A.R.Rahman - மணிரத்னத்தையே அழ வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. என்ன இப்படி செஞ்சிருக்கார்
சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குநர் மணிரத்னத்தை அழ வைத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜாவுடனான கருத்து வேறுபாடுக்கு பிறகு கே.பாலசந்தரும், மணிரத்னமும் புதிய இசையமைப்பாளர் வேண்டும் என தேடியபோது கிடைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்தின் பாடல்களிலேயே அட்டகாசமான ட்யூன்களை போட்டு அசத்தினார். குறிப்பாக அவரது சவுண்டிங் ரொம்பவே புதிதாக இருந்ததால் முதல் படத்திலேயே ஃபேமஸ் ஆகிவிட்டார். மேலும் அப்படத்துக்காக் தேசிய விருதையும் வென்றார்.

ஆஸ்கர்: ரோஜா பட பாடல்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு 90களில் தமிழ் சினிமாவை ரூல் செய்ய ஆரம்பித்தார் ரஹ்மான். தொட்டதெல்லாம் ஹிட்டாக இசைப்புயல் தமிழ் சினிமா தாண்டி பாலிவுட் வரை அடித்தது. அங்கும் அவரது திறமையை நிரூபித்துவிட்டு ஹாலிவுட்டுக்கு சென்றார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்ததால் இரண்டு ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப் விருதுகளை வென்றார்.
க்ளாஸ் கூட்டணி: ஏ.ஆர்.ரஹ்மான் எத்தனையோ இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றி ஏராளமான ஹிட்டுகளை கொடுத்துவிட்டார். இருப்பினும் மணிரத்னத்துடன் அவர் இணைந்த ரோஜா,பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, உயிரே, குரு,ராவணன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் காலங்கடந்து நிற்பவை.மணிரத்னத்துக்கு மட்டும் எப்படி ஏ.ஆர்.ரஹ்மான் இவ்வளவு ஸ்பெஷலாக போடுகிறார் என்ற கேள்வியையும் பலர் முன் வைப்பார்கள்.
பம்பாய்: மணிரத்னத்துடன் இணைந்து அவர் பணியாற்றியதில் பம்பாய் படம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை அடிப்படையாக வைத்து மணிரத்னம் உருவாக்கியிருந்த அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிய பலம். கண்ணாளனே, உயிரே உயிரே உள்ளிட்ட பாடல்கள் எல்லாம் இப்போது கேட்டாலும் ரசிகர்களை மெய் மறக்க செய்துவிடும்.
அதேபோல் படத்துக்கான பின்னணி இசையும் அவ்வளவு கச்சிதமாக வந்திருக்கும். குறிப்பாக பம்பாய் படத்தின் தீம் இசை கேட்கும்போதே கலங்க செய்துவிடும். ஜெயலலிதா கூட பம்பாய் பாடல்கள் உருவான சமயத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பஞ்சதன் ஸ்டூடியோவுக்கு வந்து கண்ணாளனே பாடலை கேட்டு ரசித்துவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
அழ வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்: இந்நிலையில் பம்பாய் பட சமயத்தில் மணிரத்னத்தை ஏ.ஆர்.ரஹ்மான் அழ வைத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, பம்பாய் படப்பிடிப்பு தீவிரமாக நடந்த சூழலில் அந்த அரபிக்கடலோரம் பாடலுக்கான ஷூட்டிங் தொடங்க வேண்டிய நேரம். ஆனால் அந்தப் பாடலுக்கான ட்யூனை ஏ.ஆர்.ரஹ்மான் ரெடி செய்யவில்லையாம். நாளை ஷூட்டிங்கை வைத்துக்கொண்டு இன்று மாலை ட்யூன் ரெடி ஆகவில்லை என மணிரத்னத்திடம் ரஹ்மான் கூறியிருக்கிறார்.
கோபப்பட்ட மணி: இதன் காரணமாக மணிரத்னம் ரொம்பவே கோபப்பட்டுவிட்டார்.அப்போது ரஹ்மானோ தன்னிடம் வேறு ஒரு ட்யூன் இருக்கிறது என கூறிவிட்டு பம்பாய் படத்தின் தீம் இசையை இசைத்து காண்பித்திருக்கிறார். அதை கேட்ட மணிரத்னம் என்ன செஞ்சு வெச்சிருக்கீங்க. உங்களை படத்திலிருந்து தூக்க நினைத்தால் நீங்கள் என்னை அழ வைத்துவிட்டீர்களே ரஹ்மான்" என கலங்கியபடி பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











