Rajinikanth: இளையராஜா ஏ.ஆர். ரகுமான் இவங்க இரண்டு பேரும்.. ரஜினிகாந்த் சொன்ன தரமான விஷயம்..!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 171 வது படமான, கூலி படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், தான் நடித்து வெளியாகி பெரும் ஹிட் அடித்த ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இப்போதும் சூப்பர் ஸ்டாராக இளம் நடிகர்களுக்கு சவாலாகவே இருக்கின்றார். இவர், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தேனிசைத் தென்றல் தேவா குறித்து ஒரு மேடையில் பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகராக உள்ளார். வட இந்திய சினிமாவில் இருப்பவர்கள் தமிழ் சினிமாவை அடையாளம் காண்கிறார்கள் என்றால், அதில் சூப்பர் ஸ்டாரின் பெயர் இல்லாமல் இருக்காது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். படத்தின் வெற்றியின் அளவீடு, தியேட்டரில் ஓடும் நாட்களில் இருந்து இப்போது வசூல் என வந்து நிற்கும் வரை அனைத்து வகை ஃபார்மெட்டிலும் வெற்றி கொடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் மாபெரும் நடிகராக மக்கள் மத்தியில் சென்று சேர, அவரது படங்களின் வெற்றிகளும் படத்தில் வைக்கப்பட்ட காட்சிகளும் காரணம் என்றால், பலர் சூப்பர் ஸ்டார் மீது மாபெரும் அன்பு வைக்க, சூப்பர் ஸ்டார் தான் தங்களது வாழ்க்கை எனக் கருத முக்கியமான காரணங்களில் அவரது படங்களில் இடம் பெற்ற பாடல்களின் பின்னணி இசையும் தான். சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைப்பது என்றால், இசையமைப்பாளர்களுக்கு எப்போதும், சவாலான விஷயம் தான். காரணம், இசை அமைப்பாளர்கள் படத்தின் காட்சி, கதாபாத்திரங்கள் நடிப்பு மட்டும் இல்லாமல், சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களையும் மனதில் வைத்தே இசை அமைக்க வேண்டிய உயரத்திற்கு வளர்ந்துள்ளனர்.
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், தேவா போன்றோர்கள் இசையமைத்த படங்களும் பாடல்களும் செம ஹிட். அவர்களின் இசையில் உருவான பாடல்கள், பின்னணி இசை குறித்து குறிப்பிட்டால் பல புத்தகங்களே எழுதலாம். இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும்போது, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தேவா குறித்து பேசியது, இணையத்தில் இப்போது உலா வருகிறது.
இசைஞானி - இசைப்புயல்: அதாவது அவர் பேசுகையில், “ இசைஞானி இளையராஜா, இசையில் அவர் ஒரு இமயம். தனது அண்ணனிடம் இசையைக் கற்றுக் கொண்டு, ஜி.கே. வெங்கடேஷிடம் இசையை முறையாக கற்றுக் கொண்டு அதன் பின்னர் இசை அமைக்க வந்தார். மாபெரும் இசையமைப்பாளராக உள்ளார். அதேபோல் ஏ.ஆர். ரகுமான் தந்தை ஒரு இசைக் கலைஞர். இவரும் இசையில் ஒரு ஜாம்பவான். இவர்கள் இருவரும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில், இசையை முறையாக கற்றுக் கொள்ளாமல் வந்து, இசைத் துறையில் வென்று நின்றவர் தேவா.

தேவா: தேவாவிடம், ஒரு ஆர்மோனியமும் தபேலாவும் அவரது தம்பிகளும் தான் இருந்தார்கள். அவர்களைக் கொண்டு, அன்றைக்கு அந்த இரண்டு இசை மேதைகளுக்கு மத்தியில், வென்று காட்டியவர் தேவா. தேவா முறையாக இசையைப் படிக்காதவர்” என தேவாவை புகழ்ந்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும், தேவாவின் இசையில் உருவான டைட்டில் கார்டு தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக தேவா, யாரிடத்திலும் ராயல்டி கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











