விஜய் இப்படி செய்வாருனு எதிர்பார்க்கல.. அவர் கட்சியில் இந்தப் பதவி வேண்டுமாம்.. தூது விட்ட சத்யராஜ்
சென்னை: ஜன நாயகன் படத்தில் நடித்துவரும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கியதிலிருந்து ஒருபக்கம் ஷூட்டிங் மறுபக்கம் அரசியல் மீட்டிங் என பிஸியாக இருக்கும் அவரை; 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்ல வைத்து சட்டப்பேரவைக்கு அனுப்ப அவரது தொண்டர்கள் முனைப்பு காட்டிவருகிறார்கள். விஜய்யும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இப்படிப்பட்ட சூழலில் சத்யராஜ் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். பல வருடங்களுக்கு முன்பே அவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது சில காரணங்களால் அவரால் வர முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் சில வருடங்களுக்கு முன்பு அவர் கட்சியை தொடங்கிவிட்டார். கட்சியை தொடங்கிய அவர் கண்டிப்பாக திமுகவுடன் இணக்கமாக செல்வார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அரசியல் களத்தில் அவரது செயல்பாடு வேறு மாதிரியாக இருக்கிறது.
திமுகதான் எதிரி: விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநாட்டில் பேசிய அவர்; திமுகவையும், பாஜகவையும் தனது அரசியல் எதிரியாக பிரகடனப்படுத்தினார். பாஜகவை எதிர்ப்பது சரி; எதற்காக இவர் திமுகவை எதிர்க்கிறார் என்றே பலரும் வியந்தார்கள். அதேசமயம் தந்தை பெரியாரை தங்கள் கட்சியின் கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தான் பேசும் மேடைகளில் எல்லாம் திமுகவை சரமாரியாக விமர்சிக்க தொடங்கியிருக்கிறார். அதற்கு திமுகவினரும் தங்களது பதிலடியை கொடுத்துவருகிறார்கள்.

மகளிர் தினத்திலும் குட்டு: நேற்றுக்கூட மகளிர் தினம் வாழ்த்து தெரிவித்தார் விஜய். அந்த வீடியோவில், 'நீங்கள், நாம் எல்லாம் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் இவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதானே தெரிகிறது. 2026ஆம் ஆண்டு தேர்தலில் நாம் எல்லோருமே சேர்ந்து இந்த அரசை வெளியேற்றுவோம் என இந்த மகளிர் தினத்தில் உறுதி ஏற்போம்' என்று கூறினார். இதுவரை ஆளும் அரசு என்று விமர்சித்துவந்த அவர்; நேற்றுதான் முதன்முறையாக திமுக அரசு என்று நேரடி தாக்குதலில் களமிறங்கியிருக்கிறார். இதன் காரணமாக இனி வரும் காலங்களில் திமுக Vs தவெக மோதல் காத்திரமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
ஜன நாயகனுக்கு சிக்கல்?: இது ஒருபக்கம் இருக்க விஜய் நடிக்கும் கடைசி படம்தான் ஜன நாயகன். இது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தொடர்ந்து திமுகவை அவர் விமர்சித்துவருவதால் இப்போது ஆட்சியில் இருக்கும் அந்தக் கட்சியால் ஜன நாயகன் படத்தின் ரிலீஸுக்கு ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்றும் தவெகவில் ஒருதரப்பினர் அஞ்சுகிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் விட்டுவிடமாட்டோம் என்று அக்கட்சியின் தொண்டர்கள் மறுபக்கம் முஷ்டி முறுக்கவும் செய்கிறார்கள்.

சத்யராஜ் பேட்டி: இந்நிலையில் பெரியாரிய சிந்தனையாளரும், நடிகருமான சத்யராஜ் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜய்யை எனக்கு செந்தூரப்பாண்டி படத்துக்கு முன்னரிலிருந்தே தெரியும். ஏனெனில் அவரது வீட்டில் நிறைய ஷூட்டிங் நடக்கும். அவர் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு அவரை தெரியும். இவ்வளவு தூரம் அவர் மேடையில் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இந்தப் பதவிதான் வேண்டும்: ரொம்பவே நம்பிக்கையோடு பேசுகிறார். தங்களின் கொள்கை தலைவர் பெரியார் என்று அவர் சொன்னது எங்களுக்கெல்லாம் உண்மையிலேயே ரொம்பவே சந்தோஷம். அவர் நன்றாக வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவரது கட்சியில் எனக்கு ஏதேனும் பதவி கொடுக்கிறேன் வாருங்கள் என்று என்னை கூப்பிட்டால்; எனக்கு பெரியாரின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வேண்டும் என்று சொல்லி கேட்டு வாங்கிக்கொள்வேன். விஜய் நம்ம ஆளுதானே" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு சத்யராஜ் தூதுவிடுகிறாரோ என்று கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











