Sivaji Ganesan: ”அந்த குதிரைக்கு ஏதும் ஆகிடாதில்ல”... சொந்த மகன் பிரபுவையே கலாய்த்த சிவாஜி கணேசன்!
சென்னை: தமிழ்த் திரையுலகிற்கு பெருமை தேடித் தந்த நடிகர்களில் மிக முக்கியமானவர் சிவாஜி கணேசன்.
நடிகர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட சிவாஜி, கடந்த 2001ம் ஆண்டு காலமானார்.
சிவாஜியின் 22வது நினைவு தினமான இன்று அவரது ரசிகர்கள் ஏராளமான சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிப்பதில் மட்டுமல்ல தனது சொந்த மகன் பிரபுவை கலாய்ப்பதிலும் சிவாஜிக்கு ஆர்வம் அதிகம் என தற்போது தெரியவந்துள்ளது.

பிரபுவை கலாய்த்த சிவாஜி: தமிழ்த் திரையுலகின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22வது நினைவுதினம் இன்று. ஹாலிவுட்டுக்கே நடிப்பை சொல்லிக் கொடுத்த கலைகளின் பிதாமகன் என சிவாஜியை ரசிகர்கள் கொண்டாடிய நாட்கள் உண்டு. அது இன்றும் தொடர்வது தான் அவரது வாழ்நாள் சாதனையாகும். கடந்த 2001ம் ஆண்டு இதேநாளில் மறைந்த சிவாஜியின் நினைவு தினத்தை ரசிகர்கள் அனுசரித்து வருகின்றனர்.
பராசக்தியில் அறிமுகமான சிவாஜி சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வுப்பெற்றார். அவரது மகன் பிரபுவும் தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்ததோடு, இப்போதும் லீட் ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அவரது மகன் விக்ரம் பிரபுவும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபு முதன்முறையாக நடிக்கத் தொடங்கியது முதல் பல படங்களில் அவரது நடிப்பை சிவாஜி ஜாலியாக கலாய்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம்.
சொந்த மகனாக இருந்தாலும் பிரபுவை கலாய்ப்பதில் சிவாஜிக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. சிவாஜி முன்னணி ஹீரோவாக கலக்கி வந்த நேரம், பிரபுவும் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு நக்கலாக பதில் கூறிய சிவாஜி, "நடிக்குறதெல்லாம் அவ்வளவு ஈஸின்னு நினைச்சிட்டியாடா" எனக் கேட்டுள்ளார். அதேபோல், "ரஜினி, கமல்ஹாசன்-லாம் இருக்காங்க, அவங்கக் கூட போட்டிப் போட முடியுமான்னு பார்த்துக்கோப்பா" எனக் கூறியுள்ளார்.
பிரபு முன்னணி நடிகராக மாறியதும் மணிரத்னம் இயக்கிய அக்னிநட்சத்திரம் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்தார். பிரபுவின் கேரியரில் மிக முக்கியமான படமாக இது அமைந்தது. கார்த்தியுடன் அடிக்கடி மோதிக்கொள்ளும் செம்ம மாஸ்ஸான கேரக்டர் அது. இந்த போலீஸ் கெட்டப்புக்காக உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார் மணிரத்னம்.
இதற்காக தினமும் குதிரையேறும் பயிற்சி எடுத்துள்ளார் பிரபு. தினமும் அதிகாலை பிரபு வீட்டில் இருந்து வெளியே செல்வதைப் பார்த்த சிவாஜி, "என்னப்பா துரை... தினமும் காலங்காத்தால அப்படி எங்கதான் போய்ட்டு வாரீக" எனக் கேட்டுள்ளார். அதற்கு பிரபுவோ குதிரை பயிற்சி எடுக்க என சொன்னதும், "க்ளூக்" என சிரித்துவிட்டாராம் சிவாஜி. அதோடு இல்லாமல், "அதுசரி அந்த குதிரைக்கு ஏதும் ஆகிடாதுல்ல" என பிரபுவின் எடையை குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.
இதனை டூயட் படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்புக்குச் சென்றிருந்த வைரமுத்துவிடம் கூறியுள்ளார் பிரபு. அதேநேரம் டூயட் படத்திற்காக பிரபுவின் உடல் எடையை வைத்து ஒரு பாடல் எழுத வேண்டும் என ஏஆர் ரஹ்மான் கூறியுள்ளார். விடுவாரா வைரமுத்து, பிரபு சொன்னதை வைத்து அவர் எழுதிய "கத்திரிக்கா கத்திரிக்கா" என்ற பாடலில் சிவாஜி கிண்டல் செய்ததை கவித்துவமாக மாற்றிவிட்டாராம்.
"கத்திரிக்கா கத்திரிக்கா" என்ற பாடலில் "குண்டான உடம்பு இழைக்க குதிரை சவாரி செஞ்சா குதிரை தான் இழைச்சு போச்சாம் சொன்னாங்க வீட்டில்" என்ற வரியை சேர்த்து பிரபுவுக்கே சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் வைரமுத்து. இப்படி பல முறை பிரபுவை சிவாஜி கலாய்த்துள்ளது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











