ரஜினிகாந்த்தான் மாப்பிள்ளையா?.. நீங்க என்ன பைத்தியமா?.. அதிர்ச்சியான அனிருத் அப்பா.. இவ்வளவு நடந்திருக்கா?
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான கூலி படுதோல்வியடைந்தது. இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 173ஆவது படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தையும் முடித்துவிட்டு ரஜினி நடிப்பாரா இல்லை சிறிது காலம் ஓய்வில் இருப்பாரா என்பது தெரியவில்லை. இந்நிலையில் நடிகரும், அனிருத்தின் தந்தையுமான ரவி ராகவேந்திரா கொடுத்திருக்கும் பேட்டி கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ரஜினிக்கு இப்போது 75 வயது. இந்த வயதிலும் இளைஞர்போல் படு ஆக்டிவ்வாக இருக்கிறார். லோகேஷுடன் கூட்டணி அமைத்து கொடுத்த கூலி தோல்வியடைய; வெற்றி கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. கண்டிப்பாக முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் ஹிட்டடிக்கும் என்ற முழு நம்பிக்கையும் ரஜினியின் ரசிகர்களிடம் அபரிமிதமாகவே காணப்படுகிறது.
தலைவர் 173: ஜெயிலர் 2வை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் தலைவர் 173 படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதனை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக யார் இந்தப் படத்தை இயக்குவார் என்ற கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது. அநேகமாக யாரேனும் ஒரு இளம் இயக்குநர்தான் இப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுவார் என சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் 75: ரஜினியின் 75ஆவது பிறந்தநாள் கடந்த வாரத்தில் தமிழ்நாடு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. படையப்பா ரீ ரிலீஸ், ரஜினி திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவும், ரஜினி 75 என அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இந்த வருடம் முப்பெரும் விழா போல் அமைந்துவிட்டது. நீண்ட நாட்கள் குடும்பத்துடன் எந்த பிரச்னையும் இல்லாமல் தலைவர் வாழ வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
அனிருத் அப்பா பேட்டி: இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தையுமான ரவி ராகவேந்திரா கலாட்டா யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் அந்தப் பேட்டியில், "நான் கோயம்புத்தூரில் வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் எனது அம்மா எனக்கு ஃபோன் செய்து ஜில்லுவுக்கு (லதாவை வீட்டில் ஜில் என்றுதான் கூப்பிடுவோம்) திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் என சொன்னார். எனக்கு ஒரே ஷாக்.
ரஜினி மாப்பிள்ளையா? நீங்கள் பைத்தியமா?: உடனே அவர் இரு இரு என்று சொல்லிவிட்டு, 'மாப்பிள்ளை ரஜினி' என சொன்னார்கள். மேற்கொண்டு எனக்கு கோபம். உடனே நான், 'நடிகர் ரஜினிகாந்த்தான் மாப்பிள்ளையா. உண்மையைத்தான் சொல்கிறீர்களா?.. உங்களுக்கு என்ன பைத்தியமா?' என கேட்டுவிட்டேன். ஏனென்றால் லதாவுக்கு அப்போது ரொம்பவே சின்ன வயது. திடீரென்று திருமணம் என சொன்னவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு வீட்டுக்கு வந்து பேசிக்கிறேன் என சொல்லி அன்றைய இரவே வீட்டுக்கு வந்தேன்.
வீட்டில் ரஜினி: நான் இரவு 8 மணிக்கு வீட்டுக்கு சென்றால்; அங்கே ரஜினிகாந்த் அமர்ந்திருக்கிறார். நானும் அவரும் மொட்டை மாடிக்கு சென்று தனியாக 20 நிமிடங்கள்வரை பேசினோம். அப்போது அனைத்தையும் ஓபனாக சொன்னார். தன்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது என்பதுவரை சொன்னார். அவரிடம் ஒரு நேர்மையும், உண்மையும் இருந்தது. அவரை பற்றி எழுதப்பட்டது, படிக்கப்பட்டதும், சொல்லப்பட்டதும் உண்மை இல்லை என்று எனக்கு புரிந்தது. நானும் கன்வின்ஸ் ஆகிவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











