ரஜினி படத்தை கொஞ்ச நேரத்துக்கு மேல பார்க்க முடியல.. பழைய கதை.. ரமேஷ் கண்ணா சல்லி சல்லியா நொறுக்கிட்டாரே!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று கூலி திரைப்படம் வெளியானது. அதீத ஆவலுடன் படம் பார்க்க சென்ற ரசிர்கள் தங்களது நெகட்டிவ் விமர்சனங்களையே அதிகம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் முதல் நாளில் உலக அளவில் மொத்தம் 170 கோடி ரூபாயை படம் வசூலித்திருப்பதாக ட்ராக்கர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான ரமேஷ் கண்ணா கொடுத்திருக்கும் பேட்டி கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கிய தர்பாரும், சிவா இயக்கிய அண்ணாத்த படமும் சூப்பர் ஸ்டாருக்கு கெட்ட கனவுகளாகவே இருக்கும். அந்த இரண்டு படங்களும் அவருக்கு கொடுத்த ரிசல்ட்டுகள் அப்படி. படம் தோல்வி என்பதோடு மட்டுமில்லாமல் கடுமையான ட்ரோல்களை சந்தித்து; அவரது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு சென்றன என்பது நினைவுகூரத்தக்கது.
மாற்றம் தந்த ஜெயிலர்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இப்படமும் விமர்சன ரீதியாக பெரிதாக கொண்டாடப்படவில்லைதான்; இந்தியன் உள்ளிட்ட படங்களில் தவறான வழியில் செல்லும் மகனை கொல்வதுதான் கதையின் ஒன்லைன். அதேசமயம் நெல்சனின் மேக்கிங், ரஜினியின் எனர்ஜி, நடிப்பு, ஸ்டைல் என அத்தனையும் அப்படத்தை மெகா ஹிட்டாக்கியது. உலகளவில் 700 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்தது. அடுத்து வெளியான வேட்டையன் சுமார்தான்.

கூலியும் அதே ரகம்தான்: இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். 74 வயதில் இளம் இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை பார்த்து பலரும் சந்தோஷப்பட்டாலும்; படத்தின் கதைகள்தான் கோளாறு செய்கின்றன. இந்தப் படத்திலும் பெரிய கதையெல்லாம் ஒன்றும் இல்லை. நண்பரை கொலை செய்தவர்களை பழி வாங்கும் ஹீரோ என்ற பழைய கதைதான்.
இப்படி பழைய கதைகளை பட்டி டிங்கரிங் பார்த்து சில மாஸ் சீன்கள், ரஜினியை புகழ்ந்து சில பாடல்கள், பான் இந்தியா ஸ்டார்கள் ஆகியவற்றை வைத்து படத்தை இயக்குநர்கள் ஒப்பேத்திவிடுகிறார்களோ என்ற சந்தேகம் வலுக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் படம் பற்றி இயக்குநரும், நடிகரும், ரஜினியின் நண்பருமான ரமேஷ் கண்ணா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஜெயிலரை பார்க்க முடியவில்லை: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தை எல்லாம் கொஞ்சம் நேரத்துக்கு மேல் பார்க்க முடியவே இல்லை. சரி என்னதான் கதை என்று பார்த்தால் மகனை கொன்றுவிடுகிறார். இதுதானே சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தின் கதை. ஆனால் அந்தப் படத்தில் ஒரு ஃபேமிலி ட்ராமா இருந்தது; திரைக்கதையோடு இழுத்து சென்றார்கள். ஜெயிலர் அப்படி இல்லையே. படம் முழுக்க எல்லோரையும் சுடுகிறார். கடைசியில் மகனையும் சுடுகிறார் அவ்வளவுதான்" என்றார். ரஜினி இப்போது ஜெயிலர் 2வில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











