மனோஜ் பாரதிராஜா செய்த தப்பு இதுதானா?.. எல்லாமே அதனால்தானா?.. கொஞ்சம் நிதானித்திருக்கலாமோ?
சென்னை: பாரதிராஜாவின் மகனான மனோஜ் நேற்று முன்தினம் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு நேற்று பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பெசன்ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெற்றது. அவரது இரண்டு மகள்கள் தங்களது தந்தைக்கு இறுதி சடங்கை செய்தார்கள். மேலும் இறுதி சடங்கு நடைபெற்றபோது பாரதிராஜா கதறி அழுதது பார்ப்பவர்களின் நெஞ்சத்தை கனக்க வைத்தது.
தாஜ் மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, பாரதிராஜாவின் இயக்கம் பெரிய கூட்டணியோடுதான் அவர் களமிறங்கினார். ரஹ்மானும் தனது பெஸ்ட் இசையை அவருக்கு கொடுத்தார். முக்கியமாக பாடல்கள் அனைத்துமே பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பின. இதன் காரணமாக படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால் படம் ரிலீஸான பிறகு பார்த்தால் அது வேறு ஃப்ளேவரில் இருந்தது. இதன் காரணமாக படம் படுதோல்வியை சந்தித்தது.
ஒரு படம்தான் வரவேற்பு: தாஜ் மஹால் படத்துக்கு பிறகு அவர் நடித்த படங்களில் வருஷமெல்லாம் வசந்தம் படம் மட்டும்தான் அவருக்கு ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. மற்ற படங்கள் எதுவுமே மனோஜுக்கு கைகொடுக்கவில்லை. எப்படியாவது சினிமாவில் தனக்கென நிலையான இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று போராடிக்கொண்டே இருந்தார் அவர். அதற்கு மிக முக்கிய காரணம் பாரதிராஜாவின் மகன் என்ற அடையாளம்தான். அந்த அடையாளமே பாதி நேரம் அவரை கடுமையான மன அழுத்தத்துக்கு தள்ளியதாக அவரிடம் நெருங்கி பழகியவர்கள் கூறுகிறார்கள்.

இயக்குநர் மனோஜ்: இதற்கிடையே மணிரத்னத்திடம் பம்பாய், ஷங்கரிடம் எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். எந்திரன் படத்தில் ரஜினிகாந்த்துக்கு டூப்பும் போட்டிருந்தார். ஏற்கனவே இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த மனோஜ் மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கினார். அந்தப் படத்தை சுசீந்திரன் தயாரித்து கதையும் எழுதியிருந்தார். பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ஆனால் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. அதற்கு பிறகு சில கதைகள் எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார் மனோஜ்.
இதய அறுவை சிகிச்சை: சூழல் இப்படி இருக்க அவருக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு தேவை என்று மருத்துவர்களின் அறிவுரை பேரில் அவர் வீட்டில் ஓய்வெடுத்தார். ஆனால் திடீரென நேற்று முன்தினம் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு உச்சக்கட்ட சோகத்தை ஏற்படுத்தியது. நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு விஜய் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மகள்கள் செய்த இறுதி சடங்கு: அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு அமரர் ஊர்தியில் வைத்து மனோஜின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது இரண்டு மகள்களும் தங்களது தந்தைக்கு இறுதி சடங்கு செய்தார்கள். பாரதிராஜாவோ கதறி அழுதபடி இருந்தார். இந்தக் காட்சிகளை பார்த்த அனைவரின் நெஞ்சங்களும் கனத்து போயிருந்தன. பாரதிராஜாவை எப்படி தேற்றுவது என்பதுதான் திரைத்துறையில் பலரின் எண்ணமாக இப்போது இருக்கிறது.
மனோஜின் பேட்டி: இந்நிலையில் மனோஜ் உயிரிழந்ததிலிருந்து அவர் கொடுத்த பழைய பேட்டிகள் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில், "எனக்கு கிடைத்த ஓபனிங் பாடல் மாதிரி எந்த புதுமுக ஹீரோவுக்கும் கிடைத்திருக்காது. அவ்வளவு அருமையான பாடல். நான் செய்த தவறு என்னவென்றால், சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு வேகம் இருக்கும் இல்லையா. அந்த வேகத்தில் எனக்கு வந்த எல்லா கதைகளிலும் நடிக்க ஒத்துக்கொண்டேன். அப்போது நான் ஒழுங்காக எனது மைண்டை ஃபோக்கஸ் செய்யவில்லை. அதுதான் நான் செய்த தவறு" என்றிருந்தார்.


Click it and Unblock the Notifications











