சிவாஜி அப்படி சொல்லும்போது எரிச்சலா வரும்.. அவர் பழமையான ஆளாகத்தான் இருந்தார்.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜிதான். இந்நிலையில் அவர் குறித்து ராதாரவி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முகத்தை மாற்றிய படம் பராசக்தி. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் மூலம்தான் சிவாஜி கணேசன் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தின் சிவாஜியை தவிர வேறு யார் அறிமுகமாகியிருந்தாலும் அதில் உள்ள வெயிட்டேஜை தாங்கியிருப்பார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் அனல் பறந்த கருணாநிதியின் வசனத்தை அடுத்தக்கட்டத்துக்கு சிவாஜி மட்டுமே எடுத்து சென்றார். முதல் படத்திலேயே அப்படி காட்சிகளும், வசனங்களும் அமைவது வரம். அது சிவாஜிக்கு கைகூடியது.
சிவாஜிதான் அடையாளம்: மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் இருப்பது உண்டு. ஆனால் யாரும் நேரில் பார்த்ததில்லை. சினிமாதான் அவர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது. அப்படி பலர் மன்னர்களாக நடித்தாலும் சிவாஜிதான் மன்னர்களுக்கு அடையாளமாக இருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் என யாரை நினைத்தாலும் சிவாஜிதான் ரசிகர்கள் கண் முன்பு வந்து செல்வார்.
கட்டுப்படுத்திய மகேந்திரன்: சிவாஜி போல் ஒரு நடிகர் இனி எங்குமே கிடைக்கமாட்டார். அது பெரும்பாலும் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்வார் என்ற விமர்சனமும் எழுந்ததை இங்கு கவனிக்க வேண்டும். அதற்கு இயக்குநர் மகேந்திரன் இப்படி பதில் சொன்னார், "சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். நான் அப்படி சொல்லமாட்டேன் சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஏற்ற கதையை இதுவரை யாருமே எழுதியதில்லை' என்று கூறியிருப்பார்.

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய சிவாஜி: அதற்கு உதாரணமாக சிவாஜி கணேசன் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய பின்பு அவரது நடிப்பை பார்த்தால் புரியும். படையப்பா, தேவர் மகன், ஒன்ஸ்மோர், பூப்பறிக்க வருகிறோம் என அவர் குணச்சித்திர நடிகராக தோன்றிய படங்களில் ஒரு சீனில்கூட மிகை நடிப்பு இருக்காது. அதுதான் ஒரிஜினல் சிவாஜி கணேசன். அவர் விரும்பியதையும் அதைத்தான் என்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.
ராதாரவி பேட்டி: அதுமட்டுமின்றி தன்னைவிட வயதில், அனுபவத்தில் குறைந்த இயக்குநர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர் அவர். உதாரணமாக படையப்பா படத்தின் ஒரு சீனில் ரவிக்குமார் நினைத்தபடி சிவாஜி நடிக்கவில்லை. ஆனால் அவரிடம் சொல்வதற்கு தயங்கி நின்ற ரவிக்குமாரிடம், 'என்ன வேண்டுமோ கேள்' என சொல்ல; இயக்குநரோ, இன்னும் கொஞ்சம் இயல்பாக நடியுங்கள் என சொன்னார். உடனடியாக சிவாஜியும், அதை கேட்க வேண்டியதுதானே. என் காலத்தில் எல்லாம் முதலில் நடித்த மாதிரிதான் இயக்குநர்கள் கேட்டார்கள். அதனால்தான் அதேபோன்று நடித்துவிட்டேன் என கூறி; ஓவர் ஆக்டிங்கை குறைத்துக்கொண்டவர். இந்நிலையில் சிவாஜி குறித்து ராதாரவி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன பேசினார்?: அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், "வீரபாண்டியன் படத்தில் சிவாஜியுடன் நானும், விஜயகாந்த்தும் நடித்தோம். ஷூட்டிங்கின்போது ஒருமுறை அவருக்கு எதிரே விஜயகாந்த்தை சாப்பிடுவதற்காக அமர வைத்துவிட்டேன். அதற்கு விஜயகாந்த்தோ பதறி, 'அவருக்கு முன்னாடி என்னை உட்கார சொல்றியே. அவர் கண்ணை பார்த்தாலே பயமாக இருக்கிறது' என்று பதறிவிட்டார். சிவாஜி அப்படித்தான். அவரது கண்களை பார்த்தாலே பயம் வந்துவிடும். அதேபோல் அப்போது என்னையும், விஜயகாந்த்தையும் பார்த்து, 'ம்ம் அதான் நல்ல திம்பிங்களே. தின்னுங்க' என சொல்வார். அந்த திம்பிங்களே என்ற வார்த்தையை கேட்கும்போதே எரிச்சலாக இருக்கும். அப்படி சொன்னால் ஒருவர் எப்படி சாப்பிட முடியும். அவர் பழமையான ஆளாகத்தான் இருந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











