நான் பார்த்து பிரமித்த ஒரே நடிகை அவங்கதான்.. வாயை பிளந்துட்டேன்.. சில்க் பற்றி மனம் திறந்த குஷ்பூ
சென்னை: சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஆளுமை. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருந்த அவர் கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித்தவர்.அதனால்தான் அவருக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களும், அவரது புகைப்படங்கள் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகை குஷ்பூபேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
காந்த கண்ணழகி, திராவிட பேரழகி என்று புகழப்பட்டவர் சில்க். விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட சில்க் ஸ்மிதாவுக்கு ஆந்திரா பூர்வீகம். குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்து சினிமாவுக்குள் நுழைந்த அவர் அதன் பிறகு இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது. தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது.

சில்க்கின் அறிமுகம்: தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார். சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே பிடித்துக்கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது.
திராவிட பேரழகி: இதன் காரணமாக அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது. இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர். அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சூழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க் பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று.
தற்கொலை: தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா காதலுக்காகவும், அன்புக்காகவும் ரொம்பவே ஏங்கியவர். அவர் ஒருவரை காதலிக்கவும் செய்தார். முக்கியமாக அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று தனது மனதில் பெரிய மாளிகையையே கட்டி வைத்திருந்தார். ஆனால் திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அதற்கு காரணம் சில்க் ஸ்மிதா காதலித்தவர் ஏமாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சில்க் ஸ்மிதா குறித்து நடிகை குஷ்பூ அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
குஷ்பூ பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய குஷ்பூ, "நான் சினிமா துறையில் பார்த்து பிரமித்த ஒரே நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதாதான். அவர் உண்மையில் ரொம்பவே நல்ல குணம் படைத்தவர். 80களில் நானும், அர்ஜுனும் ஒரு படம் செய்தோம். ஆனால் அந்தப் படம் முடிவடையவில்லை. அதில் சில்க்குக்கு முக்கியமான ரோல். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது சில்க் வரும்போது அந்த ஸ்பாட்டே பரபரக்கும். யாரை பார்த்தாலும் மேடம் வராங்க, மேடம் வராங்க என்று பரபரத்துப்போவார்கள். ஒருநாள் அப்படி முதன்முறையாக சில்க்கை பார்த்தேன். அப்போது நான் எனது வாயை பிளந்துவிட்டேன். அவர் மாதிரி இன்னொருவர் எல்லாம் கிடையவே கிடையாது" என்றார்.


Click it and Unblock the Notifications











