ராதிகா சொன்னார்.. ஒரு வாரம் ஷூட்டிங்கை பாரதிராஜா கேன்சல் செய்தார்.. சீக்ரெட் சொன்ன நடிகை அஸ்வினி
சென்னை: பாரதிராஜாவின் இயக்கத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான படம் கிழக்கு சீமையிலே. கிராமத்து மண் வாசனையோடு அண்ணன் - தங்கச்சி பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முக்கியமாக இன்றுவரை பலராலும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ராதிகா, நெப்போலியன், விஜயகுமார், அஸ்வினி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இந்தச் சூழலில் பாரதிராஜா குறித்து அஸ்வினி சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
இயக்குநர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், கடந்த 1993ஆம் ஆண்டு கிழக்கு சீமையிலே படத்தை இயக்கினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். முக்கியமாக எப்போதும் தனது படங்களுக்கு இளையராஜாவை இசையமைக்க வைக்கும் அவர்; கிழக்கு சீமையிலே படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை முதன்முதலாக இசையமைக்க வைத்தார். ரஹ்மானும் பாரதிராஜாவின் நம்பிக்கையை குலைக்கவில்லை. பாடல்களும் இன்றுவரை பலராலும் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அஸ்வினி பேட்டி: இந்நிலையில் படத்தில் பேச்சி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த நடிகை அஸ்வினி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “கிழக்கு சீமையிலே படம் கமிட்டானபோதும் நான் படித்துக்கொண்டுதான் இருந்தேன். அந்தப் படத்தின் ஷூட்டிங் போவதற்கு முன்பு நான் வீட்டில் வெட்டியாக இருந்து தேர்வுக்கு படித்தேன். அதனால் நன்றாக சாப்பிட்டு வெயிட் போட்டிருந்தேன். படத்தின் ஷூட்டிங்கிற்கு போனபோது ராதிகா மேடம் நடித்த சீன்கள் படமாக்கப்பட்டன.
இவங்களா?: ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன பிறகு எனது பெயரையும், ஏற்கவிருக்கும் கதாபாத்திரத்தை சொல்லியும் ராதிகாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். இவங்கதான் உங்கள் மகளாக நடிக்கப்போகிறார்கள் என்று கூறினார். அப்போதுதான் என்னை முதன்முறையாக ராதிகா மேடம் பார்த்தார்கள். அந்த சமயத்தில் நான் வெயிட் போட்டிருந்ததால் கொழுக் மொழுக்னும் புஸுபுஸு என்றும் இருந்தேன். உடனே ராதிகா, 'இவங்களா?.. இவங்க எனக்கு தங்கச்சி மாதிரில இருக்காங்க’ என்று சொல்லிவிட்டார்.
ஷூட்டிங் கேன்சல்: உடனே பாரதிராஜா சார் என்னிடம் வந்து, 'உனக்கு ஒரு வாரம் டைம் கொடுக்கிறேன். அதுவரை ஷூட்டிங் கிடையாது. எப்படியாவது உடம்பை குறைத்துவிட்டு வா என்று கூறினார். உடனே நான் அன்றிலிருந்து ஒரு வாரம் உணவில் ரொம்ப கறாராக இருந்தேன். பச்சை கேரட்டுகள், சப்பாத்தி, தண்ணீர் இவைதான் சாப்பாடாக இருந்தது. எனது அம்மாவும் அந்த விஷயத்தில் எனக்கு ஹெல்ப் செய்தார். பிறகு சென்று பாரதிராஜாவை பார்த்தபோது இப்போ சரியாக இருக்கும் என்று சொல்லி நடிக்க வைத்தார்.
ஆத்தங்கரை மரமே: அந்தப் படத்தில் இடம்பெற்ற ஆத்தங்கரை மரமே பாடலை ஐந்து நாட்கள்வரை எடுத்திருப்போம். பாரதிராஜா சார் ஒவ்வொரு மூவ்மெண்ட்டுக்கும் ஒவ்வொரு பார்வை, எக்ஸ்பிரெஷனை சொல்லிக்கொடுத்தார். அதைத்தான் நானும், விக்னேஷும் செய்தோம். அவர்தான் கோரியோகிராஃபி செய்தார் என்றே சொல்லலாம். அதில் இரண்டாவது சரணத்தில் தண்ணீரில் வர மாதிரி செய்தது எனக்கு ரொம்பவே கஷ்டமாவே இருந்தது. ஏனெனில் எனக்கு ஆஸ்துமா இருந்தது. இருந்தாலும் அந்தப் பாடலில் நடித்து முடித்தேன்” என்றார்.


Click it and Unblock the Notifications