Lokesh kangaraj Master - மாஸ்டர் படத்துக்கு முதலில் வாத்தி என பெயர் வைக்கப்பட்டிருந்தது
சென்னை: Lokesh kangaraj's Master (லோகேஷ் கனகராஜின் மாஸ்டர்) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குநர்களுக்கே விபூதி அடித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் களம் என்ற குறும்படத்தை இயக்கினார். அது கொடுத்த நம்பிக்கையின் காரணமாக தனது வேலையை உதறிவிட்டு முழு மூச்சாக சினிமாவில் இறங்கினார். அப்படி அவர் முதல் படமாக மாநகரம் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட் இல்லையென்றாலும் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அவரது மேக்கிங்கில் அனுபவம் வாய்ந்த இயக்குநர் எட்டிப்பார்த்தார்.

புரட்டிப்போட்ட கைதி: மாநகரம் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை இயக்கினார். அந்தக் கதையை முதலில் மன்சூர் அலிகானுக்கு அவர் எழுதியதன் மூலமே அவர் தனது கதையின் மேல் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால் கைதி கதையை கேட்ட தயாரிப்பு நிறுவனம் பெரிய ஸ்டாரிடம் போகலாம் என கூற அதன் பிறகே கார்த்தி படத்துக்குள் வந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.
விஜய்யுடன் லோகேஷ்: முதல் இரண்டு படங்களும் ஹிட் கொடுத்த பிறகு மூன்றாவது படம் விஜய்யுடன் இணைந்தார். படத்துக்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டது. அதுவரை விஜய்யை யாரும் காண்பிக்காத வகையில் காண்பித்து படத்தின் வெற்றியை அறுவடை செய்தார் லோகேஷ். அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது, ஹீரோவின் பெயரை விரிவாக கூறாதது என மேக்கிங்கில் வித்தியாசத்தை காண்பித்திருந்தார் அவர்.
மெகா ப்ளாக் பஸ்டர் விக்ரம்: மூன்று படங்கள் வெற்றியை அடுத்து கமல் ஹாசனுடன் விக்ரம் படத்தில் இணைந்தார். கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்பதை அவரே பல மேடைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். வெறும் பேச்சோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தான் கமல் ஹாசனின் எவ்வளவு வெறித்தனமான ரசிகன் என்பதை விக்ரம் மேக்கிங்கில் காண்பித்தார் அவர். குறிப்பாக லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸை உருவாக்கி அதகளம் செய்தார். படம் 500 கோடி ரூபாயை வசூலித்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இப்போது அவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார்.
பாராட்டைப் பெற்ற லோகேஷ்: லோகேஷ் கனகராஜ் லியோ ஷூட்டிங்கின்போது யூனிட்டில் வேலை செய்த கடைநிலை ஊழியர்களை அடையாளப்படுத்தும் விதமாக மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தார். அது அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. அதேபோல் லோகேஷ் இந்த அளவு உயர்ந்திருப்பதற்கு காரணம் அவரது திறமை மட்டுமின்றி குணமும், திட்டமிடலும் ஒரு காரணம் என அவருடன் பழகியவர்கள் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தனது உதவி இயக்குநர்களிடம் எந்தவித ஈகோவும் பார்க்காமல் பழகும் குணம் உடையவர் லோகேஷ் கனகராஜ்.

உதவி இயக்குநர்களுக்கு விபூதி: ஆனால் அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குநர்களுக்கே விபூதி அடித்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அதாவது விஜய்யுடன் லோகேஷ் படம் செய்யப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்பதுதான் பலரது ஆவலாக இருந்தது. அதே ஆவல் லோகேஷின் உதவி இயக்குநர்களுக்கும் இருந்திருக்கிறது.
இருப்பினும் தனது உதவி இயக்குநர்களிடம் படத்தின் பெயரை சொல்லாமல் இருக்கவும் முடியாது; அப்படி சொன்னால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே அவர்கள் மூலம் பெயர் கசிந்துவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் லோகேஷுக்கு எழுந்திருக்கலாம்,. அதனையடுத்து தனது உதவி இயக்குநர்களிடம் விஜய்யுடன் இணையும் படத்துக்கு வாத்தி என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லியிருக்கிறார் லோகேஷ்.

இவர்களும் படத்துக்கு பெயர் வாத்திதான் என ஃபிக்ஸ் ஆகியிருக்கின்றனர். இப்படியாகவே ஒரு மாதம் ஓடியிருக்கிறது. படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் தினத்தன்று எப்படியும் வாத்திதான் பட பெயராக வரப்போகிறது என நினைத்து ஆவலோடு காத்திருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத விதமாக படத்துக்கு மாஸ்டர் என பெயரை வைத்து உதவி இயக்குநர்களுக்கு விபூதி அடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதேசமயம் கதை விவாதத்தின்போது மாஸ்டர் என்ற பெயரும் பரிசீலனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











