Pepsi Uma - ரஜினி, கமல், ஷாருக், சச்சின்.. யாரா இருந்தா என்ன நோ மீன்ஸ் நோதான்.. கெத்து காட்டிய பெப்ஸி உமா
சென்னை: Pepsi Uma (பெப்ஸி உமா) 90களில் சின்னத்திரையில் கலக்கிய பெப்ஸி உமா தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தது குறித்து பார்க்கலாம்.
சின்னத்திரையில் அறிமுகமாகி மக்களிடையே பெரும் பிரபலமாவது சமூக வலைதளங்கள் பெருகிய இந்தக் காலகட்டத்தில் இது எல்லாம் சாதாரணமாகிவிட்டது. ஆனால் சமூக வலைதளங்கள் பெரிதாக வளராத காலத்தில் சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களை கட்டிப்போட்டவர்தான் பெப்ஸி உமா. தெளிவான தமிழ், அழகான பேச்சு என பெப்ஸி உமாவை ரசிக்காதவர்கள் யாருமே இல்லை.

உமா மகேஸ்வரி டூ பெப்ஸி உமா: பெப்ஸி உமாவின் இயற்பெயர் உமா மகேஸ்வரி. அடிப்படையில் எம்பிஏ படித்திருக்கும் அவர் வாருங்கள் வாழ்த்துவோம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு கங்கை அமரனுடன் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சன் டிவியில் ஒளிபரப்பான பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி அதிரிபுதிரி ஹிட்டடிக்க உமா மகேஸ்வரி பெப்ஸி உமாவாக மாறினார்.
15 வருடங்கள் நடந்த நிகழ்ச்சி: இப்போதெல்லாம் ஒரு சின்னத்திரை நிகழ்ச்சி 100 எபிசோடுகள் தாண்டுவதே ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 15 வருடங்கள் ஒளிபரப்பானது. அதற்கு முழு முதல் காரணம் பெப்ஸி உமா மட்டுமே. அவர் சொல்லும் ஹலோவை கேட்பதற்காகவே ஒட்டுமொத்த தமிழ்நாடும் தொலைபேசியில் காதுகளையும், தொலைகாட்சியில் கண்களையும் வைத்து அமர்ந்திருந்த காலம் இருந்தது.
தொகுப்பாளினிக்கு கோயில்: நடிகைக்கு கோயில் கட்டுவது ஆங்காங்கே நடக்கும்,. தமிழ்நாட்டில்கூட குஷ்பூவுக்கு கோயில் கட்டப்பட்டது. ஆனால் ஒரு சின்னத்திரை தொகுப்பாளினிக்கு கோயில் கட்டியது, கட் அவுட் என பெப்ஸி உமாவுக்கு மட்டுமே நடந்த வரலாறு. அந்த அளவுக்கு அவர் தனது குரலால் தமிழ்நாட்டை கட்டிப்போட்டு வைத்திருந்தார். அவருக்கு கட் அவுட் வைக்க நடந்த முயற்சியை பார்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு போனது விஷயம்.

பெப்ஸி உமா சேலை: நதியா திரையுலகில் அறிமுகமானபோது நதியா தோடு, நதியா கம்மல் என புழக்கத்தில் இருந்தன. நடிகை மேல் இருக்கும் கிரேஸால் அப்படி நடப்பது இயல்பு. ஆனால் சின்னத்திரை தொகுப்பாளினி பெப்ஸி உமா கட்டிய சேலையை பார்த்து தமிழ்நாடு எங்கும் பெப்ஸி உமா சேலை என்று புழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அவர் கட்டும் சேலைகள் அனைத்துமே 90களில் பெண்களின் மத்தியில் மிக மிக பிரபலம்.
யாரா இருந்தாலும் நோ மீன்ஸ் நோதான்: சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற பலர் தீவிரமாக வாய்ப்பு தேடுவார்கள். ஆனால் பெப்ஸி உமாவுக்கு வாய்ப்பு தானாகவே தேடி வந்தது. அதுவும் சாதாரணமானவர்களிடமிருந்து இல்லை. ரஜினி, கமல் ஆகியோரிடமிருந்து வந்தது. முத்து படத்தில் நடிக்க ரஜினியும், அன்பே சிவம் படத்தில் நடிக்க கமல் ஹாசனும் பெப்ஸி உமாவிடம் கேட்டார்களாம். ஆனால் எனது பாதை சின்னத்திரை தொகுப்பாளினிதான் என சொல்லி ஸ்ட்ரிக்ட்டாக மறுத்துவிட்டாராம். அதேபோல் பாரதிராஜா தனது தாஜ்மஹால் படத்தில் நடிப்பதற்கு உமாவை அணுகியதாகவும் ஒரு தகவல் உண்டு.
ஷாருக், சச்சினும் இந்த லிஸ்ட்டில்: அதேபோல், ஷாருக்கான் தனக்கு தமிழ் மொழி தெரியாவிட்டாலும் நேரம் கிடைக்கும்போது பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை பார்ப்பாராம். அதனை பார்த்து அவரும் ஒரு படத்தில் நடிக்க சொல்லி பெப்ஸி உமாவிடம் கேட்டாராம். அதனையும் மறுத்தாராம் உமா. அதேபோல் ஒரு விளம்பர படத்தில் சச்சின் டெண்டுல்கருடன் நடிப்பதற்கு ஒரு பன்னாட்டு நிறுவனம் உமாவை அணுகியிருக்கிறது. ஆனால் கொஞ்சம் க்ளாமரான உடையை உடுத்த் வேண்டும் என கண்டிஷன் போட்டிருக்கிறது.
இதனை எதிர்பார்க்காத உமா, அப்படிப்பட்ட விளம்பரமே தேவையில்லை என அதை உதறியிருக்கிறார். உமா அந்த வாய்ப்பை உதறி தள்ளியபோது சச்சின் டெண்டுல்கரிடம் ஒரு கையெழுத்து வாங்கிவிட மாட்டோமா என இந்தியாவே காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பலரிடம் கெத்து காண்பித்த உமா சன் டிவியிலிருந்து விலகி வேறு சேனலுக்கு சென்றார்.
அங்கு அவரை சிலர் தகாத வார்த்தைகளால் பேச அதற்கு எதிராக இவர் புகார் அளிக்க என அந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து சின்னத்திரையிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கியிருக்கிறார் உமா. சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











