டேய் நான் தொவச்சுடுவேன்.. ராதா ரவியிடம் சிவாஜி ஏன் இப்படி சொன்னாரு தெரியுமா?
சென்னை: இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். திரைத்துறையில் அனைவருக்குமே ரோல் மாடலாக திகழ்ந்துகொண்டிருக்கும் அவரை பற்றி நடிகர் ராதா ரவி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், வசனகர்த்தாவுமான கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பராசக்தி படத்தின் மூலம் சிவாஜி கணேசன் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தின் சிவாஜியை தவிர வேறு யார் அறிமுகமாகியிருந்தாலும் அதில் உள்ள வெயிட்டேஜை தாங்கியிருப்பார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் அனல் பறந்த கருணாநிதியின் வசனத்தை அடுத்தக்கட்டத்துக்கு சிவாஜி மட்டுமே எடுத்து சென்றார். முதல் படத்திலேயே அப்படி காட்சிகளும், வசனங்களும் அமைவது வரம். அது சிவாஜிக்கு கைகூடியது.
சிவாஜிதான் அடையாளம்: மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் இருப்பது உண்டு. ஆனால் யாரும் நேரில் பார்த்ததில்லை. சினிமாதான் அவர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது. அப்படி பலர் மன்னர்களாக நடித்தாலும் சிவாஜிதான் மன்னர்களுக்கு அடையாளமாக இருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் என யாரை நினைத்தாலும் சிவாஜிதான் ரசிகர்கள் கண் முன்பு வந்து செல்வார்.

கட்டுப்படுத்திய மகேந்திரன்: சிவாஜி போல் ஒரு நடிகர் இனி எங்குமே கிடைக்கமாட்டார். அது பெரும்பாலும் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்வார் என்ற விமர்சனமும் எழுந்ததை இங்கு கவனிக்க வேண்டும். அதற்கு இயக்குநர் மகேந்திரன் இப்படி பதில் சொன்னார், "சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். நான் அப்படி சொல்லமாட்டேன் சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஏற்ற கதையை இதுவரை யாருமே எழுதியதில்லை' என்று கூறியிருப்பார்.
கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய சிவாஜி: அதற்கு உதாரணமாக சிவாஜி கணேசன் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய பின்பு அவரது நடிப்பை பார்த்தால் புரியும். படையப்பா, தேவர் மகன், ஒன்ஸ்மோர், பூப்பறிக்க வருகிறோம் என அவர் குணச்சித்திர நடிகராக தோன்றிய படங்களில் ஒரு சீனில்கூட மிகை நடிப்பு இருக்காது. அதுதான் ஒரிஜினல் சிவாஜி கணேசன். அவர் விரும்பியதையும் அதைத்தான் என்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.
ராதா ரவி பேட்டி: கடந்த 2001ஆம் ஆண்டு உடல்நல குறைவால் அவர் உயிரிழந்தார். சிவாஜி உயிரிழந்தாலும் பலரும் அவரது நடிப்பை பார்த்து சிலாகித்துவருகிறார்கள். திரைத்துறையில் உள்ள அனைவருக்குமே அவர் ரோல் மாடலாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் சிவாஜி குறித்து ராதா ரவி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சின்னதம்பி படத்தில் நான் நடித்ததை பார்த்த சிவாஜி கணேசன் என்னை பார்க்க வேண்டும் என்று கூறினார்.
தொவச்சுடுவேன்: அவர் அழைத்ததை அடுத்து நேராக சென்று பார்த்தேன். அவர் வீட்டின் ஹாலில் உட்கார்ந்திருந்தார். என்னை பார்த்ததும் 'வாடா.. எனக்கு ஒரு தங்கச்சி இருந்து அவளை ஒரு வேலைக்கார பையன் காதல் செஞ்சானா இதைத்தான் டா நான் செய்வேன். அவனை தொவச்சுடுவேன்' என்று கூறினார். அதுமட்டுமின்றி திருச்சி பாஷையில் ஒரு வார்த்தையையும் சொன்னார்" என்றார்.


Click it and Unblock the Notifications











