விஜயகாந்த்தின் அந்த ஆசை.. நிறைவேற்றிய மகன்கள்.. பிரேமலதா பெருமிதம்
சென்னை: கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத ஹீரோக்களில் ஒருவர் விஜயகாந்த். அவர் உடல்நலக் குறைவால் கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் அனைவரும் அவரை பற்றி அவர் உயிரிழந்த பிறகு பெருமையாக பேசிவருகிறார்கள். இந்நிலையில் தனது மகன்கள் குறித்து விஜயகாந்த் பட்ட ஆசை குறித்து அவரது மனைவி பிரேமலதா சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.
கேப்டன், புரட்சி கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். மதுரையில் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் சினிமா ஆசையின்பால் சென்னைக்கு வந்து இங்கு பல கஷ்டங்களை சந்தித்தவர். ஒருவழியாக அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து மிளிர தொடங்கினார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் பீக்கில் இருந்தபோது தனக்கென ஒரு கோட்டையை உருவாக்கி அதில் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். உருவத்திலும், நடிப்பிலும் ஊர்க்காரர் போல் இருந்ததால் அவரை தங்களில் ஒருவராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.
உச்சத்தில் விஜயகாந்த்: வில்லனாக அறிமுகமானாலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து அதை சாதித்தும் காட்டியவர். ஒரே வருடத்தில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து படுபிஸியாகவும் திகழ்ந்துகொண்டிருந்தார். ரஜினிகாந்த், கமலுக்கு அவர்களது 100ஆவது படம் சரியாக போகவில்லை. ஆனால் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு: அதேபோல் திரைப்பட கல்லூரியிலிருந்து இயக்குநராகும் கனவோடு வெளியே வந்த பலருக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தது விஜயகாந்த்தான். அதுமட்டுமின்றி பல இயக்குநர்கள் விஜயகாந்த்தை வைத்துதான் முதல் படத்தை இயக்கினார்கள். அந்த அளவுக்கு புதுமுகங்கள் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தவர். மேலும் சினிமாவில் இருப்பவர்கள் எந்தவித கஷ்டமும் படக்கூடாது என்பதற்காக தனது அலுவலகத்தில் தொடர்ந்து உணவு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த விஜயகாந்த்: இயக்குநர்கள் மட்டுமின்றி விஜய், சூர்யா போன்ற வளர்ந்துவந்த நடிகர்களின் படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து அந்தப் படங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சியவர் விஜயகாந்த். சூழல் இப்படி இருக்க அரசியலில் நுழைந்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவர் சந்தித்த சில துரோகங்கள் அவரை சாய்த்தது. அதன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
படைத்தலைவன்: விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து அவரது இரண்டு மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியன் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் கஸ்தூரி ராஜா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படமானது ஜூன் 13ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கேப்டனின் மகன் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தப் படம் ஹிட்டாகி அவரது தந்தை போலவே சண்முக பாண்டியனும் பெரிய ஹீரோவாக வலம் வர வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
பிரேமலதா பேட்டி: இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் தனது மகன்கள் பற்றி பிரேமலதா அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த அந்தப் பேட்டியில், "நாங்கள் திருமணம் செய்து குழந்தை பெற்ற பிறகு விஜயகாந்த் என்னிடம், 'நான் முறையாக படிக்கவில்லை. நீ படித்திருக்கிறாய். இரண்டு மகன்களையும் படிக்க வைத்து பட்டம் வாங்க வைத்துவிடு என்றார். அதுதான் அவர் ஆசையாக என்னிடம் கேட்ட ஒன்று. எனது மகன்களுக்கு நான்தான் பாடங்கள் எல்லாம் சொல்லிக்கொடுப்பேன். ஒழுங்காக படிக்கவில்லையென்றால் அடி விழும். இப்போது பட்டம் வாங்கி விஜயகாந்த்தின் ஆசையை நிறைவேற்றிவிட்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











