நீங்க அடி வாங்குங்க கமல்.. என்னால முடியாது.. ரஜினி ரொம்ப உஷார்தான்.. என்னாச்சு தெரியுமா?
சென்னை: கமல் ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி என்பதை தாண்டி படுமோசமான விமர்சனத்தையும் ட்ரோல்களையும் சந்தித்தது. அவரது திரையுலக வரலாற்றிலேயே இந்தியன் 2 அளவுக்கு வேறு எந்தப் படமும் ட்ரோல்களை சந்தித்ததில்லை. இப்போது அவர் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து ஒரு சம்பவம் தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் கமல் ஹாசன். 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் திடீரென அரசியலுக்கு சென்றார். ஆனால் அங்கு அவரால் நினைத்தபடி நிலைக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவருக்கு அந்தப் படம் மெகா ஹிட்டாக அமைந்தது. அவரது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த அப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2: அந்தப் படத்துக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஏற்கனவே கமலும், ஷங்கரும் இணைந்திருந்த இந்தியன் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. எனவே அதுபோலவே இதுவும் அமையும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார்கள் கமலின் ரசிகர்கள். ஆனால் அவர்களுக்கு இரண்டு பேரும் சேர்ந்து உச்சக்கட்ட ஷாக்கை கொடுத்தார்கள். இந்தியன் படத்தின் அடிநாதமே வர்மக்கலைதான். அதனை இப்படத்தில் காமெடித்தனமாக யூஸ் செய்துவிட்டார்களே என்று படம் பார்த்தவர்கள் நொந்துகொண்டார்கள் என்பது தனிக்கதை. படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது.
அடுத்த படங்கள்: கமல் ஹாசன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் திரிஷா, சிம்பு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் இணைந்த நாயகன் படம் போல் இதுவும் ஹிட்டாக வேண்டும்; ஷங்கரும் கமலும் இரண்டாவது முறையாக இணைந்தபோது நடந்ததுபோல் மணியும், கமலும் இரண்டாவது முறை இணைந்திருப்பதில் விபரீதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என ரசிகர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது.

பாபநாசம்: இதற்கிடையே கமல் ஹாசனின் படங்கள் என்றாலே அதில் ஒரு புதுமை இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. அவர் பல படங்களை பிற மொழிகளின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கி தமிழில் விட்டாலும்; அந்த மாதிரியான படங்கள் கமலின் பார்வைக்கு மட்டும் எப்படி படுக்கிறது என்பது ஆச்சரியமே. அந்தவகையில் கடந்த 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம்தான் த்ரிஷ்யம். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் கமல் ஹாசனின் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது.
ரஜினிகாந்த் கொடுத்த ஐடியா: அந்தப் படம் தமிழிலும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஆனால் இந்தப் படத்தில் முதலில் ரஜினிகாந்த்தான் நடிப்பதாக இருந்ததாம். அதாவது, த்ரிஷ்யம் படத்தை தமிழில் உருவாக்கலாம் என்று தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி ஆசைப்பட்டபோது, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவரிடம் 'இப்படத்தில் ரஜினிகாந்த்தை கொண்டு வாருங்கள்' என்று சொன்னாராம். அதற்கு சுரேஷோ, ரஜினி ஒத்துக்கொள்வாரா என்று கேட்டதற்கு, 'நீங்கள் படத்தை போட்டு காண்பியுங்கள்' என்று தனஞ்ஜெயன் சொல்ல; அதுபடியே நடந்திருக்கிறது. படத்தை பார்த்த ரஜினி இதில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
நீங்க அடி வாங்குங்க கமல் ஹாசன்: அதுமட்டுமின்றி, 'என்னை ஒரு போலீஸ் அதிகாரி எட்டி உதைப்பது போலெல்லாம் பார்த்தால் எனது ரசிகர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.. எனவே கமல் செய்தால்தான் இது சரியாக இருக்கும்' என்று சொன்னாராம். சுரேஷ் பாலாஜியிடம் சொன்னது மட்டுமின்றி கமல் ஹாசனுக்கு ஃபோன் செய்த ரஜினிகாந்த், 'கமல் நீங்கள் த்ரிஷ்யம் படத்தில் நடியுங்கள். நீங்கள் செய்தால்தான் அது நன்றாக இருக்கும். நீங்கள் படத்தில் அடி வாங்கலாம். ஏனெனில் நீங்கள் இதுபோன்று பல படங்களில் அடி வாங்கிவிட்டீர்கள். ஆனால் நான் அப்படி செய்தால் சரியாக வராது' என்று கூறினாராம். அதற்கு பிறகுதான் த்ரிஷ்யம் படத்தை பார்த்து பாபநாசம் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம் கமல் ஹாசன். இதனை தனஞ்ஜெயன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

பிரியாத நட்பு: ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். இரண்டு பேரையுமே கே.பாலசந்தர்தான் திரையுலகத்தில் அறிமுகப்படுத்தினார். ஒருகட்டத்தில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று முடிவெடுத்து தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தார்கள். அப்படி அவர்கள் நடித்து இந்த உயரத்துக்கு சென்றிருக்கிறார்கள். அதேபோல் இருவருக்கும் போட்டியிருந்தாலும் அவர்கள் தங்களுக்குள் இருந்த நட்பினை எப்போதும் விட்டுக்கொடுத்ததே இல்லை.
கமலின் அட்வைஸ்: கமல் 50 நிகழ்ச்சியில்கூட தங்களது நட்பு குறித்து கமல் ஹாசன் பெருமையாக பேசியிருப்பார். அதேபோல் படையப்பா படத்துக்கு இரண்டு இடைவேளைகள் விடலாம் என்று ரஜினிகாந்த் சொன்ன ஐடியாவை மறுக்க முடியாமல் அதன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திணறியபோது, கமல்தான் ரஜினிக்கு ஃபோன் செய்து இரண்டு இடைவேளைகள் என்பதெல்லாம் தமிழ் சினிமாவுக்கு ஒத்துவராதது என்று சொன்னார். அதுமட்டுமின்றி தளபதி படத்தில் தான் நடிக்க கஷ்டப்பட்ட சமயத்தில் கமலிடம் ஃபோன் செய்துதான் எப்படி நடித்தால் மணிரத்னம் காம்ப்ரமைஸ் ஆவார் என்று ரஜினிகாந்த் கேட்டு தெரிந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் அந்தப் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் இப்படிப்பட்ட கதைகளில் நடித்ததன் காரணமாக ரஜினிகாந்த்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்; தொடர்ந்து இதுபோன்று சமூக அக்கறை உள்ள கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் கோரிக்கைகள் வைக்கிறார்கள்.
கூலி கூட்டணி: வேட்டையன் திரைப்படத்தை முடித்த ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவின் சென்சேஷனலாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். ரஜினியுடன் அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், அபிராமி உள்ளிட்டோர் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இதில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது.
ஜெயிலர் 2: கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார் ரஜினி. ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. நிச்சயமாக அதுபோன்றே இந்தப் படமும் மெகா ஹிட்டாகும் என்று உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாஸ் ரெஸ்பான்ஸை பெற்றது. அதனைப் பார்த்த ரசிகர்களோ உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











