ஒரு லட்சத்தை வேண்டாம் என்றேன்.. விஜயகாந்த்தான் காரணம்.. ஓபனாக பேசிய ஆர்.கே.செல்வமணி
சென்னை: விஜயகாந்த் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அவர் உயிரோடு இருந்தபோது கலாய்த்தவர்கள்கூட அவர் உயிரிழந்தபோது கலங்கினார்கள். அந்த அளவுக்கு அவரது தாக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஏராளமான பேருக்கு உதவி செய்திருக்கும் அவர் பல இயக்குநர்களுக்கு முதல் பட வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார். அந்த இயக்குநர்களில் ஒருவர்தான் ஆர்.கே.செல்வமணி. விஜயகாந்த்தை வைத்து அவர் இயக்கிய புலன் விசாரணை படம்தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாடு முழுவதுமிலிருந்து அவரது இறப்புக்கு நேரில் சென்றனர். அவர் உயிரிழந்த பிறகு அவரது அருமைகளை பலரும் பேசிவருகிறார்கள். அந்தவகையில் புலன் விசாரணை படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி விஜயகாந்த் குறித்து பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்திருந்தார்.

செல்வமணியின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "புலன் விசாரணை படத்தை இயக்கி முடித்த பிறகு இந்தப் படம் ஓடவில்லை என்றால் நான் ஆஃபிஸில் இருக்கமாட்டேன். நீ இந்த ஆஃபிஸ் இருக்கும் ரோட்டுக்குக்கூட வந்துவிடக்கூடாது என்று விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் ராவுத்தர் சொன்னார். அவர் அப்படி சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. என்ன இந்த மாதிரி சொல்கிறாரே என்று எனக்கு தோன்றியது. அந்த சமயத்தில் எனக்கும் விஜயகாந்த்துக்கும்கூட மன வருத்தம் இருந்தது.
பார்க்கவிடவில்லை: படத்தின் ப்ரீமியர் ஷோ போடப்பட்டது. அப்போது எனது அப்பா, அம்மா, தங்கையை அழைத்து சென்றிருந்தேன். ஆனால் தியேட்டருக்குள் இடமில்லை என்று சொல்லி என்னை பாரக்க்கூடவிடவில்லை. அது எனக்கு மேற்கொண்டு கஷ்டமாகிவிட்டது. பொங்கலுக்குத்தான் புலன் விசாரணை ரிலீஸானது. அந்தப் பொங்கலுக்கு நான் ஊருக்கு செல்லவில்லை. பட ரிலீஸ் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டேன். விஜயகாந்த் ஆஃபிஸிலோ ஊருக்கு சென்றுவிட்டேன் என்று கூறிவிட்டேன். பட ரிலீஸுக்கு அடுத்த நாள் சென்று படத்தை பார்த்தேன்.
ஜிவி கொடுத்த அட்வான்ஸ்: படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் மணிரத்னத்தின் சகோதரர் ஜிவி என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார். அவர்தான் புலன் விசாரணை படத்தின் விநியோகஸ்தரும்கூட. அவரை சந்தித்தபோது நாம் சேர்ந்து படம் செய்யலாமா என்று கேட்டார். நானும் ஒத்துக்கொண்டேன். உடனே அவர் சம்பளம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். 50,000 ரூபாய் என்று குறிக்கும்வகையில் 50 என்றேன். அவர் 25 என்று கூறினார்.
வேண்டாம் என்றேன்: உடனே ஒரு செக்கை அட்வான்ஸாக கொடுத்தார். அதில் ஒரு லட்சம் என்று இருந்தது. அப்போ எனக்கு அவர் 25 லட்சம் ரூபாய் சம்பளம் தருகிறார் என்று உணர்ந்துகொண்டு சந்தோஷப்பட்டு வீட்டில் சொன்னேன். கொஞ்சம் செலவு செய்தேன். அந்த சமயத்தில் ராவுத்தர் வந்து, மீண்டும் விஜயகாந்த்தோடு ஒரு படம் செய்ய வேண்டும் என்று கேட்டார். நான் ஜிவியிடம் அட்வான்ஸ் வாங்கிய விஷயத்தை ராவுத்தரிடம் சொன்னேன். அவரோ அதெல்லாம் பார்த்துக்கலாம் என்று கூறினார். உடனே ஜிவியிடம் சென்று விஷயத்தை சொன்னேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு அவர் கொடுத்த செக்கை கொடுத்துவிட்டு விஜயகாந்த்தோடு சேர்ந்து செய்த படம்தான் கேப்டன் பிரபாகரன்" என்றார்.


Click it and Unblock the Notifications











