அவங்க எல்லாம் வராங்க.. நீங்களும் வரணும்.. கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்.. என்ன மிரட்டுற என்ற இளையராஜா
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் இப்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இவை தவிர்த்து வேறு சில படங்களுக்கும் இசையமைக்கிறார்.அவரது வாழ்க்கை வரலாறு படமாவது குறிப்பிடத்தக்கது. அதனை அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுத; தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். இந்தச் சூழலில் இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் போட்ட கண்டிஷன் குறித்து தெரியவந்திருக்கிறது.
தமிழ் திரையிசையில் இளையராஜாவின் பங்கு மிக பெரியது. அவர் வந்து இசையமைத்த பிறகு பாட்டு பாட பாமரனும் வாயை திறந்தான். அன்னக்கிளியில் அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் முத்து ரகத்தில் இருப்பவை. அந்தப் பாடல்களை கேட்ட பிறகு அட இது என்ன ப்பா நம்ம ஊர் இசையால்ல இருக்கு என்று பலரும் ரசிக்க தொடங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு தமிழ் திரையிசையின் முகத்தை பெரிதாக மாற்றிக்காட்டியவர் இளையராஜா மட்டும்தான் என்பது யாராலும் மறக்க முடியாதது.

தொட்டதெல்லாம் ஹிட்: இளையராஜா முதன்முதலாக அன்னக்கிளியில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். அதற்கு பிறகு இளையராஜாவின் கோட்டையாக தமிழ் சினிமா திகழ்ந்தது. மற்ற இசையமைப்பாளர்கள் அந்த கோட்டைக்குள் நுழைந்தாலும் ராஜாவின் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இளையராஜாவும் தனது ஒவ்வொரு இசையிலும் வெரைட்டி காண்பித்து ரசிகர்களை தனது தளபதியாக வைத்துக்கொண்டார்.
அவ்வளவு பிஸி: இளையராஜா போல் வேறு எந்த இசையமைப்பாளரும் பிஸியாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருநாளைக்கு கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு இசையமைத்த வரலாறு எல்லாம் உண்டு. பாடல்கள் மட்டுமின்றி ரீ ரெக்கார்டிங்கும் அதில் சேரும். அதேபோல் ஒரு பண்டிகைக்கு இளையராஜா இசையமைத்த படங்கள் மட்டுமே வந்தது உண்டு. அந்த அளவுக்கு இளையராஜா பிஸியாக இருந்தார்.
1500 படங்கள்: இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலின் ட்யூனும் இன்னொரு பாடலுக்கு ரிப்பீட் ஆகாமல் இதுவரை அவர் இசையமைத்துவருவது எட்டாவது அதிசயம் என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இப்படி புகழின் உச்சியில் இருந்தாலும் இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்று ஒருதரப்பினர் கூறுவார்கள். ஆனால் இளையராஜா அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்வதில்லை. கடந்த மாதம் கூட ஒரு சிம்பொனியை எழுதி முடித்திருக்கிறார்.
கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்: இந்நிலையில் இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா போட்ட கண்டிஷன் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது சிவா தயாரித்த ஏராளமான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். அப்படி ஒரு படத்துக்கு வேலை செய்யும்போதுதான் சிவாவுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அந்தத் திருமணத்துக்கு விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்டோரை அழைத்த சிவா; இளையராஜாவிடமும் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்.
என்னய்யா மிரட்டுற: அழைப்பிதழை ஏற்றுக்கொண்ட இளையராஜா சிவாவிடம்; என்னய்யா என்னைய கல்யாணத்துக்கு கூப்பிடுற, ஒரு நாளைக்கு இரண்டு படங்களுக்கு நான் வேலை செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு சிவாவோ, 'இதோ பாருங்க விஜயகாந்த், இப்ராஹிம் எல்லாம் வராங்க; நீங்களும் வந்துதான் ஆகணும்' என்று கூறியிருக்கிறார். இதனை எதிர்பார்க்காத இளையராஜா, 'என்னய்யா மிரட்டுற; நான் வந்துதான் ஆகணுமா என்று கேட்க; ஆம் நீங்கள் வரணும் என்று சொல்லியிருக்கிறார் சிவா. சரி என்று சொல்லியபடி கோபிசெட்டிபாளையத்தில் நடந்த சிவாவின் திருமணத்துக்கு சென்றாராம் இளையராஜா. இதனை சிவா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











