திருமணம் செய்துகொண்டேன்.. ரொம்பவே பாதிக்கப்பட்டேன்.. வேதனையுடன் பிரியாமணி
சென்னை: நடிகை பிரியாமணி கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். தேசிய விருது வென்ற நடிகையான அவர் திருமணத்துக்கு பின்பு சில காலம் நடிக்காமல் இருந்தார். அதனையடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஹிந்தியில் மைடான் திரைப்படத்திலும், மலையாளத்தில் ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி என்ற படத்திலும் நடித்தார். இந்தச் சூழலில் பிரியாமணியின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அந்தப் படம் தோல்வி அடைந்தாலும் பிரியாமணிக்கு நல்ல அறிமுகமும், பெயரும் கிடைத்தன. அதனையடுத்து பாலுமகேந்திரா இயக்கத்தில் அது ஒரு கனா காலம் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தனது கரியரின் ஆரம்பத்திலேயே பாரதிராஜா, பாலுமகேந்திரா என இரண்டு பெரும் ஆளுமைகளின் இயக்கத்தில் நடித்ததால் திரையுலகில் வெகுவாக கவனம் ஈர்த்தார் பிரியாமணி.

பிரியாமணிக்கு தேசிய விருது: இப்படிப்பட்ட சூழலில் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தில் நடித்தார். முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். கார்த்தியிடம் காதலில் கசிந்துருகுவதும், காதல் விவகாரம் வீட்டில் தெரிந்த பிறகு யாருக்கும் அஞ்சாமல் இருப்பதும் என ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பு ராட்சசியாக மிரட்டியிருந்தார். குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்தார். இதன் காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
குறைந்த வாய்ப்புகள்: பருத்திவீரனில் தேசிய விருது கிடைத்ததால் கண்டிப்பாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக ஒன்றிரண்டு படங்களின் வாய்ப்பே அமைந்தது. அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போக முஸ்தஃபா என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் கடைசியாக மைடான், ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி ஆகிய படங்களில் நடித்தார்.
பிரியாமணி பேட்டி: இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், " எனது நிச்சயதார்த்ததை நான் வெளிப்படையாக அறிவித்தேன். என் மீது அக்கறை கொண்டவர்கள் அதை கண்டு மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் சிலரோ தேவையற்ற வெறுப்பு செய்திகளை பரப்பினார்கள். லவ் ஜிஹாத் என்றெல்லாம் கூறினார்கள். நான் பிரபலம் என்பதால் எது வேண்டுமானாலும் சொல்வார்கள் என்று நான் புரிந்துகொண்டேன். இருந்தாலும் அந்தக் கருத்துக்கள் என்னை ரொம்பவே பாதித்தன என்பதுதான் உண்மை. என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனெனில் நான் திரைப்பட துறையில் இருப்பவள்.
அவரை ஏன் சொல்ல வேண்டும்: ஆனால் இதில் எந்தத் தொடர்பும் இல்லாத எனது கணவரை எதற்காக சொல்ல வேண்டும். அவர் யார் என்றுகூட உங்களுக்கு தெரியாது. நிறைய செய்திகள் அதுகுறித்து வந்தன. அவை அனைத்துமே என்னை இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் ரொம்பவே பாதித்தன. இப்போதும்கூட நான் அவருடன் ஒரு புகைப்படம் போட்டால் வரும் கமெண்ட்ஸ்களில் பாதி எங்களது மதம் அல்லது சாதி பற்றியதாகவேத்தான் இருக்கிறது" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











