நீ நடிக்கவே வேண்டாம் கிளம்பு.. வடிவேலுவை விரட்டிவிட்ட பாரதிராஜா.. ஏன் தெரியுமா?..இப்படியும் நடந்ததா?
சென்னை: வடிவேலு இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் கடைசியாக நடித்த மாமன்னன் படம் அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; சுந்தர்.சியுடன் கேங்கர்ஸ் படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் வடிவேலுவை தன்னுடைய படம் ஒன்றில் நடிக்கவே வேண்டாம் என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா விரட்டிவிட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதனை கண்டு ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.
வைகை புயல் என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் வடிவேலு காமெடி உலகத்தில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருப்பவர். காமெடி ட்ராக் எழுதி கொடுக்க அவருக்கென்று தனி டீம் இருந்தாலும்; அதனை தனது நடிப்பால் மென்மேலும் மெருகேற்றியவர் அவர். முக்கியமாக தன்னை தானே தாழ்த்திக்கொண்டு அவர் செய்த காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கட்டிப்போட்டன. இதன் காரணமாக அவர் நடிக்காத படங்களே இல்லை என்ற நிலை கோலிவுட்டில் நிலையாக இருந்தது.
அரசியலுக்கு சென்ற வடிவேலு: சூழல் இப்படி இருக்க அவருக்கு மறைந்த விஜயகாந்த்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதாவது தனது அலுவலகத்தின்முன்பு விஜயகாந்த்தின் ஆட்கள் காரை நிறுத்தியிருந்ததால் வடிவேலு அவர்களிடம் சண்டைக்கு போனதாகவும்; அப்போதிருந்து வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் மோதல் போக்கு ஆரம்பித்ததாகவும் கூறப்படுவதுண்டு. அந்த மோதலில் விஜயகாந்த்தை பழி தீர்க்க திமுகவின் மேடைகளில் ஏறினார் வடிவேலு. ஆனால் அரசியல் மேடை அவரையும், அவரது கிராஃபையும் அதளபாதாளத்துக்கு கொண்டு போய் சேர்த்தது. இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்த சூழலில் ஒருகட்டத்தில் வடிவேலுவை திரையிலேயே காண முடியவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது.

மீண்டும் நடிக்க வந்த வடிவேலு: இதனையடுத்து அவருக்கு இருந்த சில பஞ்சாயத்துக்கள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டதன் காரணமாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்ததாக அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ஹிட்டானது. அப்படத்தில் வடிவேலு வேறு ஒரு பரிமாணத்தில் நடித்து; தான் எவ்வளவு பெரிய நடிகன் என்பதை மீண்டும் உணர்த்தினார். இப்போது மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அவர்.
வடிவேலுவை சுற்றும் சர்ச்சைகள்: சர்ச்சைகளிலிருந்து வடிவேலு வெளியே வந்துவிட்டார் என்று பார்த்தால் அவர் மீது சக நடிகர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. தங்களை அவர் வளரவே விடமாட்டார்; அடிமை போல் நடத்துவார் என்று அவருடன் நடித்த காமெடி நடிகர்கள் தொடர்ந்து கூறுவது உண்டு. அதற்கெல்லாம் வடிவேலு இதுவரை பெரிதாக எந்த ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை. மாறாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் முழு கவனமும் செலுத்திவருகிறார் அவர். இந்நிலையில் வடிவேலுவை பாரதிராஜா விரட்டிவிட்ட சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
கிழக்கு சீமையிலே: அதாவது பாரதிராஜா இயக்கிய படங்களில் முக்கியமான படம் கிழக்கு சீமையிலே. அதில் ராதிகா, விஜயகுமார், நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அதில் வடிவேலுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தினை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். முதன்முறையாக பாரதிராஜாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்த படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

