Vijay: இயக்குநரிடம் அடி வாங்கிய விஜய்.. எனக்கு பரிதாபமாக இருக்கும்.. பொன்னம்பலம் ஓபன்!
சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். தனது 69 வது படத்தில் நடித்து வரும் விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக முடிவெடுத்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள இவர், முழு நேர அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். இப்படியான நிலையில் நடிகர் விஜய் படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநரிடம் அடி வாங்கியது குறித்து நடிகர் பொன்னம்பலம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில், உங்கள் விஜய், இளைய தளபதி விஜய், தளபதி விஜய் என ரசிகர்கள் ஆதரவால் மாபெரும் உயரத்திற்கு உயர்ந்துள்ளார். அவரது இந்த வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தான். விஜய்யை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்திய அவர் தொடர்ந்து பல படங்கள் தோல்வியைச் சந்தித்தாலும் விஜய்யை வைத்து ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விடவே இல்லை. இதனால் விஜய்காந்த்தின் தம்பியாக விஜய் நடித்தால், அந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பதுடன், விஜய்யும் ரசிகர்கள் மத்தியில் நன்கு ரீச் ஆகிவிட முடியும் என நினைத்தார். இதற்காக விஜயகாந்த்திடம் பேசி, செந்தூரப்பாண்டி என்ற படத்தில் நடிக்கவும் வைத்தார். இந்தப் படம் விஜய்க்கு பெரும் வெற்றிப் படமாக மாறியது.

இந்தப் படத்திற்குப் பின்னர், விஜய் பல படங்களில் நடித்தார். அதன் பின்னர் வெற்றி தோல்வி என மாறி மாறி எதிர் கொண்ட விஜய், ஒரு கட்டத்தில் தொடர்ந்து பல படங்கள் ஹிட் கொடுத்தார். எனவே, அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. தொடர்ந்து வெற்றிப் படங்கள், இடையில் ஏதாவது சறுக்கல் இருந்தாலும், விஜய்யின் வளர்ச்சி மாபெரும் கதாநாயகனாக அவரை உயர்த்தியது. இன்றைக்கு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உயர்ந்து நிற்கிறார்.
பொன்னம்பலம்: இப்படியான நிலையில், பழைய பேட்டி ஒன்றில், நடிகர் பொன்னம்பலம் விஜய் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது விஜய் குறித்து அவர் பேசுகையில், " விஜய் சினிமாவில் வந்த புதிதில் அவரைப் பலரும் சினிமாவிற்கு பொருத்தமற்றவர் எனக் கூறினார்கள். இது மட்டும் இல்லாமல், விஜய்க்கும் படத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்தது. விஜய்யை நல்ல நடிகராக மாற்றுவதற்கு, எஸ்.ஏ. சந்திரசேகர் மிகவும் கஷ்டப்பட்டார். படப்பிடிப்புத் தளத்தில் தலையில் அடித்துக் கொள்வார். அதாவது, என்னோட பணமெல்லாம் போகுது, கடன் வாங்கி செலவு செய்கிறேன் என தலையிலேயே அடுத்துக் கொள்வார்.

அடி வாங்கிய விஜய்: சில நேரங்களில் படப்பிடிப்புத் தளத்தில் விஜய்யை அடித்து விடுவார். எனக்கு பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கும். ஆனால் விஜய் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர். என்னதான் சிறந்த நடிகராக இருந்தாலும், நல்ல இயக்குநரும், நடிப்பதற்கு நல்ல காட்சிகள் இருந்தால்தான், நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும். அப்படிப் பார்த்தால், விஜய் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்" என பேசியுள்ளார்.
கமெண்ட்: அவரது இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் விஜய் படப்பிடிப்புத் தளத்தில் அடியெல்லாம் வாங்கியுள்ளாரா? என அதிர்ச்சியுடன் கேள்வி கேட்டு வருகிறார்கள். மேலும் பலர், விஜய்யின் தந்தை இயக்குநர் என்பதால்தான் அடித்து சொல்லிக் கொடுத்துள்ளார், இதுவே மற்றவர்களாக இருந்திருந்தால் கதாநாயகனை மாற்றியிருப்பார்கள் எனக் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











