நான் தப்பு பண்ணிட்டேன் சிவகார்த்திகேயன்.. ஃபீல் செய்த தனுஷ்.. இப்படி வேற நடந்திருக்கா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் உலகளவில் 350 கோடி ரூபாய் அளவில் வசூல் சாதனை செய்தது. அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் தனுஷ் தன்னிடம் ஒரு விஷயத்துக்காக ஃபீல் செய்தார் என்று அவர் ஒரு பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார்.
சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு விஜய் அவார்ட்ஸ் விழாவை தொகுத்து வழங்கியவர் சிவகார்த்திகேயன். அப்போது அவரை கவனித்த தனுஷ் தனது முன்னாள் மனைவி இயக்கி தான் ஹீரோவாக நடித்த 3 படத்தில் ஒரு ரோல் கொடுத்தார். அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அவர். அதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் மெரீனா, எழில் இயக்கத்தில் மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் எஸ்கே.

அசுர வளர்ச்சி: தொடர்ந்து ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம் மெகா ஹிட்டானதை அடுத்து ரஜினிமுருகன் படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக குறுகிய காலத்துக்குள்ளாகவே டாப் 10 ஹீரோக்களுக்குள் வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். அதேபோல் நடனம், நடிப்பு என அத்தனை ஏரியாக்களிலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார் அவர்.
100 கோடி க்ளப்: சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் திரைப்படம் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட டாக்டர் நூறு கோடி க்ளப்பில் இணைந்தது. அடுத்ததாக அவர் நடித்த டான் திரைப்படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. தொடர்ந்து நடித்த பிரின்ஸ் திரைப்படம் தோல்வியடைந்தாலும் அடுத்ததாக வெளியான மாவீரன், அயலான் ஆகிய திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.
அமரன் மெகா ஹிட்: மாவீரன், அயலான், டான், டாக்டர் ஆகிய படங்களைவிடவும் சிவகார்த்திகேயனை உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவானது. அந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரிய ரெஸ்பான்ஸை பெற்று 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. அடுத்ததாக சுதா கொங்கரா, சிபி சக்கரவர்த்தி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோரின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் பேட்டி: இந்நிலையில் தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “விஜய் அவார்ட்ஸில் என்னை கவனித்துவிட்டு தனுஷ் சார் ஆஃபிஸிலிருந்து ஃபோன் செய்தார்கள். அங்கு சென்ற பிறகு தனுஷ் என்னிடம் 3 படத்தில் உங்களுக்கு ஒரு ரோல் வைத்திருக்கிறேன். நீங்கள் நடியுங்கள் என்று சொல்லி நடிக்க வைத்தார். படம் ரிலீஸான பிறகு எனது நடிப்பை பார்த்துவிட்டு அவர் என்னிடம், 'நான் உங்களுக்கு சின்ன ரோல் கொடுத்து தவறு செய்துவிட்டேன். இப்படி பண்ணியிருக்கக்கூடாது’ என்று ஃபீல் செய்தார். அதேபோல் நீங்கள் எனது கம்பெனியில் ஒரு படம் நடியுங்கள் என்று சொல்லி எதிர்நீச்சல் படத்தின் வாய்ப்பை கொடுத்தார்” என்றார்.


Click it and Unblock the Notifications











