விஜய்க்கு யாருமே இல்லாத சூழல்.. அவர் ஒரு கடவுளின் குழந்தை.. ஸ்கூல் டீச்சர் சொன்ன சீக்ரெட்
சென்னை: விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர்; அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார் விஜய். இப்படி அடுத்தடுத்த பிஸி ஷெட்யூலில் இருக்கும் விஜய்க்கு ஒரு தங்கை இருந்தார். அவர் சிறு வயதிலேயே உயிரிழந்துவிட்டார். இந்தச் சூழலில் விஜய் குறித்து அவரது ஸ்கூல் டீச்சர் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமான இயக்குநராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய். இவருக்கு வித்யா என்ற மகளும் இருந்தார். விஜய் இப்போது இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அவரது தங்கை வித்யா குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. சிறிய வயதிலேயே வித்யா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கை மீது பாசம்: விஜய்க்கு வித்யா மீது எப்போதுமே தனித்த பாசம் உண்டு. அதன் காரணமாக வித்யா உயிரிழந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாகத்தான் கல கலவென்று இருந்த விஜய் வித்யா உயிரிழப்புக்கு பிறகு ரொம்பவே அமைதியாகிவிட்டார் என்று பலரும் கூறுவதுண்டு. வித்யா மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தாலும் அதுகுறித்து பொது வெளிகளில் விஜய் வாய் திறந்து பேசியதில்லை.
மீள்வது கடினம்: வித்யா தன்னுடைய மூன்றரை வயதில் உயிரிழந்தார். வித்யா குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்த விஜய், , "எனது வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் அது என் தங்கை வித்யாவின் உயிரிழப்புதான். அதிலிருந்து மீள்வது கடினம். ஆனால் ஒன்று எனது தங்கையை நாங்கள் புதைக்கவில்லை. விதைத்திருக்கிறோம். அதனால்தான் எனக்கு இவ்வளவு தங்கைகள் இருக்கிறார்கள்" என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
ஸ்கூல் டீச்சர்: சூழல் இப்படி இருக்க விஜய்யின் ஸ்கூல் டீச்சர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஐந்தாம் வகுப்பிலிருந்து விஜய் எங்கள் பள்ளியில்தான் படித்தார். எல்லா குழந்தைகளை போல் அவர் சேட்டையெல்லாம் செய்யமாட்டார். அவர் எந்த சூழ்நிலையும் சக மாணவரை துன்புறுத்தியது கிடிஅயாது. யாரையுமே அவர் தொந்தரவு செய்தது கிடையாது. அதற்காகவே அவரை கடவுளின் குழந்தை என்று அழைப்போம். விஜய் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அவரது தங்கை வித்யா எல்கேஜி படித்துக்கொண்டிருந்தார்.
பட்டாம்பூச்சி: வித்யாவை நாங்கள் பட்டாம்பூச்சி என்று அழைப்போம். அவரும் அவரது அண்ணன் விஜய்யும் பாசமாக இருப்பார்கள். விஜய் ரொம்ப நன்றாகவே கிட்டார் வாசிப்பார். நன்றாக ஓவியங்கள் வரைவார். அந்த சமயத்தில்தான் வித்யா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதற்கு பிறகு விஜய்யோ போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்திவிட்டார். கிட்டார் வாசிப்பது, ஓவியம் வரைவது என அனைத்தையும் அப்படியே ஓரங்கட்டிவிட்டார்.
யாரும் இல்லாத சூழல் நிலை: எஸ்.ஏ.சந்திரசேகர் அப்போது சினிமாவில் பீக்கில் இருந்தார். அந்த சமயத்தில் அவரால் தன்னுடைய தொழிலில்தான் முழுக்க முழுக்க பிஸியாக இருக்க முடிந்தது. ஷோபாவும் மகளை இழந்த வருத்தத்தில் முடங்கிப்போய்விட்டார். இதனால் விஜய்க்கு யாருமே இல்லாத ஒரு சூழ்நிலை உருவானது. அதனை எப்படிய கையாள வேண்டும் என்று விஜய்க்கு தெரியவில்லை. அப்படியே அமைதியாகிவிட்டார். அவர் படிப்பில் சுட்டியெல்லாம் கிடையாது. ஆனால் ஒரு விஷயத்தை செய்தால் முழு கவனத்துடன் செய்வார்" என்றார்.


Click it and Unblock the Notifications











