வீரப்பனை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் - புனித் ராஜ்குமார் மேடையில் கொந்தளித்த ரஜினிகாந்த்
சென்னை: நடிகர் புனித் ராஜ்குமார் படமான அப்பு படத்தின் 100ஆவது நாள் விழாவில் ரஜினி பேசிய பேச்சு தற்போது ட்ரெண்டாகியுள்ளது.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் ரஜினிகாந்த். பேருந்து நடத்துனராக இருந்து சினிமா மீது இருக்கும் ஆர்வத்தினால் சினிமா கல்லூரியில் சேர்ந்தவர். பாலசந்தர் அறிமுகப்படுத்தினாலும் ஆரம்பகாலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார்.

கமலுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த்
அதுமட்டுமின்றி தனது கேரியரின் ஆரம்பகாலத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்தார் ரஜினிகாந்த். ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட படங்களில் கமலுடன் இணைந்து நடித்தார் ரஜினிகாந்த். ஒருகட்டத்தில் ரஜினியை அழைத்த கமல் ஹாசன் இணைந்து நடித்துக்கொண்டிருந்தால் இருவருமே முன்னேற முடியாது என அறிவுரை சொல்ல ரஜினி தனியாக நடிக்க ஆரம்பித்தார்.

சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த்
தனியாக நடிக்க ஆரம்பித்தது தனக்கென பிரத்யேக உடல்மொழியையும், ஸ்டைலையும் உருவாக்கிக்கொண்டார் ரஜினிகாந்த். அவரது நடிப்பும், ஸ்டைலும், ரசிகர்களை கவர உச்சத்திற்கு சென்றார். அவரது நடை, உடை, பாவனையை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் என அழைக்கத் தொடங்கினர். இன்றுவரை ரஜினிகாந்த் அதே பட்டத்துடன் வலம் வருகிறார். அதுமட்டுமின்றி திரையுலகில் இருப்பவர்களும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

ரஜினிகாந்த்தின் கடும் கோபம்
ரஜினிகாந்த் தனது மனதில் என்ன நினைக்கிறாரோ அதனை அப்படியே கொட்டிவிடும் பழக்கமுடையவர். தனது திருமணம் குறித்த விஷயத்தில் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என பேசியது என்று அந்தப் பட்டியல் மிக நீளமாகவே செல்லும். ஆனால் காலப்போக்கில் பக்குவமடைந்த ரஜினிகாந்த் தனது கோபத்தை, மனதில் பட்டதை பேசும் குணத்தை சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டார்.

வீரப்பனை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும்
இப்போது கோபத்தை ரஜினி குறைத்துக்கொண்டாலும் அவர் ஆரம்பகாலத்தில் மேடையில் கோபமாக பேசிய விஷயங்கள் இப்போதும் பலரால் நினைவுகூரப்படுகிறது. அப்படி புனித் ராஜ்குமார் பட விழா மேடையில் ரஜினி பேசியது குறித்து காணலாம். அதாவது புனித் ராஜ்குமார் நடிப்பு அப்பு என்ற படத்தின் 100ஆவது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "சந்தன கடத்தல் வீரப்பன் போன்ற ஒருவனை நான் பார்த்ததே இல்லை. அவன் ஒரு ராட்சசன். அவனை எல்லாம் சூரசம்ஹாரம் செய்ய வேண்டும்" என கொந்தளித்து பேசினார்.

வீரப்பனை தாக்கி ரஜினி பேச காரணம் என்ன?
புனித் ராஜ்குமாரின் தந்தைதான் கன்னட சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ராஜ்குமார். அவரை வீரப்பன் கடத்தி சில மாதங்கள் காட்டுக்குள் வைத்திருந்தார். அப்போது அவரை வீரப்பனிடமிருந்து மீட்பதற்கு தமிழ்நாடு, கர்நாடகா அரசுகள் மட்டுமின்றி ரஜினிகாந்த்தும் தீவிரமாகவே முயன்றார். இதற்காக அவர் அரசியல் தலைவர்களை சந்திப்பது என முனைப்போடு செயல்பட்டார். ஏனெனில் ரஜினிகாந்த்திற்கு ராஜ்குமாரை நிறையவே பிடிக்கும். இதனால்தான் புனித் ராஜ்குமார் பட விழா மேடையில் வீரப்பனை ரஜினிகாந்த் கடுமையாக தாக்கி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











