யாரு டா அந்த அட்லீ.. ஓவர் பில்டப் கொடுக்காதீங்க.. சிவகார்த்திகேயனிடம் கடுப்பான ஜிவி பிரகாஷ்
சென்னை: கோலிவுட்டின் ஃபேமஸ் இயக்குநர்களில் ஒருவராக இருந்த அட்லீ இப்போது இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக இருக்கிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் வட மாநிலங்களில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கமல் ஹாசனையும், சல்மான் கானையும் வைத்தும்கூட ஒரு படம் இயக்க வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ தமிழில் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்துவிட்டார். அவர் படங்களை காப்பி அடிக்கிறார் என்று ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்தாலும் அவரது மேக்கிங்கும், சீன்களும் நன்றாகவே இருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இந்தச் சூழலில் முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

கெத்து காட்டிய அட்லீ: பொதுவாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட் செல்லும் இயக்குநர்கள் அங்கிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்தே பணியாற்றுவார்கள். ஆனால் அட்லீயோ முழுக்க முழுக்க தொழில்நுட்ப கலைஞர்களை இங்கிருந்து அழைத்து சென்றார். அழைத்து சென்றது மட்டுமின்றி அவர்களிடமிருந்து சிறந்த வேலையை வாங்கியிருக்கிறார் என்றும் பலர் கூறினர். அனிருத்கூட இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆகி அடுத்தடுத்து சில ஹிந்தி படங்களில் கமிட்டாகியிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மெகா வசூல்: ஷாருக்கானின் நடிப்பில் ஜவானுக்கு முன்னதாக வெளியான பதான் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும் என ஷாருக்கின் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உலகம் முழுவதும் 1125 கோடி ரூபாயை ஜவான் படம் வசூலித்திருக்கிறது. இது வேறு எந்த இந்திய படமும் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. ஜவான் படத்தின் வெற்றி காரணமாக உற்சாகமடைந்த ஷாருக் மீண்டும் அட்லியூடன் இணைந்து படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.
தமிழ்நாட்டில் டல்தான்: வசூல் ரீதியாக ஜவான் படம் சிக்சர் அடித்தாலும் விமர்சன ரீதியாக அவுட் ஆனது. அதிலும் தமிழ் ரசிகர்கள் ஜவான் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். எப்போதும் வேறு படங்களிலிருந்து அட்லீ காப்பி அடிப்பார் ஆனால் இதில் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்தே காப்பி அடித்திருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இருந்தாலும் அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. இப்போது பேபி ஜான் என்ற படத்தையும் தயாரித்துவருகிறார். அது தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படம்: சூழல் இப்படி இருக்க அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தையும், கமல் ஹாசன், சல்மான் கானை வைத்து ஒரு படத்தையும் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இந்தச் சூழலில் அட்லீ குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கடுப்பான ஜிவி: அமரன் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "ஜிவி பிரகாஷை எனக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். ஒருமுறை நானும், சதீஷும் ஜிவியிடம் சென்று எங்கள் நண்பர் அட்லீ என்று ஒருவர் பயங்கரமாக ஒரு கதை செய்திருக்கிறார் கேட்டுப்பாருங்கள் என்று சொன்னோம். சரி என்று சொன்னார். அடுத்த நாள் சென்று ஒரு சீனை பயங்கரமாக செய்திருக்கிறார் என்றோம். சரி என்றார். அடுத்த நாள் சென்று இன்றைக்கு காமெடி சீனும் செமயாக வந்திருக்கிறது. நாங்கள் ஒர்க் செய்திருக்கிறோம் என்று சொன்னோம். அப்போது கடுப்பான ஜிவி எங்களிடம், 'டேய் யாரு டா அந்த அட்லீ. கூட்டிட்டு வாங்கடா கதை கேட்கிறேன். ரொம்ப பில்டப் கொடுக்காதீங்க' என்று சொன்னார். பிறகு அட்லீ ஜிவியிடம் கதை சொன்னார். இரண்டு பேரும் படம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











