சிகரெட் அடிக்கும் பழக்கம்.. எம்ஜிஆர் என்னிடம் சொல்ல ஆசைப்பட்டது என்ன தெரியுமா?.. ரஜினி ஓபன் டாக்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் அந்தப் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றதன் காரணமாக கூலி படத்தை மெகா ஹிட்டாக கொடுத்துவிட வேண்டுமென்பதில் அவரும், லோகேஷ் கனகராஜும் உச்சக்கட்ட ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ரஜினி ரசிகர்களோ கமலுக்கு எப்படி விக்ரம் படம் அமைந்ததோ அப்படி கூலி அமைய வேண்டும் என்று ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.
ரஜினி என்ற பெயருக்கு எந்த வித முன் அறிமுகமும் தேவையில்லை. அந்த அளவுக்கு அவர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை பிரபலம். கிட்டத்தட்ட 50 வருடங்களாக அவர் சினிமாவில் தனக்கான இடத்தை நிலையாக பிடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார், தலைவர் என்று அவரை ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள். இதுவரை 170 படங்களில் நடித்திருக்கும் அவர்தான் திரைத்துறையில் இருக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன், கூலி: அவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கம் என்பதாலும்; அவருடன் ரஜினி முதன்முறையாக இணைந்திருக்கிறார் என்பதாலும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் நடித்து முடித்துவிட்டு அவர் யாரின் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அரசியலில் ரஜினி: ரஜினிகாந்த்தை பொறுத்தவரை அவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு அதனை அவர் உறுதியும் செய்தார். ஆனால் இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை அவர் அரசியலுக்கு வரும் முடிவிலிருந்து ஜகா வாங்கினார். அது அவருக்கு பெரும் விமர்சனத்தை பெற்றுக்கொடுத்தது. ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்; அவர்கள் எல்லாம் பாவம் என்று பலரும் ஓபனாகவே அவர் மீது வார்த்தை தாக்குதலை தொடுத்தார்கள்.
ரஜினி தெளிவுதான்: அவர் அரசியல் களத்துக்கு வரவில்லை என்றாலும் அரசியல் மேடைகளில் தலைகாட்டி வருகிறார். அண்மையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில்கூட அவர் கலந்துகொண்டு; திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் சீனியர் ஸ்டூடண்ட்ஸ் என்று பேச; அவர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை கிண்டல் செய்துவிட்டார் என்று சர்ச்சை கிளம்பியது. அதற்கு ரஜினி, துரைமுருகன் இருவருமே விளக்கமளித்துவிட்டதால் பிரச்னை ஓய்ந்தது. முக்கியமாக ரஜினிகாந்த் ஒரு கட்சியின் மேடையில் மட்டும் தலை காண்பிப்பதை வழக்கமாக வைத்திருக்காதவர்.
அதிமுக மேடையில்: சில மாதங்களுக்கு முன்பு திமுக மேடையில் தலை காட்டிய ரஜினிகாந்த் இப்போது அதிமுக மேடையில் தலை காட்டியிருக்கிறார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார். இப்படி தனக்கு எந்தவித பாதிப்பும் வராத மாதிரி காய்களை நகர்த்தி செல்வதில் ரஜினிகாந்த் எப்போதும் தெளிவுதான். சூழல் இப்படி இருக்க எம்ஜிஆரின் மனைவியும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான ஜானகியின் நூற்றாண்டு விழா நடந்தது.இதில் ரஜினிகாந்த் வீடியோ மூலம் பேசினார்.
ரஜினிகாந்த் பேச்சு: அவர் பேசுகையில், "எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் சாதாரண சாப்பாடு இருக்காது. சைவம், அசைவம் என அனைத்துமே இருக்கும். எப்போது நூற்றுக்கணக்கானோர் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். ஜானகியை நான் மூன்று முறை சந்தித்திருக்கிறேன். ஒருமுறை சந்திக்கும்போது அவரது கைகளாலேயே எனக்கு காஃபி போட்டுக்கொடுத்தார். அந்த சமயத்தில் நான் சிகரெட் அதிகம் அடித்த சமயம்.அப்போது அவர் என்னிடம் ஒன்று கூறினார்.
எம்ஜிஆரின் ஆசை: அதாவது, ரஜினிகாந்த் இப்படி சிகரெட் பிடிப்பது போல் நடித்துக்கொண்டிருந்தால் அவரை பின் தொடரும் பலரும் அப்படித்தான் செய்வார்கள். அதனால் அவர் அப்படி செய்யக்கூடாது என்று தன்னிடம் எம்ஜிஆர் கூறியதாக ஜானகி என்னிடம் கூறினார். அதுதான் எம்ஜிஆர் என்னிடம் சொல்ல ஆசைப்பட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