விரட்டிவிட்ட பாரதிராஜா: அந்தப் படத்தை கலைப்புலி தாணு அப்போதே அதிக பொருட்செலவில்தான் தயாரித்தார். இந்த விஷயம் வடிவேலுவின் காதுகளுக்கும் சென்றதாம். எனவே அதுதான் இவ்வளவு பணம் போடுகிறார்களே தன்னுடைய சம்பளத்தையும் கொஞ்சம் அதிகமாக கேட்போம் என்று நினைத்து பாரதிராஜாவிடம் சென்று தனக்கு 25,000 ரூபாய் சம்பளமாக வேண்டும் என்று கேட்டாராம். வடிவேலு அப்போதுதான் வளர்ந்துவந்த சமயம். இதனால் அதிர்ச்சியடைந்த பாரதிராஜா கொஞ்சம் குறைக்க சொல்லி கேட்டாராம். ஆனால் வடிவேலு கறாராக முடியாது என்கிற தொனியில் சொல்லிவிட்டாராம். இதனால் கோபமடைந்த பாரதிராஜா நீ இந்தப் படத்தில் நடிக்கவே வேண்டாம் கிளம்பு என்று சொல்லிவிட்டாராம்.
அதிர்ந்துபோன வடிவேலு: பாரதிராஜா இப்படி சொல்வார் என்று வடிவேலு எதிர்பார்க்கவில்லையாம். அதனைத் தொடர்ந்து பாரதிராஜாவை வடிவேலுவால் சமாதானமே செய்ய முடியவில்லையாம். ஒருகட்டத்தில் இந்த விவகாரம் தயாரிப்பாளர் தாணுவின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. உடனடியாக வடிவேலுவை அழைத்த தாணு, 'சம்பள விஷயமெல்லாம் என்னிடம்தானே பேச வேண்டும். நீ ஏன் அவரிடம் போய் கேட்ட' என்று கூறிவிட்டு; வடிவேலு கேட்ட சம்பளத்தையும் கொடுத்துவிட்டு அந்தப் படத்தில் நடிக்க வைத்தாராம். அந்தப் படம் வடிவேலுவின் கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
முன்னதாக, தமிழ் சினிமா என்றால் செட்தான் என இருந்த விதியை உடைத்து கிராமத்தின் வரப்புகளுக்கு கூட்டி சென்றவர். பாரதிராஜாவின் கண்கள் ஷாட் சப்பாணியை ஹீரோவாக்கிய பிறகுதான் கிராமங்களின் கண் சினிமா மீது நிலைக்குத்தி நின்றது. அவரது ஒவ்வொரு படமும் மேல்தட்டு மனிதர்களின் கண்களிலிருந்து மறைந்துபோன கிராமத்து மனிதர்களையும், அவர்களின் குணாதிசயங்களையும் காட்சிப்படுத்தின. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தை அழிப்போம் என்றார் பாரதியார். ஒரு கிராமத்தானுக்கு கலை செல்லவில்லை என்றால் கலையை அழித்திடுவோம் என்ற இறுமாப்போடு சினிமாவுக்குள் வந்தவர் பாரதிராஜா.

பாரதிராஜா இயக்கிய கடைசி படம்: பாரதிராஜா 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். அவரது ஒவ்வொரு படமும் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்பவை. அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு ஓம் (மீண்டும் ஒரு மரியாதை) என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் நடிகராக பல படங்களில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளிவருகிறார். இதற்கிடையே கடைசியாக வெளியான மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜியில் பறவை கூட்டில் வாழும் மான்கள் கதையை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக கள்வன் படத்திலும் நடித்திருந்தார்.
பாரதிராஜாவின் அறிமுகங்கள்: இயக்குநர் பாரதிராஜா, ராதா, அம்பிகா, ராதிகா, ரேவதி, ப்ரியாமணி என பல நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் அனைவரும் வெறும் அழகை மட்டும் கொண்டிருக்காமல் தங்களது திறமையின் துணையோடு கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகைகளாக வலம் வந்தனர். கோலிவுட் மட்டுமின்றி பிற மொழிகளிலும் அவர்கள் தங்களது ஆளுமைகளை நிரூபித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











