Rajinikanth: ரஜினிக்கு திருஷ்டி சுத்தியதும் அண்ணி சொன்ன வார்த்தை.. வாழ்க்கை மாற இதுவும் ஒரு காரணமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் மொத்த இந்திய சினிமாவுமே உற்று நோக்கி வரும் நடிகர். 75 வயது ஆகிவிட்டது. பேரன் பேத்தி எல்லாம் எடுத்தாகிவிட்டது. சினிமாவிற்குள் காலடி எடுத்துவைத்து 50 ஆண்டுகள் ஆகிறது. அன்றைக்கும் இன்றைக்கும் மட்டுமல்லாமல் என்றைக்கும் சூப்பர் ஸ்டார் எனக் கூறும் அளவுக்கு இருக்கிறாரே என பல நடிகர்களும் யோசித்து வருகிறார்கள். இப்படியான ரஜினிகாந்த் வாழ்க்கையில் முன்னேற அவரது குடும்பமும் முக்கியமானதாக இருந்துள்ளதை அவரே பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த்தின் அண்ணனான சத்தியநாரயண ராவின் மனைவியான கலாவதி சத்யநாராயணன் ரஜினிக்கு மிகவும் முக்கியமான அறிவுரையைக் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ஏற்கனவே உருவாகியுள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் மூலம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியோடு ரஜினிகாந்த் சினிமா உலகில் காலடி எடுத்துவைத்து 50 ஆண்டுகள் ஆவதால், அதை முன்னிட்டு கூலி படத்தை இந்த தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா இருக்கும் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் பேச்சு: இசை வெளியீட்டு விழா என்றாலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு மற்றும் அவர் கூறும் குட்டிக் கதைக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டு இருப்பார்கள். அவரது பேச்சும் குட்டிக் கதையும் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு செம ஃபயராக இருக்கும். சில நேரங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செம ஜாலியாக எல்லாம் பேசியுள்ளார். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில் சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.
அண்ணியின் அறிவுரை: ஒரு நாள் இரவு நான் வீட்டுக்கு இரவு 2 மணிக்கு போனேன். வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது. நான் அப்போது குடித்திருந்தேன். நான் குடித்திருந்தால் அண்ணனிடம் போகமாட்டேன். எனவே நான் அமைதியாக வீட்டிற்குள் போனேன். உடனே அண்ணன் என்னைக் கூப்பிட்டு கட்டிப்பிடித்துக் கொண்டார். அதன் பின்னர் எனது அண்ணி எனக்கு ஒரு முழு பூசணிக்காயை வைத்து திருஷ்டி சுற்றினார். அப்போது எனது அண்ணி என்னிடம் கூறியது, " நல்லா நடிக்கிற, உனக்கு நிறைய திறமை இருக்கு. இந்த குடிப்பழக்கத்தை மட்டும் விட்டுவிடுப்பா" எனக் கூறினார்.

குடி மட்டும் வேண்டாம்: நான் உங்களுக்கு ஒன்று கூறுகிறேன், அந்த குடிப்பழக்கம் மட்டும் எனக்கு இல்லாமல் இருந்திருந்தால், இன்றைக்கு உள்ள இந்த ரஜினி எல்லாம் ஒன்றுமே இல்லை எங்கேயோ இருந்திருப்பேன். எனவே நீங்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகாதீர்கள்" என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், ரஜினிகாந்தின் அண்ணி அவரை நல்வழிப்படுத்த நல்ல அறிவுரை கூறியுள்ளார் என பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











