Kamal: "25 அடி உயரத்துல இருந்து குதிக்கணும்..” ரிஸ்க் எடுத்த கமல்... மிரண்டுபோன கே பாலச்சந்தர்!
சென்னை: கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல், கே பாலச்சந்தரின் பயிற்சிப் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டவர்.
கே பாலச்சந்தரின் படங்களில் அதிகம் நடித்த ஹீரோ என்ற பெருமையும் கமல்ஹாசனுக்கு உண்டு.
இந்நிலையில், மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் கொடுத்த பேட்டியொன்றில், கமல் எடுத்த ரிஸ்க் குறித்து பேசியுள்ளார்.
அதாவது ஒரு பாடல் காட்சிக்காக 25 அடி உயரத்தில் இருந்து கமல் குதித்ததை பார்த்து, மிரண்டு போய்விட்டாராம்.

கமல் எடுத்த ஹை-ரிஸ்க்: தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான கமல்ஹாசன், ரசிகர்களால் உலக நாயகன் என கொண்டாடப்படுகிறார். கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தில், கமலின் நடிப்பையும் அவரது கம்பேக்கையும் பார்த்து ரசிகர்களே வியந்துவிட்டனர். சினிமாவில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை செய்து வரும் கமல், ஆரம்ப காலங்களில் இருந்தே ரிஸ்க் எடுத்து நடிப்பதற்கு தயங்கவே மாட்டாராம்.
இதுபற்றி மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரே ஒரு பேட்டியில் வியப்புடன் கூறியுள்ளார். கமலின் கேரியரில் மிக முக்கியமானவர் கே பாலச்சந்தர். சூப்பர் ஸ்டார் ரஜினியையும் உலகநாயகன் கமல்ஹாசனையும் தனது மோதிரக் கையின் குட்டுகளுடன் கரை சேர்த்தவர் அவர். கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் திரைப்படத்தை யாராலும் மறக்கவே முடியாது.
கமல்ஹாசன், ரேகா, ரேவதி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். 1986ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக கமல்ஹாசனின் சாப்ளின் செல்லப்பா கேரக்டர், இன்றைய 2கே கிட்ஸ்களும் ரசிக்கும்படி உருவாக்கப்பட்டிருந்தது. சார்ளி சாப்லின் ரொம்பவே காமெடியான கேரக்டர் என்றாலும், கமல் அதற்காக பயங்கரமாக ரிஸ்க் எடுத்து நடித்தாராம்.
அதாவது "மாமாவுக்கு குடும்மா குடும்மா" பாடல் காட்சியில், சார்ளின் சாப்ளின் போலவே வேகமாக டான்ஸ் ஆடி கலக்கியிருப்பார் கமல். அதற்காக அவர் ரொம்பவே பயிற்சி எடுத்ததாக கே பாலச்சந்தர் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அந்தப் பாடலின் ஒரு காட்சியில் 25 அடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும். அதனை சொன்னதும் கமல் கொஞ்சமும் யோசிக்காமல் ரிஸ்க் எடுத்து நடித்துவிட்டார்.
ஆனால், கமல் ரிஸ்க் எடுத்ததை பார்த்து நான் மிரண்டுவிட்டதாக கே பாலச்சந்தர் கூறியுள்ளார். இந்தப் பேட்டியை எடுத்த கமலின் நண்பரான கிரேஸி மோகனும், கே பாலச்சந்தர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியானது குறிப்பிடத்தக்கது. கமலின் இந்த ரிஸ்க் தான், அவரை உலக நாயகன் என கொண்டாட வைத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











