Rajini: நைட் 2 மணிக்கு கமல் வீட்டுக் கதவை தட்டி காலில் விழப் போன ரஜினி... இப்படியொரு சம்பவமா..?
சென்னை: கடந்த ஒரு மாதமாகவே ரஜினியின் ஜெயிலர் படம் குறித்த டாக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜெயிலர் விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் வசூல் இந்த இரண்டையும் கடந்து, தற்போது ரஜினி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது கடந்த இரு தினங்களாக டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் இரவு 2 மணிக்கு கமல் வீட்டின் கதவை தட்டி அவரது காலில் ரஜினி விழப் போன சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

கமல் காலில் விழப் போன ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. இதனால், பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் படத்தின் சாதனை குறித்து ரசிகர்கள் விவாதித்து வந்தனர். பொன்னியின் செல்வன், விக்ரம் படங்களின் சாதனையை ஜெயிலர் தகர்க்கும் என சொல்லப்பட்டது.
ஆனால், உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி ஆசி வாங்கியது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை தொடர்ச்சியாக ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள், ரஜினிக்கு பலவிதமான கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நல்லவர்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தான் பயப்படுவேன் என ரஜினி பேசியதை, யோகி ஆதித்யநாத் காலில் அவர் விழும் வீடியோவுடன் எடிட் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கமல் காலில் விழப் போனது குறித்து ரஜினி பேசிய வீடியோவை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது கமலின் 100வது படமான ராஜபார்வை உருவாகும் போது மறைந்த நடிகர் சிவாஜியை சந்தித்துள்ளார் ரஜினி. அப்போது அவர் "என்னப்பா உன் நண்பன் கமல் ராஜ பார்வைன்னு படத்துக்கு டைட்டில் வச்சிட்டு கண் தெரியாத ஹீரோவா நடிக்குறானாமே. அப்படி இருந்தா நல்லா இருக்காது... நீயே உன் நண்பனிடம் சொல்லி புரிய வை" என்றாராம்.
அதற்கு முடியாது என சிவாஜியிடம் மறுப்புத் தெரிவித்துவிட்ட ரஜினி, "நீங்களே கமலிடம் சொல்லுங்க"ன்னு வந்துவிட்டாராம். எப்போதுமே கமல் நடித்துக்கொண்டிருக்கும் படம் குறித்து நான் அவரிடம் பேசமாட்டேன் என்றுள்ள ரஜினி, இன்னொரு சம்பவத்தை நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். கமல் நடிப்பில் 1989ல் வெளியான அபூர்வ சகோதரர்கள் படம் கோலிவுட்டின் மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அப்பு என்ற கேரக்டரில் கமல் குள்ளமாக நடித்தது எப்படி என இப்போது வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இந்தப் படம் வெளியான போது ரஜினிக்காக இரவு 11 மணிக்கு ஸ்பெஷல் ஷோ போடப்பட்டுள்ளது. 2 மணிக்கு படம் முடிந்ததும் நேராக வண்டியை கமல் வீட்டுக்கு விடச் சொல்லிவிட்டாராம் ரஜினி. எப்படியாவது கமலை பார்க்க வேண்டும் என அவர் வீட்டுக்குச் சென்ற ரஜினி, 2 மணிக்கு அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பி கட்டியணைத்துள்ளார். மேலும், "இந்தப் படத்தில் நடித்ததற்காக உங்கள் காலில் கூட விழலாம், வயதில் சிறியவர் என்பதால் விழவில்லை" என கமலிடம் ரஜினி கூறினாராம்.
இதனை ரஜினியே ஒரு விழாவில் பேசியதோடு, கமல் போன்ற ஒரு கலைஞன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது பெருமை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கமல் தான் எப்போதுமே தமிழ் சினிமாவின் கலைஞானி எனவும் ரஜினி பாராட்டியுள்ளார். இந்த வீடியோவை இப்போது நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











