இயக்குநரை பங்கமாக கலாய்த்த கவுண்டமணி.. யாரா இருக்கும்?.. ஆராய்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: கவுண்டமணி தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் எந்த காமெடி சேனலை பார்த்தாலும், எந்த மீமை பார்த்தாலும் அதில் கவுண்டமணி இன்னும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக கவுண்டமணிக்கு எப்போதும் அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். அவருக்கென்று ஹிட்டான காம்போ சில இருக்கின்றன. அந்த காம்போவில் ஒன்றுதான் சத்யராஜ் - கவுண்டமணி காம்போ. இப்போது கவுண்டமணி குறித்து சத்யராஜ் பேசியிருக்கும் விஷயம் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
கவுண்டமணி தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் யாராலும் மறக்க முடியாதது, மறுக்க முடியாதது. அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்பதுதான் உண்மை. அவர் அடிக்கும் ஒவ்வொரு கவுண்ட்டரும் ரகளையாக இருப்பவை. இதனாலேயே இன்றளவும் அவர் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இப்போது அவர் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துவருகிறார். மீண்டும் அவர் நடிக்க வந்திருப்பதால் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

செம காம்போ: எவர்க்ரீன் காமெடி காம்போ கவுண்டமணியும், செந்திலும் ஆவர். பல நூறு படங்களில் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கின்றனர். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் என அவர்கள் அதகளம் செய்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் பெரிது. ஒருகட்டத்தில் கவுண்டமணி இல்லாமல் செந்தில் இல்லை செந்தில் இல்லாமல் கவுண்டமணி இல்லை என்ற நிலையே திரைத்துறையில் நீடித்தது. அந்த அளவுக்கு இருவரும் நெருங்கி பழகினார்கள். கவுண்டமணி நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தபோது மீண்டும் நடிக்க வர வேண்டுமென்று அவருக்கு நீண்ட கடிதத்தையும் செந்தில் எழுதியது குறிப்பிடத்தக்கது.
சத்யராஜ் - கவுண்டமணி காம்போ: கவுண்டமணி - செந்தில் காம்போ எப்படி எவர் க்ரீனோ அதேபோல்தான் கவுண்டமணி - சத்யராஜ் காம்போ. இருவருமே கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் என்னவோ நக்கலும், நையாண்டியும் இயற்கையாகவே அவர்களுக்கு வாய்த்திருக்கிறதுபோல என்று ரசிகர்கள் கூறுவார்கள். இருவரும் இணைந்து நடித்த பிரம்மா, முறைமாமன், நடிகன் என ஏராளமான படங்களின் காமெடி அட்டகாசமாக இருக்கும். அதிலும் நடிகன் படத்தில் இருவரும் இணைந்து அடித்த லூட்டிக்கு அளவே இல்லை.
சத்யராஜ் பேட்டி: இந்நிலையில் சத்யராஜ் அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், “நானும் கவுண்டமணியும் ஒரு படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு இயக்குநர் நெஞ்சுவரைக்கும் பேண்ட் அணிந்தபடி வந்தார். உடனே அவரை பார்த்த கவுண்டமணியோ, இவருக்கு சட்டைக்கு மூன்று மீட்டருக்கு துணி எடுத்தால் போதும்; பேண்ட்டுக்குத்தான் 6 மீட்டருக்கு துணி எடுக்கணும் என்று சொல்லிவிட்டார்.
நகர்ந்து சென்றுவிட்டேன்: கவுண்டமணி அப்படி சொன்னது எனக்கு பயங்கரமாக சிரிப்பை வரவழைத்துவிட்டது. அந்த சமயத்தில் அந்த இயக்குநரும் அருகே வந்துவிட்டார். சிரிப்பதை பார்த்தால் தவறாக எடுத்துக்கொள்வாரே என்று அங்கிருந்து நைஸாக நகர்ந்து வந்துவிட்டேன். கவுண்டமணி இப்படித்தான். யாராக இருந்தாலும் கவுண்ட்டர் அடித்துவிடுவார்” என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கவுண்டமணி கலாய்த்த இயக்குநர் யாராக இருப்பார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











