கடவுள் எனக்கு அந்தத் தெம்பை கொடுத்திருக்காரு..மனோஜிடம் ஓபனாகவே சொன்ன பாரதிராஜா.. இதுவும் நடந்ததா?
சென்னை: மனோஜ் பாரதிராஜாவின் உயிரிழப்பு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் கண்ணீர் சிந்த வைக்கிறது. 48 வயதில் அவர் இப்படி உயிரிழப்பார் என்று பாரதிராஜா மட்டுமின்றி யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அவரது உடல் இப்போது அஞ்சலிக்காக நீலாங்கரையில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஏராளமானோ அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இறுதி சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ். இயக்குநராகும் ஆசையோடு இருந்தவரை தாஜ் மஹால் படத்தின் மூலம் நடிகராக மாற்றினார் பாரதிராஜா. எத்தனையோ பேரை நடிகராக மாற்றி வாழ்க்கையை திருப்பியிருக்கிறோம் அதேபோல் தனது மகனுக்கும் நடக்கும் என்று எதிர்பார்த்தார் இயக்குநர். ஆனால் அவர் நினைத்தது வேறு நடந்தது வேறு. தாஜ் மஹால் படம் படுதோல்வியை சந்தித்தது. காதல் கதையாக இருந்தாலும் பாரதிராஜாவின் மேக்கிங்கும், லொக்கேஷனும் ரசிகர்களுக்கு கனெக்ட்டே ஆகவில்லை என்று அப்போது விமர்சனங்கள் எழுந்தன.
தொடர்ந்து நடித்த மனோஜ்: தாஜ் மஹால் ஃப்ளாப் ஆனாலும் மனோஜுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இரண்டாவது படத்திலேயே சரத்குமாருக்கு தம்பியாக சமுத்திரம் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனையடுத்து வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, பல்லவன் என ஏராளமான படங்களில் நடித்தார். இவற்றில் வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன. குறிப்பாக மனோஜின் நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பே கிடைத்தது.

ஒதுங்கிய மனோஜ்: ஆனால் தொடர்ந்து மனோஜுக்கு வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் சினிமாவிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். அதேசமயம் தனக்குள் இருந்த இருந்த இயக்குநராகும் ஆசையை மீண்டும் உயிரித்தெழ செய்து சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்யலாம் என்று திட்டமிட்டார். ஆனால் அந்தத் திட்டம் கைகூடவில்லை. அதனையடுத்து இயக்குநர் சுசீந்திரன் எழுதிய கதையை மார்கழி திங்கள் என்கிற பெயரில் படமாக எடுத்தார். படம் தோல்வியையே சந்தித்தது.
விடாத மனோஜ்: இருந்தாலும் சினிமாவை விட்டுவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் அவர். அதன் காரணமாக கோலிவுட்டில் தனக்கு கிடைத்த கேரக்டர் ரோல்களை ஏற்க ஆரம்பித்தார். அவற்றில் தன்னால் முடிந்த அளவு சிறப்பாகவே நடித்துக்கொடுத்தார். கடைசியா ஸ்நேக் அண்ட் லாடர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அது மிக விரைவில் வெளியாகவிருக்கிறது. மேலும் ஒருசில கதைகளையும் அவர் வைத்திருந்ததாகவும் அடுத்தடுத்து படமாக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த மனோஜ்: இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு சில நாட்கள் முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது வீட்டில் ஓய்வெடுத்தார். ஆனால் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடக்கவிருக்கிறது. அவருக்கு பலரும் நேரில் சென்று தங்களது அஞ்சலியை தெரிவித்துவருகிறார்கள்.
மனோஜின் பேட்டி: இந்நிலையில் பாரதிராஜா குறித்து சில வருடங்களுக்கு முன்பு மனோஜ் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் தனியார் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அப்பா எத்ஹ்டனை விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றிருந்தாலும் அதனை தனது தலைக்கு ஏற்றிக்கொள்ளவே மாட்டார். நீங்கள் சாதித்துவிட்டீர்கள் போதும் ப்பா என்று சொன்னால்; நான் சாதிப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. அதற்கான தெம்பை கடவுள் எனக்கு கொடுத்திருக்கார். கடைசிவரை படம் இயக்குவேன் என்றுதான் சொல்வார். அவருக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் மகனாக பிறக்க வேண்டுமென்பதுதான் எனது ஆசை" என்றார்.


Click it and Unblock the Notifications











