சின்ன வயதிலேயே மடத்துக்கு போனவர்.. ரஜினிகாந்த் பற்றி சீக்ரெட் சொன்ன மூத்த சகோதரர்
சென்னை: ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். மேலும் இன்னும் பல வருடங்கள் வாழ்ந்து திரைத்துறையில் ஒரே சூப்பர் ஸ்டாராக வலம்வர வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர் குறித்து அவரது மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ரஜினி என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்திய அளவில் செலிபிரிட்டி முதல் சாமானியர்வரை ரஜினிகாந்த்தை ரசித்துக்கொண்டே இருப்பார்கள். அவரது ஸ்டைல், பேச்சு என அனைத்திலும் அனைவரையும் ஈர்த்து வைத்திருப்பவர். முக்கியமாக அவர் அமைதியாக அமர்ந்திருந்தாலே அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும் என்பதுதான் உண்மை. ஆனால் அவரிடம் கேட்டால் தான் சாதாரணமாக இருக்கிறேன்; அது உங்களுக்கு இப்படி தெரிகிறது என்று தன்னடக்கத்தோடு கூறுவார்.

ஆன்மீக ரஜினிகாந்த்: ரஜினியை பொறுத்தவரை அவருக்கு இல்லாத புகழோ, பணமோ கிடையாது. ஆனாலும் அவர் ஒரு ஆன்மீக மனநிலையில்தான் இருப்பார். தன்னுடைய கரியர் உச்சக்கட்டத்தில் இருந்தபோதே துறவறம் செல்ல தயார் ஆனவர் அவர். அந்த சமயத்தில் கே.பாலசந்தர், கமல் ஹாசன், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர்தான் அவரை அந்த எண்ணத்திலிருந்து மீட்டு கொண்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர் இன்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
சத்யநாராயண ராவ் பேச்சு: இந்நிலையில் ரஜினிகாந்த்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் படையப்பா படத்தின் வெற்றி விழாவில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த விழாவில் பேசிய அவர், "எனது தாய்க்கு மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு ரஜினிகாந்த் பிறந்தார். தாய்க்கு பிரசவ தேதி வந்ததும் எங்களுக்கு சப்போர்ட் செய்ய யாருமே இல்லை. நான் மட்டும் தாயை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தேன்.
ரஜினி பிறந்தார்: பிறகு ரஜினிகாந்த் சுக பிரசவத்தில் பிறந்தார். ஐந்து வயதில் ரஜினிகாத்தை ஆரம்ப பள்ளியில் சேர்த்தோம். ரஜினிக்கு பக்தி என்பது ரத்தத்திலேயே ஊறிவிட்டது. அந்தப் பள்ளியின் அருகே ஓசாய் மட் என்று ஒரு மடம் இருந்தது. அங்கு இருந்த சுவாமிகள் ரஜினிகாந்த் மீது ரொம்பவே பாசமாக இருப்பார். அந்த மடத்துக்கு ரஜினிகாந்த் அடிக்கடி செல்வார். சில நாட்கள் ரஜினி அங்கு செல்லவில்லை என்றால் தனது சிஷ்யர்களிடம் சொல்லி ரஜினியை வரவழைத்து பார்ப்பார் அந்த சுவாமிகள்.
9 வயதில்: பிறகு ரஜினிகாந்த்துக்கு 9 வயது ஆகும்போது அவர் பெங்களூருவில் இருக்கும் தபோவனத்தில் சேர்த்துவிட்டோம். பள்ளி முடிந்த பிறகு அங்கு சென்று பஜனை செய்து வேதங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதனை ரஜினிகாந்த் ஆர்வத்துடன் செய்தார். பிறகு ராமகிருஷ்ணா மடத்தில் ஒரு நாடகத்தில் நடித்தார். அதை அங்கிருந்தவர்கள் பார்த்து பாராட்டினார்கள். பிறகு வளர்ந்து நடத்துநர் பணி பார்த்த அவர்; சினிமா கல்லூரியில் சேர வேண்டும் என்று எங்களிடம் அனுமதி கேட்டார். நாங்களும் கொடுத்தோம். நண்பர்களும் உதவினார்கள். பிறகு இங்கு வந்து படித்து நடிகராகிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











