பிரியாணி வாசம் நல்லாருக்கே.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை.. கஞ்சா கருப்பு செய்த சம்பவம்
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT திரைப்படம் போதுமான வரவேற்பை பெறவில்லை. தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்துவருகிறார். இதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. படத்துடைய ஷூட்டிங் தாண்டிக்குடியில் நடந்துவருகிறது. வினோத்தின் இயக்கம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் சூழலில்; விஜய் பற்றிய சுவாரஸ்ய சம்பவத்தை இதில் பார்க்கலாம்.
விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான்கு படங்களுமே பெரிய வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் அந்தப் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டதாக அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தன. எனவே வியாபாரத்தை பொறுத்தவரை விஜய்யுடைய படங்கள் அதிக லாபத்தையே கொடுக்கின்றன. அவரும் 150 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறார் என்று கூறப்பட்டது.
அரசியல் பிரவேசம்: நிலைமை இப்படி இருக்க அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் அவர் இப்போது முழு நேர அரசியல்வாதி. பார்க்கப்போனால் கிடைக்கும் கேப்பில்தான் ஜனநாயகன் படத்தில் நடிக்க செல்கிறார்போல. அந்த அளவுக்கு பொது பிரச்னைகள், கட்சி கூட்டங்கள், தன்னுடைய எதிர் தரப்பை விடாமல் விமர்சிப்பது என படுபிஸியாக இருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பது கொஞ்சம் வருத்தத்தைத்தான் கொடுத்திருக்கிறது.
எப்படி இருக்கும் ஜனநாயகன்: வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தை அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். தற்கால இயக்குநர்களில் வினோத் முக்கியமானவர் ஆவார். மேலும் விஜய்யும் அரசியல் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதன் காரணமாக இந்தப் படம் அரசியல் ஜானரில் வருமா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை என்று வினோத் கூறினாலும்; நிச்சயம் அரசியல் படமாகத்தான் இருக்கும் என்பது பலரின் கருத்து.

சந்தானம் பேட்டி: இந்நிலையில் விஜய் பற்றி சந்தானம் பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. தனியார் சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் விஜய் குறித்து பேசுகையில், "தலைவா படத்தில் நானும் விஜய்யும் சேர்ந்து நடித்தோம். கதைபடி அமலா பால் ஒரு டான்சரை காதலிப்பது போல் காட்சி இருக்கும். அப்போது அந்த டான்சரை கிண்டல் செய்யும் விதமாக அவர் போட்ட ஸ்டெப்ஸ்களை கலாய்த்து விஜய்யிடம் பேசுவதுதான் காட்சி. அப்படி நான் பேசுகையில், 'உன் நடனமும்தான் சைக்கிள் வீல் பெண்ட் ஆன மாதிரி ஏன் வளைத்துக்கொண்டு ஆடுற' என சொன்னேன். அதனை கேட்ட அவர், நீ என் டான்ஸை கிண்டல் செய்ற மாதிரி இருக்கே என்று சிரித்தார். பிறகு அது நன்றாகத்தான் இருக்கிறது வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
கஞ்சா கருப்பு செய்த சம்பவம்: அதேபோல் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தபோது காரைக்குடியில் ஒரு ஹோட்டலில் நான், விஜய், கஞ்சா கருப்பு தங்கியிருந்தோம். நாங்கள் மேலே தங்கியிருந்தோம். கீழே யாரோ ஒரு பாய் வீட்டு திருமணம் நடந்தது. அப்போது பிரியாணி வாசம் வந்தது. விஜய்யோ, பிரியாணி வாசம் நன்றாக இருக்கே என்று எங்களிடம் சொன்னார். உடனே கஞ்சா கருப்போ, 'உங்களுக்கு பிரியாணி வேணுமா அவ்வளவுதானே' என்று சொல்லிவிட்டு சென்றார்.
அவர் சென்ற கொஞ்ச நேரத்திலேயே மேலே செம கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. ஏன் இவ்வளவு கூட்டம் என்று பார்க்க சென்றேன். அங்கு நின்றுகொண்டிருந்த கஞ்சா கருப்புவிடம், ஏன் இவ்வளவு கூட்டம் என கேட்டேன். அதற்கு அவரோ, 'இல்ல விஜய் அண்ணே பிரியாணி கேட்டாருனு போய் சொன்னேன்' என்று அசால்ட்டாக சொன்னார். பிறகுதான் தெரிந்தது விஜய்யை பார்க்க பலர் மேலே வந்துவிட்டார்கள் என்று. எனக்கு செம ஷாக்காகிவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











