Kamal: புன்னகை மன்னன் படத்துல அந்த சீன்... ரேகாவுக்கே தெரியாம பிளான் போட்ட கமல், K பாலச்சந்தர்!
சென்னை: கமல் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய போது அவருக்கு அதிகம் சான்ஸ் கொடுத்தது இயக்குநர் கே பாலச்சந்தர் தான்.
இருவருக்கும் இடையே ஆத்மார்த்தமான குரு - சிஷ்யன் உறவு இருந்தது திரையுலகமே அறிந்த ஒன்று.
இவர்கள் கூட்டணியில் வெளியான புன்னகை மன்னன் திரைப்படம் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுவது உண்டு.
இந்தப் படத்தில் நடிகை ரேகாவை முத்தமிடும் காட்சியை கமலும் கே பாலச்சந்தரும் ரகசியமாக திட்டமிட்டார்களாம்.

ரேகாவுக்கே தெரியாமல் கமல் போட்ட பிளான் : குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கமல், 1980-களில் முன்னணி ஹீரோவாக நடிக்கத் தொடங்கிவிட்டார். ஆரம்ப காலத்தில் கமலுக்கு அதிகளவில் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர்களில் கே பாலச்சந்தரும் ஒருவர். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன் இருவருமே கே பாலச்சந்தரின் பட்டறையில் இருந்து உச்சம் தொட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கமல் - கே பாலச்சந்தர் கூட்டணியில் 1986ம் ஆண்டு வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். கமலுடன் ரேவதி, ரேகா, ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையில் புன்னகை மன்னன் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. சேது, சாப்லின் செல்லப்பா என இருவிதமான கெட்டப்புகளில் நடித்திருந்தார் கமல்.
அதேநேரம் புன்னகை மன்னன் படத்தில் இருந்து தான் கமலுக்கு 'முத்த நாயகன்' என்ற பட்டமே கிடைத்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'என்ன சத்தம் இந்த நேரம்' பாடலில், நடிகை ரேகாவை உதட்டில் முத்தமிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார் கமல். ஆனால், இந்த சீன் ரசிகர்களுக்கு மட்டுமில்லை, ரேகாவுக்குமே அதிர்ச்சி வைத்தியமாக தான் இருந்ததாம்.
இந்தப் பாடலை படமாக்கும் போதே, இதில் எதாவது தனித்துவம் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் கே பாலச்சந்தர். காதல் தோல்வியால் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்யும் போது அது ரசிகர்களுக்கு மனதைத் தொட வேண்டும் என கமலிடம் கூறியுள்ளார். ஆனால், என்ன பண்ணலாம் என இருவருக்குமே தெரியவில்லையாம். இறுதியாக கே பாலச்சந்தர் கமலிடம் ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

அதாவது "அருவியில் இருந்து குதிக்கும் காட்சியில் ரேகாவை கண்களை மூட வேண்டும் என சொல்லிவிடுகிறேன். அப்போது நீ (கமல்) ரேகாவின் உதட்டில் முத்தம் கொடுத்துவிடு" என்றுள்ளாராம். ஆனால், ரேகாவுக்கு அப்போது ரொம்பவே இளம் வயது என்பதால் கமல் முதலில் பயந்துள்ளார். ஆனால், கே பாலச்சந்தர் அவரை விடாமல் துரத்தியதோடு, "எல்லாம் ஒரு 30 செகண்ட்ல முடிச்சுடுடா... சீன் எடுத்து முடிஞ்சதும் நான் ரேகாவிடம் பேசிக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இறுதியாக அவர்கள் பிளான் செய்தது எதுவும் தெரியாமல் ரேகா கண்களை மூட, கமல் காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டாராம். ரேகாவுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் திருதிருவென முழித்துள்ளார். அதன்பின்னர் கே பாலச்சந்தர் விஷயத்தைக் கூறி ரேகாவை சமாதானம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாசன் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











