கிண்டலடித்த லொள்ளு சபா டீம்.. அழைப்பு விடுத்த விஜயகாந்த்.. அறைக்குள் திக் திக் மொமண்ட்
சென்னை: தமிழ் சின்னத்திரை வரலாற்றில் லொள்ளு சபா நிகழ்ச்சி யாராலும் மறக்க முடியாதது. அனைவரையும் கவர்ந்த அந்த நிகழ்ச்சிதான் சந்தானம், யோகிபாபு, சுவாமிநாதன், மனோகர், ஜீவா, சேஷு உள்ளிட்ட பல கலைஞர்களை சினிமாவுக்கு கொடுத்தது. அவர்களுக்கெல்லாம் காட்ஃபாதர் என்றால் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராம்பாலா. அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் விஜயகாந்த் பற்றிய நினைவுகளை கிளப்பிவிட்டிருக்கிறது.
சினிமாவுக்கு பிறகு சின்னத்திரை பலருக்கு கனவு தொழிற்சாலையாக இருக்கிறது. எப்படியாவது அதில் நுழைந்து வென்றுவிட்டால் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதாலும்; சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்ட பலர் அப்படி வந்துதான் இப்போது டாப்பில் இருப்பதாலும் பெரிய திரைக்கு நிகராக அதிலும் ட்ரை செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் அதனுள் நுழைந்து வெள்ளித்திரைக்கு வந்துவிடுகிறார்கள்; சிலரோ அங்கேயே இருந்து தவிர்க்க முடியாத ஆளுமைகளாக ஜொலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
இயக்குநர் ராம்பாலா: அந்த சிலரில் ஒருவர் இயக்குநர் ராம்பாலா. முதலில் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் பிறகு சின்னத்திரைக்கு வந்தார். விஜய் டிவியில் பணிக்கு சேர்ந்த அவர் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியை இயக்கினார். வாரா வாரம் ரிலீஸாகும் படங்களை கலாய்ப்பதுதான் தீம். யார் நடித்த படமாக இருந்தாலும் அது அவர்களுக்கு கன்டெண்ட்தான். ஒருவகையில் தமிழ் மீடியா உலகில் சினிமாக்களை ரோஸ்ட் செய்யும் பழக்கத்தை முதலில் ஆரம்பித்து வைத்தது லொள்ளு சபா நிகழ்ச்சிதான்.

சிறந்த கலைஞர்களை கொடுத்தது: இந்த நிகழ்ச்சியிலிருந்துதான் சந்தானம், யோகிபாபு, சுவாமிநாதன், லொள்ளு சபா மனோகர், ஜீவா என பலர் வெள்ளித்திரைக்கு வந்தார்கள். அவர்கள் அனைவருமே ஏதோ ஒருவகையில் கோலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்னமும் பலருக்கு லொள்ளு சபா நிகழ்ச்சி பெரிய நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது. அதிலிருந்து வந்து வளர்ந்தவர்களும் ராம்பாலாவை மறக்கவும் இல்லை; மதிக்காமலும் இல்லை.
பிரச்னைகளும் உண்டு: அனைவரையும் கவர்ந்த அந்த நிகழ்ச்சி சில சமயங்களில் படங்களை ரோஸ்ட் செய்தபோது சம்பந்தப்பட்ட ஹீரோ உள்ளிட்டோருக்கு எரிச்சலையும் உண்டு செய்தது உண்டு. விஜய் படத்தை ஒருமுறை ரோஸ்ட் செய்தபோது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இல்லாத ரகளை செய்யும் நிலைக்கு சென்றார். நேரில் அழைத்தும் மன்னிப்பு கேட்கும்படி செய்ததெல்லாம் கடந்த கால வரலாறு. அதேசமயம் பல நடிகர்கள் அதை கண்டும் காணாமலும் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் விவரித்தார் இயக்குநர் ராம்பாலா.
விஜயகாந்த்திடமிருந்து அழைப்பு: ஒருமுறை வேறு ஒரு நிகழ்ச்சியில் அனைத்து நடிகர்களையும் கிண்டல் செய்யும்படியான விஷயங்களை வைத்திருக்கிறார் ராம்பாலா. அந்த நிகழ்ச்சியிலும் லொள்ளு சபாவில் பணியாற்றியவர்கள்தான் பெரும்பாலும் பணியாற்றினார்களாம். விஜயகாந்த்தையும் கிண்டல் செய்தபோது வழக்கம்போல் ஒருதரப்பினர் அவரிடம் பற்ற வைத்திருக்கிறார்கள். உடனே அவரிடமிருந்து அழைப்பு சென்றதாம். ராம்பாலா உள்ளிட்டோர் சென்றபோது விஜயகாந்த் ஃபைட் ரிகர்சலில் இருந்தாராம். அதே மூடோடு வந்து நம்மையும் தாக்க போகிறார் என்று திக் திக்கென இருந்தார்களாம். கூலாக வந்த அவரோ, எல்லா நடிகர்களையும் கிண்டல் செய்றீங்களாமே என கேட்க; இல்லை சார், பேலன்ஸாகத்தான் செய்கிறோம். பதிலுக்கு ஹீரோக்களும் கிண்டலடிக்கும்படி ஸ்க்ரிப்ட் இருக்கும் என்றார்களாம். அதற்கு கேப்டனோ, நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு சொல்கிறேன் என அனுப்பி வைத்தாராம். அதற்கு பிறகு ஒருவழியாக அந்த விவகாரம் முடிந்ததாம்.


Click it and Unblock the Notifications











