நான் நடிக்க சான்ஸ் கேட்டேனா?.. வடிவேலு அப்படி சொல்றது தப்பில்லையா?.. பொங்கி எழுந்த சரோஜா தேவி
சென்னை: கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை சரோஜா தேவி. கன்னடம், தெலுங்கு, தமிழ் என ஏராளமான மொழிகளில் பல படங்களில் நடித்து முதல் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர். அவருக்கு வயோதிகம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சூழல் இப்படி இருக்க அவர் இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலதில் 1938ஆம் ஆண்டு பிறந்தவர் சரோஜா தேவி. 17 வயதிலேயே சினிமாவில் நடிகையாக மகா கவி காளிதாஸ் திரைப்படத்தில் 1955ஆம் ஆண்டு அறிமுகமானார். முதல் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறிப்பாக சரோஜா தேவிக்கு நல்ல வெளிச்சம் கிடைத்தது. தொடர்ந்து அதே வருடத்தில் இரண்டு படங்கள் நடித்த அவர்; அடுத்தடுத்த வருடங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகையாக வலம் வந்தார். பிஸியான நடிகை என்று மட்டுமின்றி நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றார்.
தமிழில் ராணி: கன்னடத்தை தொடர்ந்து தமிழில் திருமணம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவருக்கு; ஆரம்பம் கொஞ்சம் தடுமாற்றமாகவெ இருந்தது. இடையே தெலுங்கு, கன்னடம் என மாறி மாறி நடித்துக்கொண்டிருந்த அவர்; தமிழிலும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தினார். அதனையடுத்து இங்கும் பம்பரமாக சுழல ஆரம்பித்த எம்ஜிஆர், சிவாஜி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

தூக்கி வைத்து கொண்டாடிய கோலிவுட் ரசிகர்கள்: தமிழில் அவருக்கு வரிசையாக படங்கள் குவிய ஆரம்பித்தன. அதன்படி பாக பிரிவினை, கல்யாண பரிசு, தாய் சொல்லை தட்டாதே, திருடாதே, படகோட்டி, புதிய பறவை, எங்கள் வீட்டு பிள்ளை, அன்பே வா, நாடோடி மன்னன் என ஏராளமான படங்களில் நடித்த அவரை; தமிழ் ரசிகர்கள், 'கன்னடத்து பைங்கிளி, நாட்டிய பேரொளி, அபிநய சரஸ்வதி' என்று கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
சாதனை படைத்த சரோஜா தேவி: தமிழில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆகியோருடன் தலா 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்த அவர்; இந்திய நடிகைகளிலேயே 160 படங்களில் தொடர்ச்சியாக ஹீரோயினாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசு வழங்கும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார். எந்த நடிகையிடம் கேட்டாலும் சரோஜா தேவி போல் வளர வேண்டும் என சொல்வார்கள். குறிப்பாக இந்தியாவிலேயே முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அவர்தான்.
உயிரிழந்த சரோஜா தேவி: வயது மூப்பு காரணமாக கேரக்டர் ரோல் செய்த சரோஜா தேவி தமிழில் கடைசியாக ஆதவன் படத்தில் நடித்திருந்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு சமீப காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதனால் பெங்களூரிவில் சிகிச்சையில் இருந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயது 87. அவரது உயிரிழப்புக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்திவருகிறார்கள். இந்நிலையில் ஆதவன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒன்றை பார்க்கலாம்.
காண்டான கன்னடத்து பைங்கிளி: அதாவது அப்படத்தில் 'மேலே போ பௌடரை நிறைய போட்டுக்கொண்டு ஒரு அம்மா இருக்கும்' என்ற வசனம் சரோஜா தேவியை குறிப்பது போன்று இருக்கும். அந்த வசனத்தை ரமேஷ் கண்ணாவோ, கே.எஸ்.ரவிக்குமாரோ வைக்கவில்லையாம். வடிவேலுவாகவே அந்த வசனத்தை சொல்ல; சரோஜா தேவிக்கு கோபம் உச்சக்கட்டமாக வந்துவிட்டதாம். உடனே ரமேஷ் கண்ணாவிடம் வந்த அவர், 'நான் உங்களிடம் நடிக்க சான்ஸ் கேட்டேனா?.. கூப்பிட்டு வைத்து இப்படி சொல்லலாமா?'.. வடிவேலு அந்த டயலாக்கை சொல்வது தப்புதானே.. நான் என்ன காமெடி ஆர்ட்டிஸ்ட்டா?.. நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?' என்று கேட்டுவிட்டாராம். பிறகு எப்படியோ அவரை சமாதானம் செய்தார்களாம். இந்தத் தகவலை ஒரு பத்திரிகையாளர் ஒருவருக்கு கொடுத்த பேட்டியில் ரமேஷ் கண்ணா பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











