளியான 'அர்ஜுன்' என்ற படத்தை தமிழில் சத்யா என ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர் கமலும் சுரேஷ் கிருஷ்ணாவும். ஆனால் அப்போது கே பாலச்சந்தர் மனதில் உறுதி வேண்டும் படத்தை இயக்கிக் கொண்டிருந்தாராம்.
ஆனால், சுரேஷ் கிருஷ்ணா கே பாலச்சந்தரிடம் சொல்லாமல் கமலுடன் சத்யா பட டிஸ்கஷனில் பிஸியாகிவிட்டார். இதனால் சுரேஷ் கிருஷ்ணா மீது கடும் கோபவத்தில் இருந்துள்ளார் கே பாலச்சந்தர். இது தெரியாமல் சத்யா படத்தின் பூஜைக்கு கே பாலச்சந்தரை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும் என, கமலும் சுரேஷ் கிருஷ்ணாவும் சென்றுள்ளனர்.
அப்போது மனதில் உறுதி வேண்டும் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்துள்ளார் கே பாலச்சந்தர். கமல், சுரேஷ் கிருஷ்ணா இருவரையும் பார்த்த கே பாலச்சந்தர், இரண்டு மணி நேரம் வரை அவர்களிடம் பேசாமல் திரும்பி உட்கார்ந்துவிட்டாராம். அப்போதும் சுரேஷ் கிருஷ்ணா காத்திருக்க, அவரைப் பார்த்த கே பாலச்சந்தர், "கமல் கூப்பிட்டா இப்படித்தான் பாதியிலேயே போய்டுவியா. ஒரு படத்துல அசிஸ்டெண்ட்டா ஒர்க் பண்ணிட்டு இருக்கோம்ன்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா."
"இப்போ ரஜினி கூப்பிட்டா, கமல் படத்த விட்டுட்டு அங்க போய்டுவியா" என சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார். இதனால், சுரேஷ் கிருஷ்ணா ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அழுதுள்ளார். அதன்பின்னர் கே பாலச்சந்தரிடம் அசிஸ்டெண்ட்டாக இருந்த கவிதாலயா கிருஷ்ணன் தான் இந்த சம்பவத்தை சமாதானமாக பேசி முடித்து வைத்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் சத்யா பட பூஜை விழாவுக்கு கே பாலச்சந்தரும் சென்று வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











