Vijayakanth - காவிரி பிரச்னை.. ஒற்றை ஆளாக வாட்டாள் நாகராஜை ஓடவிட்ட விஜயகாந்த்.. மரண மாஸ் கேப்டன்
சென்னை: Vijayakanth (விஜயகாந்த்) காவிரி பிரச்னை வரும்போதெல்லாம் ரகளை கட்டி அடிக்கும் வாட்டாள் நாகராஜை விஜயகாந்த் ஒற்றை ஆளாக ஓட விட்டிருக்கிறார்.
மதுரையை பூர்வீகமாக கொண்ட விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வந்தபோது பெரும் போராட்டங்களை சந்தித்தார். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்றாலும் தனது சொந்த காலில் நின்றே ஆக வேண்டும் என்ற வெறியில் எந்த சொகுசையும் அனுபவிக்காமல் ரொம்பவே கஷ்டப்பட்டவர். ஒருவழியாக பட்ட கஷ்டத்துக்கெல்லாம் விமோசனமாக சினிமாவில் வென்று உயர்ந்த இடத்துக்கு சென்றார்.

கறுப்பு எம்ஜிஆர்: விஜயகாந்த்தை பொறுத்தவரை தான் வென்றுவிட்டோம் அது போதும் என்று மட்டும் நினைக்காமல் கஷ்டப்பட்ட பெரும்பாலானோருக்கு உதவியதுண்டு. அவரது அலுவலகம் சென்றால் போது வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வரலாம் என்ற நிலைதான் நிலவியது. விஜயகாந்த் இன்றுவரை அனைவராலும் மதிக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். உணவு மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் பல உதவிகளை பலருக்கு செய்திருக்கிறார்.
உணர்வு: வெறும் நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழ் இன உணர்வு அதிகம் உள்ளவர் விஜயகாந்த். ஈழ படுகொலையை கண்டித்து முதன்முறையாக விஜயகாந்த் தலைமையில்தான் தமிழ் நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தினர். அதேபோல் அந்த உணர்வின் வெளிப்பாடாகத்தான் தனது மகனுக்கு பிரபாகரன் என்றும் பெயர் வைத்தார் விஜயகாந்த்.

தமிழ்ச்செல்வன் ஷூட்டிங்: இந்த சூழலில் பாரதிராஜா அவரை வைத்து இயக்கிய தமிழ்ச்செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது படத்தின் ஷூட்டிங்கை கர்நாடக மாநிலம் மைசூர் அருகே இருக்கும் கொல்லேகால் பகுதியில் வைத்திருந்திருக்கிறார் பாரதிராஜா. அந்த சமயத்தில் விஜயகாந்த் காவிரி பிரச்னையில் கர்நாடகத்துக்கு எதிராக குரல் கொடுத்திருந்தாராம்.
போர்டு அடிக்கக்கூடாது: சூழல் இப்படி இருக்க விஜயகாந்த் ஷூட்டிங்குக்கு வந்திருக்கிறார் என்று விஷயம் அறிந்த வாட்டாள் நாகராஜும் அவரது ஆட்களும் பட யூனிட் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு வந்து தமிழ் பெயர் கொண்ட க்ளாப் போர்டை கர்நாடக மாநிலத்துக்குள் அடிக்கக்கூடாது என்று கூறினராம். ஷூட்டிங் ஆட்கள் மொத்தம் பத்து பேர்; காவல் துறை அதிகாரிகள் நான்கு பேரு இருந்திருக்கிறார்கள். ஆனால் போலீஸாரோ எதுவுமே செய்யாமல் அமைதியாக இருந்திருக்கின்றனர்.
களத்தில் குதித்த கேப்டன்: நிலைமையை உணர்ந்த பாரதிராஜா கெஸ்ட் ஹவுஸுக்குள் சென்றுவிட்டாராம். விஜயகாந்த் என்னவென்று அருகில் இருப்பவர்களிடம் கேட்க; வாட்டாள் நாகராஜ் ஆட்கள் இப்படி சொல்கிறார்கள் என கூறியிருக்கிறார்கள். உடனே டென்ஷனான விஜயகாந்த் அவருடைய வாகனமான டாடா சுமோவிலிருந்து கைப்பிடியில் ரப்பர் சுத்திய இரும்பு ராடை எடுத்துக்கொண்டு வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வாட்டாள் நாகராஜ்னா பெரிய ஆளா நீ வாடா பார்த்துக்குவோம் என்று அந்த கூட்டத்தின் அருகில் ஒற்றை ஆளாக சென்றுவிட்டாராம்.

ஓடிய வாட்டாள் க்ரூப்: அவரோடு அவரது உதவியாளரும், ஓட்டுநரும் இரும்பு ராடை தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். விஜயகாந்த்தே நேரடியாக இப்படி கோதாவில் குதித்ததை பார்த்த வாட்டாளும் அவரது ஆட்களும் வந்த வழியிலேயே திரும்பி சென்றுவிட்டனராம். அதன் பிறகு மறுநாள் ஷூட்டிங்கை தொடங்கிய பாரதிராஜா பிரச்னை வந்துவிடுமோ என பயந்து கிளாப் போர்டிலிருந்து தமிழ்ச்செல்வன் பெயரை நீக்க சொல்லியிருக்கிறார்.
ஆனால் விஜயகாந்த்தோ அந்த பெயரை நீக்கிவிட்டு கிளாப் போர்டு அடித்தால் நான் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டாராம். பிறகு ஒருவழியாக அந்தப் பெயர் வைத்து கிளாப் போர்டை பாரதிராஜா அடித்த பிறகுதான் நடித்தாராம் விஜயகாந்த். இந்தத் தகவலை தமிழ்ச்செல்வன் படத்தின் கதையாசிரியர் ரத்னகுமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











