ஐஸ்வர்யா ராயிடம் அழகி போட்டியில் தோல்வி.. நடிகை கஸ்தூரியின் இன்னொரு பக்கம் தெரியுமா?.. இப்படியும் நடந்ததா?
சென்னை: நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் 90களில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்த அவர்; ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் ஒதுங்கும் சூழல் ஏற்பட்டது. இருந்தாலும் தன்னை எப்போதும் ஆக்டிவ்வாக வைத்துக்கொள்ளும் அவர்; பொது விஷயங்களிலும் கருத்துக்களை அஞ்சாமல் சொல்லக்கூடியவர். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் படிப்பை முடித்த கஸ்தூரிக்கு மாடலிங் கதவு திறந்தது. மாடலிங்கில் மிஸ் சென்னை பட்டம் வென்று அசத்திய அவருக்கு பிறகு கோலிவுட்டும் வரவேற்பை கொடுத்தது. அதனையடுத்து ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் 1991ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார். அப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. தமிழில் அறிமுகமான அதே வருடத்திலேயே மலையாளத்திலும் சக்ரவர்த்தி படத்தின் மூலம் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பிஸி: மலையாளத்தில் அறிமுகமானாலும் அவருக்கு தமிழ்தான் நிறைய வாய்ப்புகளை வழங்கின. அப்படி அவர் ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ் பாட்டு, அபிராமி, புதிய முகம், உடன் பிறப்பு என ஏராளமான படங்களில் நடித்து அசத்தினார். அவற்றில் சில படங்கள் ஹிட்டாகின; சில படங்கள் தோல்வியடைந்தன. படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் கஸ்தூரியின் அழகும், நடிப்பும் நாளுக்கு நாள் ரசிகர்களையும், இயக்குநர்களையும் கவனிக்க வைத்தது.

இந்தியன் படத்தில் கஸ்தூரி: ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்தபோதே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தில் அவருக்கு மகளாக நடிக்கும் வந்த வாய்ப்பையும் கச்சிதமாக யூஸ் செய்துகொண்டார். சொல்லப்போனால் ஹீரோயினாக நடித்த படங்களைவிடவும் இந்தியன் படம் அவருக்கு ஒரே இரவில் அதிக பிரபல்யத்தை பெற்றுக்கொடுத்தது என்றே சொல்லலாம். இதற்கிடையே தமிழில் அவருக்கு வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைய தெலுங்கு பக்கம் சென்று அங்கும் பிஸியானார்.
அஞ்சாமல் கூறும் கஸ்தூரி: ஒருகட்டத்தில் அவருக்கு அங்கும் வாய்ப்புகள் குறைய திரைத்துறையில் அவ்வப்போது மட்டுமே தலை காட்டி வருகிறார். இப்போதும் கேரக்டர் ரோலில் சில படங்களில் நடித்துவரும் கஸ்தூரி; பொது விஷயங்களில் அஞ்சாமல் கருத்து சொல்பவர். ஆனால் அப்படி அவர் சொல்லும் கருத்துக்கள் அவருக்கு சிக்கலைத்தான் உண்டாக்கும். கடந்த வருடம் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசினார் என்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
ட்ரெண்டாகும் பேட்டி: அதேபோல் திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்யக்கூடியவராக மாறியிருக்கிறார் அவர். இந்நிலையில் கஸ்தூரி கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், "நான் மிஸ் சென்னை பட்டம் வென்ற பிறகு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றேன். அதில் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோரும் கலந்துகொண்டார்கள். அவர்கள் டாப் 5ல் வந்தார்கள். நான் டாப் 10ல் வந்தேன். அவர்களிடம் தோல்வி அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். மிஸ் சென்னை வென்ற பிறகு நடிக்கிறேன் என்று சொன்னபோது வீட்டில் அதிர்ச்சியடைந்தார்கள். பிறகு அவர்களை பேசி சமாதானம் செய்து சினிமாவுக்கு வந்துவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











