நான் என்ன தப்பா பாடிட்டேன்.. இசையமைப்பாளர் பரணியிடம் கோபப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம்
சென்னை: SP Balasubramaniam (எஸ்.பி.பாலசுப்ரமணியம்) இசையமைப்பாளர் பரணியிடம் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கோபப்பட்ட விஷயம் தெரியவந்திருக்கிறது.
தஞ்சாவூர் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்தவர் பரணி. இசை மீது ஆர்வத்தின் காரணமாக தீவிரமாக முயன்று எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து 1999ஆம் ஆண்டு வெளியான பெரியண்ணா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டடித்தன.

ஸ்டைலுனா ஸ்டைலுதான்: குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற தம் அடிக்கிற ஸ்டைல பார்த்து பாடல் இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பாடலை விஜய் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான நிலவே நிலவே ச ரி க ம ப த நி பாடு, தன்னானே தாமரைப் பூ போன்ற பாடல்கள் மெகா ஹிட். பெரியண்ணா படத்தில் ஃபோக், மெலோடி என வித விதமான ஜானர்களில் பாடல்களை கொடுத்ததால் பரணி கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறினார்.
டாப் பரணி: அதன் பிறகு அவர் இசையமைப்பில் உருவான பார்வை ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்தன. முக்கியமாக பார்வை ஒன்றே போதுமே படம் அவரது கரியரை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. அதில் இடம்பெற்ற, திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு, துளி துளியாய், பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும், யே அசைந்தாடும் காற்றுக்கு, காதல் பண்ணாதீங்க, திரும்ப திரும்ப பார்த்து என அதில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன.
சரிந்த பரணி: இப்படி தொடர்ச்சியாக ஹிட் கொடுத்திருந்த பரணி சில படங்களில் சறுக்கலை சந்தித்தார். அப்படிப்பட்ட சமயத்தில் அவரது தந்தை இறந்துபோனதாலும் சின்ன பிரேக்கும் எடுத்துவிட்டார். அதற்கு பிறகு அவரால் கம்பேக் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் இன்றுவரை 90களின் ஃபேவரைட்டாக இருக்கிறார் பரணி. இந்நிலையில் பரணியிடம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கோபப்பட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது பெரியண்ணா படத்தில் தன்னானே தாமரைப் பூ பாடலை எஸ்பிபி, சித்ரா பாடினர். முதலில் அந்தப் பாடலை பரணி நினைத்தது போல் எஸ்பிபி பாடாமல் ரொம்ப ஸ்டைலாக பாடிவிட்டாராம். ஆனால் முதல் படம் என்பதால் எப்படி எஸ்பி பாலசுப்ரமணியத்திடம் சொல்வது என தெரியாமல் திணறினாராம் பரணி. அதனைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
சந்திரசேகரோ சரி ஒன்னும் இல்லை திருப்பி அவரை அழைத்து பாட வை என்று சொல்லிவிட்டாராம். ஆனால் அவ்வளவு பெரிய லெஜெண்ட்டை எப்படி மீண்டும் அழைப்பது என கூச்சப்பட்டிருக்கிறார். ஒருவழியாக பாலசுப்ரமணியத்திடம் விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்கள் கழித்து ஸ்டூடியோவுக்கு வந்த எஸ்பிபி உள்ளே நுழையும்போதே,
'அப்படி என்ன நான் தப்பா பாடிட்டேன்.நான் என்ன தப்பா பாடுனேனு சொன்னாதான் திருப்பி பாடுவேன்' என்று சொல்ல பரணியோ இல்லை கிராமத்து பாணியில் பாட வேண்டும் என தயங்கி தயங்கி தான் ஏற்கனவே பாடியிருந்ததை போட்டு காண்பித்திருக்கிறார். உடனே புரிந்துகொண்ட எஸ்பிபி பிறகு பரணி சொன்னபடி பாடிக்கொடுத்தாராம். இதனை பரணி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











