நான்லாம் விளங்குவேனா.. பாரதிராஜா அப்படி செஞ்சிட்டாரு.. நெப்போலியன் ஓபனாக இப்படி சொல்லிட்டாரே
சென்னை: பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நெப்போலியன் கோலிவுட்டில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஹீரோ, வில்லன் என எந்த ரோல் கொடுத்தாலும் பட்டையை கிளப்பும் அவர் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். கடந்த வருடம்தான் அவரது மூத்த மகன் தனுஷுக்கு ஜப்பானில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அவர் அக்ஷயா என்கிற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமானாலே ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்கிற ஆசைதான் பெரும்பாலும் பலருக்கும் தோன்றும். சிலருக்குத்தான் எந்த ரோல் கிடைத்தாலும் அதனை சரியாக செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த சிலரில் ஒருவர்தான் நெப்போலியன். இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படம்தான் அவரது முதல் படம். முதல் படத்திலேயே வயதான கெட்டப்பில் தோன்றி தனது நடிப்பு திறமையை அட்டகாசமாக வெளிப்படுத்தினார் அவர்.

ஹீரோ, வில்லன்: அதனையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதில் ஹீரோவாகவும் நடித்தார் வில்லனாகவும் நடித்தார். குறிப்பாக தான் வளர்ந்துவந்த காலத்திலேயே எஜமான் படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்தார். முதலில் நெப்போலியனை நடிக்க வைக்க தயங்கிய ரஜினிகாந்த் டப்பிங் பேசும்போது நெப்போலியனின் நடிப்பை பார்த்து மிரண்டு போனது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் வில்லனாக நடித்த அவர் மறுபக்கம் ஹீரோவாகவும் நடித்து வெற்றி படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார்.
அரசியலில் நெப்போலியன்: சினிமாவில் அவர் பீக்கில் இருந்தபோதே அரசியலிலும் காலடி எடுத்துவைத்தார். திமுக ஆட்சி காலத்தில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார். அதற்கு பிறகு சில காரணங்களால் அந்தக் கட்சியிலிருந்து விலகிய அவர் தொடர்ந்து பாஜக உள்ளிட்ட கட்சிகளில் ஐக்கியமானார். சூழல் இப்படி இருக்க அவரது இரண்டு மகன்களில் ஒருவரான தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக முதலில் அவருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அது அவருக்கு பெரிய பயனை தரவில்லை.

அமெரிக்காவில் செட்டில்: அதனைத் தொடர்ந்து தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு சொந்தமாக மென்பொருள் நிறுவனம், ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து விவசாயம் என பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது இந்தியா வரும் அவர் சில படங்களில் மட்டும் கமிட்டாகி நடித்துவந்தார். இப்போது முழுவதுமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டு தனது மகனின் நலனில் முழுக்க முழுக்க அக்கறை செலுத்திவருகிறார். இப்படிப்பட்ட சூழலில் அவரது மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைத்தார்.
ஜப்பானில் திருமணம்: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்கிற பெண்ணைத்தான் தனுஷுக்கு மணமுடித்து வைத்திருக்கிறார்கள். இவர்களது திருமணம் ஜப்பானில் கடந்த வருடம் நடைபெற்றது. அதில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தற்போது அவர்கள் சுமூகமாக தங்களது திருமண வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நெப்போலியன் சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
நெப்போலியன் பேட்டி: சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "என்னுடைய முதல் படத்தில் முதல் சீனே ஒரு ஆளை நான் தொங்கவிடுற சீன். முதல் சீனே இப்படி இருந்தால் நான் விளங்குவேனா. எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உடனே பாரதிராஜா என்னிடம் வந்து என்ன சீன் பிடிக்கவில்லையா என்று கேட்டார். நானோ அதெல்லாம் இல்லை என்று கூறினேன். ஆனாலும் அவர் புரிந்துகொண்டார். பிறகு ஸ்பாட்டிலேயே, 'வர லட்சுமியை நான் வேண்டாம்னா சொல்வேன். நான் சொன்னால் நல்லதுக்குதான் சொல்வேன்' என்று மங்களகரமாக டயலாக் எழுதிக்கொடுத்தார். அதைத்தான் முதலில் பேசினேன். அதற்கு பிறகு எனக்கு படிப்படியாக லட்சுமியும் (பணம்) வர ஆரம்பித்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











