விஜயகாந்த் மரணத்துக்கு வடிவேலு இதனால்தான் வரவில்லையா?.. சீக்ரெட்டை உடைத்த சரத்குமார்
சென்னை: தமிழ் சினிமாவில் பீக்கில் இருந்தபோது அரசியல் மேடை ஏறினார் வடிவேலு. விஜயகாந்த்தோடு ஏற்பட்ட மோதல் காரணமாக அவருக்கு எதிராக மேடை ஏறிய வடிவேலு; சரமாரியாக விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால் வடிவேலுவை விஜயகாந்த் பதிலுக்கு எதுவுமே விமர்சனம் செய்யவில்லை. அதேசமயம் அந்தத் தேர்தலில் வடிவேலு ஆதரவு கொடுத்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அவர் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டார். சூழல் இப்படி இருக்க விஜயகாந்த் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஆனால் அவருக்கு வடிவேலு அஞ்சலி செலுத்தாதது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் வடிவேலு தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டே இருந்து; தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். அவரது காமெடி இல்லாமல் ஒரு நாளைகூட கடக்க முடியாது என்ற நிலைமையும், அவர் இல்லாமல் ஒரு படம்கூட இல்லை என்ற நிலைமையும்தான் இருந்தது. அதன் காரணமாக தமிழர்களின் வாழ்வியலில் தவிர்க்க முடியாதவராக மாறிவிட்டார் அவர்.
சப்போர்ட் செய்த விஜயகாந்த்: வடிவேலு சினிமாவில் அறிமுகமான புதிதில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்தார். முக்கியமாக அவர் உள்ளே வந்தபோது கவுண்டமணியும், செந்திலும் உச்சத்தில் இருந்தார்கள். அதுமட்டுமின்றி வடிவேலுவுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டார்கள் என்ற பேச்சும் அடிக்கடி எழுந்ததுண்டு. உதாரணமாக சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்று கவுண்டமணி கண்டிஷன் போட்டதாகவும்; விஜயகாந்த்தான் வடிவேலுவுக்கு சப்போர்ட்டாக இருந்து அந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தார் என்றும் கூறப்படுவதுண்டு.

விஜயகாந்த்துடன் மோதல்: அதிலிருந்து விஜயகாந்த்தோடு வடிவேலு க்ளோஸாகத்தான் இருந்தார். தவசி உள்ளிட்ட படங்களில் எல்லாம் சேர்ந்து நடித்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் வடிவேலுவின் அலுவலகம் முன்பு விஜயகாந்த் தரப்பை சேர்ந்தவர்கள் காரை பார்க் செய்ததாகவும்; அப்போது வடிவேலு கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார். இதன் காரணமாக அவருக்கும், விஜயகாந்த்துக்கும் மோதல் போக்கு தொடங்கியதாகவும் ஒரு செய்தி உண்டு.
அரசியல் மேடையில் வடிவேலு: அந்த மோதல் போக்கு நாளாக நாளாக பெரிதாகிக்கொண்டே போனது. ஒருகட்டத்தில் வடிவேலு விஜயகாந்த்தை நேரடியாகவே விமர்சனம் செய்ய முடிவு செய்தார். அதன்படி 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுத்து விஜயகாந்த்தை சரமாரியாக தாக்கி பேசினார். ஆனால் விஜயகாந்த்தோ வடிவேலுவை பதிலுக்கு தாக்கி பேசாமலேயே இருந்தார். இது ஒருபக்கம் இருக்க அந்தத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து வடிவேலு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார்.
வராத வடிவேலு: இந்நிலையில் விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு திரையுலகை சேர்ந்த பெரும்பாலானோர் நேரில் வந்தும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். ஆனால் சிலர் வரவில்லை. அந்த சிலரில் வடிவேலுவும் ஒருவர். நேரில்தான் வர முடியவில்லை; வேறு வழியில் இரங்கலாவது தெரிவித்திருக்கலாம் என்று பலரும் பேசினார்கள்.
சரத்குமார் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சரத்குமார் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த அந்தப் பேட்டியில், "சில நேரங்களில் எல்லோரும் தவறு செய்வோம். நான் வடிவேலுவுக்கு சப்போர்ட் செய்யவில்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் கார் பார்க்கிங்கை வைத்து சிறிய பிரச்னைதான் வந்தது. அந்தப் பிரச்னையில் நீ பெரிய ஆளா இல்லை நான் பெரிய ஆளா என்ற ஈகோ வந்திருக்கலாம். பிறகு அரசியலிலும் விஜயகாந்த்துக்கு எதிராக பேச வேண்டிய சூழல் அமைந்துவிட்டது. விஜயகாந்த் உயிரிழந்தவுடன் உண்மையில் போகவேண்டும் என்று வடிவேலு நினைத்திருக்கலாம். ஆனால் அங்கு போனால் வேறு மாதிரி எதுவும் நடந்துவிடுமோ என்று எண்ணி; வீட்டுக்குள் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழகூட செய்திருக்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











