Sivaji Birthday: "சிவாஜி சிங்கம் மாதிரி... அவரை அப்படியே விட்டுட்டோம்..” கமல் சொன்னது என்ன?
சென்னை: தமிழ்த் திரையுலகில் மாபெரும் ஆளுமையாக இருந்து மறைந்தவர் நடிகர் செவாலியே சிவாஜி.
பராசக்தி முதல் படையப்பா வரை சிவாஜி நடித்த படங்கள் அனைத்தும் நடிப்பிற்கான தனி இலக்கணத்தை கற்றுக் கொடுத்தது.

சிவாஜியின் 95வது பிறந்தநாளான இன்று அவருக்கு திரை கலைஞர்கள், ரசிகர்கள் உட்பட பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிவாஜியின் நடிப்பு குறித்து கமல் வேதனையுடன் பேசியதை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சிவாஜி சிங்கம் மாதிரி
1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த சிவாஜி கணேசன், 1952ல் பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேடை நாடகங்களில் நடித்த அனுபவத்துடன், சினிமாவில் களமிறங்கிய சிவாஜி, தனது நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்தார். சிங்கத்தின் கர்ஜனையும் மழலையின் கரிசனமும் ஒருசேரத் திரையில் காட்ட முடியும் என்பதற்கு சிவாஜியை விட ஒரு சிறந்த கலைஞனை உதாரணமாக கூற முடியாது.

சிவபெருமானுக்கும், அப்பருக்கும் உருவம் கொடுத்து 20ம் நூற்றாண்டில் உருவாகி வந்த சைவ-தமிழ் எழுச்சி மரபிற்கு அடையாளமாக இருந்தார். அதேநேரம் கலைஞரின் வசனங்களை பேசி தமிழ் கலாச்சார மீட்டுருவாக்கத்தின் முகமாகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி போன்ற பல ஆளுமைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது சிவாஜியின் நடிப்பும் அவரது முகமும் தான்.
ராஜபார்ட் ரங்கதுரை, தில்லானா மோகனாம்பாள், பாசமலர், முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற் படங்கள் சிவாஜியின் நடிப்பில் இருந்த செழுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். முக்கியமாக முதல் மரியாதை, தேவர் மகன் இரண்டுமே சிவாஜியின் கேரியரில் தனித்துவமான திரை காவியங்கள் என்பது, அவரது நடிப்பை ரசித்தவர்களுக்கு புரியும். தேவர் மகன் படத்தில் நடித்த பின்னர் சிவாஜி குறித்து கமல் பேசியதை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

"ஒரு சிங்கத்துக்கு சைவ சாப்பாடு போட்டு கொன்றுவிட்டோம்" என சிவாஜி குறித்து கமல் பேசியிருந்தார். அதாவது தேவர் மகன் படத்தில் சிவாஜியின் பெரிய தேவர் பாத்திரமும், அதில் அவர் நடித்ததும் அதுவரை யாரும் பார்த்திடாதது. அதுவரை மென்மையான பாத்திரங்களில் மட்டுமே நடித்து கவனம் ஈர்த்த சிவாஜி, தேவர் மகனில் மிரட்டியிருப்பார். இதனை குறிப்பிட்டே கமல் அவ்வாறு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உச்ச நட்சத்திரம் என்ற அடையாளத்தை இழந்த பிறகும் கூட திரையுலகில் சிவாஜி மிகப்பெரிய சக்கர்வர்த்தியாகவே வலம் வந்தார். சிவாஜியின் தோரணையும் அந்த கம்பீரமும் குறையவே இல்லை. அதேபோல் அசைக்க முடியாத உச்சத்தில் இருந்த ரஜினியும் கமலும் சிவாஜியின் முன்னால் இறுதிவரை வாலை சுருட்டிக்கொண்டு நிற்பார்கள். அப்படியான மரியாதை இனி சிவாஜியை தவிர வேறு எந்த நடிகர்களுக்கும் கிடைக்காது என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications











