எப்போ பார்த்தாலும் ஒரே கூட்டம்.. தனியா இருக்கணும்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபனா சொல்லிருக்காரே
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக கூலி திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் மோசமான தோல்வியையும், ட்ரோலையும் சந்தித்தது. அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2, கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம், கமலுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.
இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கம்பேக் கொடுத்தார். அதற்கு பிறகு வந்த வேட்டையன், கூலி வாரிவிட்டன. அதிலும் கூலி திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ரஜினியின் நடிப்பு மட்டுமே படத்தில் ரசிக்கும்படி இருந்தது. மற்றபடி லோகேஷின் மேக்கிங், கதை, அதை ட்ரீட் செய்திருந்த விதம் என எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை.

அடுத்த படங்கள்: அடுத்ததாக அவரது நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 வரப்போகிறது. இந்த வருடத்துக்குள் கண்டிப்பாக ரிலீஸாகிவிடும். அதேபோல் நெல்சன் இயக்கத்தில் கமலுடன் சேர்ந்து நடிக்கிறார் ரஜினி. அதுமட்டுமின்றி கமல்ஹாசன் தயாரிப்பிலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அதை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டுவிட்டார் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. அது உண்மையா என்பது தெரியவில்லை.
ரஜினியின் குணம்: ரஜினிகாந்த்தின் குணத்தை பொறுத்தவரை தன்னுடைய கரியர் ஆரம்பத்தில் சில வருடங்கள் ரொம்பவே முரண்டு பிடித்தவராக இருந்தார். யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை சொல்வது; ஏதேனும் பிரச்னை என்றால் முதல் ஆளாக நிற்பது என அந்த வயதில் யாராலும் அடக்க முடியாத முரட்டுக்காளையாகவே திகழ்ந்தார் சூப்பர் ஸ்டார். அவரது அந்த குணத்தினால் ஏகப்பட்ட பிரச்னைகளையும் அவர் சந்தித்திருக்கிறார். காலம் செல்ல செல்ல அவர் தன்னுடைய நடத்தைகளில் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்தார்.
பக்குவமான ரஜினி: அவர் போகப்போக முழுமையாக பக்குவப்பட்டுவிட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தன்னை பற்றி அவதூறாகவும், மட்டமாகவும் பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு பக்குவமான பதிலையே கொடுத்திருந்தார். மேலும், மு.க.ஸ்டாலின் தோற்றதை அடுத்து நேரில் சென்று அவரை சந்தித்து பேசினார். வெற்றியில் மட்டுமில்லை தோல்வியிலும் நான் உங்களுடனேயே இருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அவரது நல்ல மனம் எல்லோராலு பாராட்டப்பட்டது.
ட்ரெண்டாகும் பேட்டி: இன்றுகூட அவரிடம் விஜய் வென்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவரோ தனது ட்ரேட் மார்க் வணக்கத்தை வைத்துவிட்டு சென்றுவிட்டார். ஏற்கனவே ரஜினிக்கும், விஜய்க்கும் ஆகாது என்று ஒரு பேச்சு வேறு ஓடுகிறது. இந்நிலையில் ரஜினியின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. 90களில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில், "எனக்கு தனிமைதான் பிடிக்கிறது. தனியாக இருக்க வேண்டும். எப்போதுமே என்னை சுற்றி கூட்டம் இருப்பதால் அப்படி தோன்றலாம். நான் தத்துவங்கள் உள்ளிட்ட விஷயங்கள் அடங்கிய புத்தகங்களை நிறைய படிப்பேன்" என்றிருந்தார்.


Click it and Unblock the Notifications
